பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

மகாராஷ்டிராவின் மரோலில் அல்ஜமியா-துஸ்-சைஃபியாவின் புதிய வளாகத் திறப்பு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

Posted On: 10 FEB 2023 8:22PM by PIB Chennai

புனித சையத்னா முஃபதால் அவர்கள், மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அவர்கள், துணை முதலமைச்சர் தேவேந்திரா  அவர்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

உங்கள் அனைவருடனும் இருப்பது எனக்கு வீடு திரும்புவது அல்லது குடும்பத்துடன் இருப்பது போன்றது. நான் இன்று உங்கள் வீடியோவைப் பார்த்தேன், அதுபற்றி ஒரு கருத்து தெரிவிக்க  விரும்புகிறேன், அத்துடன்  நீங்கள் அதில் சில மாற்றங்களைச் செய்ய விரும்புகிறேன். நீங்கள் எங்களை   'மாண்புமிகு முதலமைச்சர்' என்றும் 'மாண்புமிகு பிரதமர்' என்றும் திரும்பத் திரும்ப குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்கள் குடும்பத்தில் ஓர்  உறுப்பினர்; இங்கு நான் பிரதமரும் இல்லை, முதலமைச்சரும் இல்லை. என்னைப் போல் சிலருக்கு அதிர்ஷ்டம் இருக்கலாம். நான் 4 தலைமுறைகளாக இந்தக் குடும்பத்துடன் இணைந்திருக்கிறேன், நான்கு தலைமுறையினரும் என் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். வெகு சிலருக்கே இப்படி ஓர்  அதிர்ஷ்டம் இருக்கிறது, அதனால்தான் படத்தில் 'முதலமைச்சர்', 'பிரதமர்' என்று திரும்பத் திரும்பப் பயன்படுத்தப்படும் சொற்களால்  நான் அசௌகரியமாக இருக்கிறேன்.

நண்பர்களே, ,

 

உள்நாட்டில் மட்டுமல்ல, நான் வெளிநாடுகளுக்குச் சென்றாலும், எனது போரா சகோதர சகோதரிகள் பலர் விமான நிலையத்தில் எனக்காக வந்து காத்திருக்கின்றனர். நான் அதிகாலை 2 மணிக்கு தரையிறங்கினாலும், விமான நிலையத்தில்  2-5 குடும்பங்கள் இருக்கும். நான் அவர்களிடம் சொல்வேன் - இவ்வளவு குளிரான  காலத்தில் நீங்கள் ஏன் இவ்வளவு சிரமப்படுகிறீர்கள்? நீங்கள் ஏன் கவலை கொள்கிறீர்கள்? அவர்கள் சொல்வார்கள் - "நீங்கள் இங்கே வந்தீர்கள், எனவே நாங்கள் வர வேண்டியிருந்தது". நான்  உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சரி, எந்த நாட்டில் இருந்தாலும் சரி, இந்தியாவின் மீது எனக்குள்ள அன்பும் அக்கறையும் எனது இதயத்தில் எப்போதும் இருக்கும். உங்கள் உணர்வுகளும்  அன்பும் என்னை மீண்டும் மீண்டும் உங்களை நோக்கி ஈர்க்கிறது.

நண்பர்களே,

 

சில முயற்சிகளும் சில வெற்றிகளும் பல தசாப்த கால கனவுகளைப் பின்னால் கொண்டிருக்கின்றன. அல்ஜமியா-துஸ்-சைஃபிய்யா மும்பை கிளையின் வடிவில் விரிவடைவது என்பது புனித சையத்னா அப்துல் காதர் நஜ்முதீன் சஹாப் அவர்களின் கனவாக இருந்தது என்பதை நான் அறிவேன். அப்போது நாடு காலனி ஆதிக்கத்தில் இருந்தது. கல்வித் துறையில் இவ்வளவு பெரிய கனவு ஒரு முக்கியமான விஷயமாக இருந்தது. ஆனால் கனவுகள், சரியான சிந்தனையுடன் இருந்தால் கண்டிப்பாக நிறைவேறும். நாடு இன்று 'சுதந்திரத்தின்  அமிர்த  காலத்தை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கும் போது, கல்வித் துறையில் போரா சமூகத்தின்  பங்களிப்பின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கிறது.

இந்த ஆண்டு ஜி-20 என்ற முக்கியமான உலகளாவிய அமைப்பிற்கு இந்தியா தலைமை வகிக்கிறது. வெளிநாடுகளில் பரவியுள்ள போரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியாவின் பிராண்ட் அம்பாசிடர்களாக உலகின் முன் செயல்பட முடியும். நீங்கள் எப்பொழுதும் அதே ஆர்வத்துடன் இந்தப் பொறுப்புகளை நிறைவேற்றுவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைவதில் தாவூதி போரா சமூகத்தினர் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். மேலும் தொடர்ந்து அதே பங்களிப்பை செய்வார்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த விருப்பத்துடனும் நம்பிக்கையுடனும், இந்த நல்ல  சந்தர்ப்பத்தில் உங்கள் அனைவரையும் நான் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன். இந்த சந்தர்ப்பத்தில் இங்கு வர வாய்ப்பளித்தமைக்கு நன்றி. சையத்னா சாஹிப்  சிறப்பான அன்பைச் செலுத்தியுள்ளார்.

 

மிக்கநன்றி.

***

SMB / DL



(Release ID: 1898476) Visitor Counter : 176