சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் மூலம் எல்லைக் கிராமங்கள் முழுமையாக மேம்படுத்தப்படும் - மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ்

Posted On: 05 MAR 2023 4:45PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் மூலம் எல்லைக் கிராமங்கள் முழுமையாக மேம்படுத்தப்பட்டு வலிமையான  எல்லைக் கிராமங்கள் வளர்ச்சியடையும் என்று மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் திரு.பூபேந்தர் யாதவ் கூறியுள்ளார். துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக 1400 எல்லையோர கிராமங்கள் கண்டறியப்பட்டு மத்திய அமைச்சர்கள் எல்லையோர கிராமங்களில் ஓர்  இரவு தங்கி அங்குள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு அவற்றுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுப்பார்கள்.

துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக 2023 மார்ச் 3-4   இரண்டு நாள் பயணமாக லடாக்கிற்கு மத்திய அமைச்சர் பயணம் மேற்கொண்டார். அங்கு அவர் எல்லை கிராமங்களான சாகா பாஸ்சுர், ரெசாங்-லா, சுஷுல் உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்றிருந்தார்.

 

சாங்தாங் கிராமத்தில், சாகா பாஸ்சுர் பகுதியில் லடாக்கில் பெண்களின் பாரம்பரிய நடனமான ஜப்ரோ நடனத்துடன் மத்திய அமைச்சருக்குப் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. கூடாரங்களில் வாழ்ந்து சிறந்த பஷ்மினா கம்பளி தயாரிக்கும் நாடோடிகளான ரெபோ பழங்குடியினருடன்  அமைச்சர் உரையாடினார். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்துக் கேட்டறிந்தார். மத்திய அரசின் திட்டங்களின் பலன்கள் அவர்களை வந்தடையும் என மக்களுக்கு உறுதியளித்தார்.

 

பல்வேறு கிராமங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஆயர் சமூகத்தினர் அடங்கிய கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர், லடாக் யூனியன் பிரதேசம் உருவான பிறகு பல சாலைத் திட்டங்கள் முடிக்கப்பட்டதை சுட்டிக் காட்டினார். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வேலைகள் விரைவாகக் கண்காணிக்கப்பட்டு வேலைகள் நடைபெற்று வருவதையும் கூறினார்.  லடாக்கில் பசுமை ஹைட்ரஜன் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் லடாக்கில் சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க சூரிய மின்சக்தி திட்டங்களை ஏற்படுத்த ரூ.27,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் திரு. பூபேந்தர் யாதவ் கூறினார்.

 

ரெசாங்-லாவில், திரு. யாதவ், ரெசாங்-லா போர் நினைவிடத்திற்குச் சென்று நாட்டைக் காக்கத் தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.

 

இந்திய-சீனா எல்லைக்கு அருகிலுள்ள சுஷுல் என்ற கிராமத்தில் மத்திய அமைச்சர் மக்களுடன் உரையாடி எல்லைக் கிராமங்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்று உறுதியளித்தார்.

பின்னர் மத்திய அமைச்சர் லடாக் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநரை லேவில் சந்தித்தார். அங்கு இருவரும் லடாக்கின் நிலையான வளர்ச்சி தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவான விவாதங்களை மேற்கொண்டனர்.

 

இந்தத் தகவலை ஆங்கிலத்தில் படிக்க:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1904394

 

***

AP/CJL/DL



(Release ID: 1904441) Visitor Counter : 130