கலாசாரத்துறை அமைச்சகம்

மத்தியப்பிரதேசத்தின் கஜுரஹோவில் 2023 பிப்ரவரி 22 முதல் 25 வரை முதலாவது ஜி20 கலாச்சாரப் பணிக் குழுவின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Posted On: 15 FEB 2023 7:06PM by PIB Chennai

மத்தியப்பிரதேசத்தின் கஜுரஹோவில் 2023 பிப்ரவரி 22 முதல் 25 வரை முதலாவது ஜி20 கலாச்சாரப் பணிக் குழுவின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வரவிருக்கும் முதலாவது ஜி20 கலாச்சாரப் பணிக் குழுக் கூட்டம் பற்றி கலாச்சாரத் துறை செயலாளர் திரு கோவிந்த மோகன்  செய்தியாளர்களிடம் கூறுகையில், பன்முக, வளமான கலாச்சாரத்தை இந்தியா கொண்டுள்ளது என்றும், கலாச்சார நிகழ்வுகள் அவற்றுக்கே உரிய தனிப்பட்ட முக்கியத்துவத்தை பெற்றிருக்கும் என்றும் கூறினார்.   

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவ மையப் பொருளான வசுதைவ குடும்பகம் என்பதற்கு ஏற்ப, ஆர்வத்தைத் தூண்டுகின்ற கலாச்சார நிகழ்வுகள் இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.  நீடிக்கவல்ல வாழ்க்கை முறைக்கான இயக்கமான சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை என்ற கருத்தின் அடிப்படையில் இந்த கலாச்சாரப் பணிக் குழுக் கூட்டம் அமைந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கஜுரஹோ, புவனேஸ்வர், ஹம்பி ஆகிய இடங்களில் முதல் மூன்று  கூட்டங்கள் நடைபெறும் என்று தெரிவித்த திரு கோவிந்த் மோகன் நான்காவதான  நிறைவு கூட்டம் நடைபெறும் இடம் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்றார்.

கஜுரஹோவில் நடைபெறும் கூட்டத்தையொட்டி, மகராஜா சத்ரசால் மாநாட்டு மையத்தில்  கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும், இதனை மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி தொடங்கி வைப்பார் என்றும் மத்தியப்பிரதேச முதலமைச்சர் திரு சிவராஜ் சௌகான் உடனிருப்பார் என்றும் அவர் கூறினார்.  கஜுரஹோ நாட்டிய திருவிழா கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் இந்தப் பணிக்குழுக் கூட்டத்திற்கு வரும் பிரதிநிதிகள், யுனெஸ்கோ பாரம்பரிய இடங்களான மேற்குப்பகுதி கோயில்களுக்கும் பயணம் மேற்கொள்வார்கள் என்று அவர் தெரிவித்தார்.  இந்தக்கூட்டத்தில் 125 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று அவர் கூறினார். 

கலாச்சார சொத்துக்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு; நீடிக்கவல்ல எதிர்காலத்திற்கான உயிரோட்டமுள்ள பாரம்பரியத்தை உருவாக்குதல்; கலாச்சாரம் மற்றும் படைப்பு சார்ந்த  தொழில்களை மேம்படுத்துதல்; கலாச்சார பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கான டிஜிட்டல் தொழில்நுட்பங்களை ஊக்கப்படுத்துதல் ஆகியவை இந்தியாவின் கலாச்சாரப் பணிக் குழுக் கூட்டத்தின் நான்கு முக்கிய அம்சங்களாக இருக்கும் என்று திரு கோவிந்த் மோகன் தெரிவித்தார்.

இவைதவிர, ஓராண்டு காலத்திற்கு  கண்காட்சிகள், உரைக்கோவைகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள், நூல் வெளியீடுகள் போன்ற கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெறும் என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்... https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1899613

***

AP/SMB/PK/GK



(Release ID: 1899643) Visitor Counter : 188