பிரதமர் அலுவலகம்

வாரணாசியில் உலகின் மிக நீளமான நதிக்கப்பல் - எம்வி கங்கா விலாஸ் போக்குவரத்தை காணொலிக் காட்சி மூலம் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

டென்ட் சிட்டியை அவர் துவக்கினார்
ரூ.1000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பிற உள்நாட்டு நீர்வழித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார்
ஹால்டியாவில் பன்மாதிரி முனையத்தை திறந்து வைத்தார்
"எம்வி கங்கா விலாஸ் கப்பல் மூலம் கிழக்கு இந்தியாவின் பல சுற்றுலாத் தலங்கள் பயனடையும்"
" ஒரு புதிய வளர்ச்சிப் பாதையை இந்தக் கப்பல் உருவாக்கும்"

Posted On: 13 JAN 2023 11:56AM by PIB Chennai

வாரணாசியில் உலகின் மிக நீளமான நதிக் கப்பல்-எம்வி கங்கா விலாஸை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம்  கொடியசைத்து தொடங்கி வைத்ததுடன், டென்ட் சிட்டியையும் திறந்து வைத்தார். மேலும் ரூ.1000  கோடி ரூபாய் மதிப்பிலான உள்நாட்டு நீர்வழித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இந்தியாவின்  இந்த நதிக் கப்பல் சுற்றுலாவின் புதிய யுகத்தை ஏற்படுத்தும்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், மகாதேவரை வணங்கி,  நல்ல சந்தர்ப்பத்தில் அனைவருக்கும் லோஹ்ரி  வாழ்த்துக்களைத் தெரிவித்தார். நமது பண்டிகைகள் குறித்த  நம்பிக்கை, தவம், தொண்டு ஆகியவை பற்றியும் பண்டிகைகளில்  நதிகளின் பங்கு குறித்தும் பிரதமர் விளக்கினார். இதன் மூலம் நதி நீர் வழித்தடங்கள் தொடர்பான திட்டங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. காசியில் இருந்து திப்ருகர் வரையிலான மிக நீளமான ஆற்றுப் பயணம் இன்று கொடியசைத்து தொடங்கப்பட்டுள்ளது, உலக சுற்றுலா வரைபடத்தில் வடஇந்தியாவின் சுற்றுலாத் தலங்களை முன்னிலைப்படுத்தும் என்றும் அவர் கூறினார். ரூ. 1000 கோடி மதிப்பிலான வாரணாசி, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், பீகார், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் பிற திட்டங்கள் கிழக்கு இந்தியாவின் சுற்றுலா மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு உந்துதலைக் கொடுக்கும் என்றார் அவர்.

ஒவ்வொரு இந்தியனின் வாழ்விலும் கங்கை நதியின் முக்கியப் பங்கை விளக்கிய பிரதமர், சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் கங்கை கரையைச் சுற்றியுள்ள பகுதிகள் வளர்ச்சியில் பின்தங்கிவிட்டதால், இப்பகுதியிலிருந்து மக்கள் பெருமளவில் வெளியேற நேர்ந்த வருத்தத்தை அவர் வெளிப்படுத்தினார். இந்த துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையை மாற்றுவதற்கு  இரட்டை அணுகுமுறை பின்பற்றப்பட்டதாக பிரதமர் விளக்கினார். ஒருபுறம், நமாமி கங்கை மூலம் கங்கையை சுத்தப்படுத்தும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு, மறுபுறம் 'அர்த் கங்கை' திட்டத்தின் மூலம்  கங்கை கடந்து செல்லும் மாநிலங்களில் வீரியமான பொருளாதார  சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது  என்று அவர் தெரிவித்தார்.

கங்கா விலாஸ் கப்பலின் முதல் பயணத்தில் பயணம் செய்யும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளிடம் உரையாற்றிய பிரதமர், "இன்று உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட அனைத்தையும் இந்தியா கொண்டுள்ளது " என்றார். பிராந்தியம் அல்லது மதம், மதம் அல்லது நாடு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல்  திறந்த இதயத்துடன், உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதால், இந்தியாவை இதயத்திலிருந்து மட்டுமே உணர முடியும் என்று அவர்  கூறினார்.

ஆற்றுப் பயணத்தின் அனுபவத்தைப் பற்றி விளக்கிய பிரதமர், அதில் ஒவ்வொருவருக்கும் ஏதாவது சிறப்பு இருப்பதாகத் தெரிவித்தார். ஆன்மீகத்தை விரும்புபவர்கள் காசி, புத்த கயா, விக்ரம்ஷிலா, பாட்னா சாஹிப் மற்றும் மஜூலி போன்ற இடங்களைச் செல்வார்கள் என்றும், பன்னாட்டு பயண அனுபவத்தை எதிர்பார்க்கும் சுற்றுலாப் பயணிகள் பங்களாதேஷில் உள்ள டாக்கா வழியாகவும் செல்வார்கள் என்றும் அவர் கூறினார்.  இந்தியாவின் இயற்கை பன்முகத்தன்மையைக் காண விரும்புவோருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறினார். சுந்தரவனம் மற்றும் அஸ்ஸாம் காடுகளை இந்தக் கப்பல்  கடந்து செல்லும். இந்தப் பயணமானது 25 வெவ்வேறு நதிகளின் வழியே செல்லும் என்பதை குறிப்பிட்ட  பிரதமர், இந்தியாவின் நதி அமைப்புகளைப் பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்தக் கப்பல் பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது என்றார். இந்தியாவின் எண்ணற்ற சமையல் மற்றும் உணவு வகைகளை ஆராய விரும்புவோருக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். "இந்தக் கப்பலில் இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் அதன் நவீனத்துவத்தின் அசாதாரண ஒருங்கிணைப்பை ஒருவர் காணலாம்", என்று கூறிய பிரதமர், நாட்டின் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் உல்லாச சுற்றுலாவின் புதிய சகாப்தத்தை விளக்கினார். “வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளுக்குச் சென்று இதுபோன்ற அனுபவத்தைப் பெற்ற இந்தியர்களும் இப்போது வட இந்தியாவை நோக்கிச் செல்லலாம்”என்று பிரதமர் கூறினார். இனிமையான, சொகுசு பயண அனுபவத்தை மனதில் கொண்டு, நீர்வழி சுற்றுலாவுக்கு ஊக்கமளிக்கும் வகையில், நாட்டின் பிற உள்நாட்டு நீர்வழிகளில் இதுபோன்ற சுற்றுலாக்கள் தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வளர்ந்து வரும் உலகளாவிய சூழலில், இந்தியா பற்றி அறிந்து கொள்ளும்  ஆர்வமும் அதிகரித்து வருவதால், சுற்றுலாவின் வலுவான கட்டத்தில் இந்தியா நுழைந்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். அதனால்தான், கடந்த 8 ஆண்டுகளில் நாட்டில் சுற்றுலாத் துறையை விரிவுபடுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார் பிரதமர். நம்பிக்கைக்குரிய இடங்கள் முன்னுரிமையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டன. காசி அத்தகைய முயற்சிகளுக்கு நேரடி உதாரணம். மேம்படுத்தப்பட்ட வசதியுடன் காசி விஸ்வநாதர் ஆலயம் புத்துயிர் பெற்றதால், காசிக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. இது உள்ளூர் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது. நவீனத்துவம், ஆன்மீகம்,  நம்பிக்கை ஆகியவற்றைக் கொண்ட  புதுமையான அனுபவத்தை சுற்றுலா பயணிகளுக்கு புதிய டென்ட் சிட்டி வழங்கும்.

2014ஆம் ஆண்டிற்குப் பின்னர் நாட்டில் எடுக்கப்பட்ட கொள்கைகள், முடிவுகள் மற்றும் வழிகாட்டுதல்களின் பிரதிபலிப்பே இன்றைய நிகழ்வு என பிரதமர் கூறினார். “21ஆம் நூற்றாண்டின் இந்தப் பத்தாண்டு, இந்தியாவில் உள்கட்டமைப்பு மாற்றத்தின் ஒரு தசாப்தமாக திகழ்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை இந்தியா இப்போது காண்கிறது. வீடுகள், கழிப்பறைகள், மருத்துவமனைகள், மின்சாரம், தண்ணீர், சமையல் எரிவாயு, கல்வி நிறுவனங்கள், டிஜிட்டல் உள்கட்டமைப்பு, ரயில்வே, நீர்வழிகள், விமானப் பாதைகள், சாலைகள் என அனைத்துமே இந்தியாவின் விரைவான வளர்ச்சியின் வலுவான அடையாளங்களாக உள்ளன  என்று அவர் கூறினார். அனைத்து துறைகளிலும் இந்தியா சிறந்த, மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்தியாவில் இந்தப் போக்குவரத்து முறையில் வளமான வரலாறு இருந்த போதிலும், இந்தியாவில் நதி நீர்வழிகளின் பயன்பாடு குறைவாக இருந்ததை பிரதமர் சுட்டிக் காட்டினார். 2014 க்குப் பிறகு, இந்தியா இந்த பண்டைய வலிமையை நவீன இந்தியாவின் காரணத்திற்காக பயன்படுத்துகிறது. நாட்டின் பெரிய ஆறுகளில் நீர்வழிப் பாதைகளை மேம்படுத்த புதிய சட்டம் மற்றும் விரிவான செயல் திட்டம் உள்ளது. 2014 ஆம் ஆண்டில் நாட்டில் 5 தேசிய நீர்வழிப்பாதைகள் மட்டுமே இருந்தன என்றும், இப்போது நாட்டில் 111 தேசிய நீர்வழிகள் இருப்பதாகவும், சுமார் இரண்டு டஜன் ஏற்கனவே செயல்பாட்டில் இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். அதேபோல், ஆற்று நீர் வழித்தடங்கள் வழியாக சரக்கு போக்குவரத்து 8 ஆண்டுகளுக்கு முன்பு 30 லட்சம் மெட்ரிக் டன்னில் இருந்து இப்போது 3 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு இந்தியாவின் வளர்ச்சி என்ற கருப்பொருள் குறித்து பேசிய பிரதமர், இன்றைய நிகழ்வுகள் கிழக்கு இந்தியாவை வளர்ந்த இந்தியாவின் வளர்ச்சி இயந்திரமாக மாற்ற உதவும் என்றார். இது ஹால்டியா பன்மாதிரி முனையத்தை வாரணாசியுடன் இணைக்கிறது. இந்தியா- பங்களாதேஷ் நெறிமுறை வழி  வடகிழக்குடன் இணைக்கப்பட்டுள்ளது. இது கொல்கத்தா துறைமுகத்தையும் பங்களாதேஷையும் இணைக்கிறது. இது உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கத்தில் இருந்து பங்களாதேசுக்கு வணிகத்தை எளிதாக்கும் என்று அவர் கூறினார்.

திறமையான பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், கவுகாத்தியில் திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கப்பல்களை பழுதுபார்ப்பதற்காக அங்கு  புதிய வசதியும் உருவாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். "அது ஒரு உல்லாசக் கப்பலாக இருந்தாலும் சரி, சரக்குக் கப்பலாக இருந்தாலும் சரி, அவை போக்குவரத்து மற்றும் சுற்றுலாவுக்கு ஊக்கமளிப்பதுடன்,  அவற்றின் சேவையுடன் தொடர்புடைய முழுத் துறையும் புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன" என்று பிரதமர் கூறினார்.

நீர்வழிகள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல, பணத்தை மிச்சப்படுத்தவும் உதவுகின்றன. நீர்வழிப் பாதைகளை இயக்குவதற்கான செலவு சாலைகளை விட இரண்டரை மடங்கு குறைவு என்றும், ரயில்வேயுடன் ஒப்பிடும்போது மூன்றில் ஒரு பங்கு குறைவு என்றும் அவர் கூறினார். தேசியத் தளவாடக் கொள்கை பற்றி குறிப்பிட்ட பிரதமர், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நீளமுள்ள நீர்வழிப் பாதை வலையமைப்பை உருவாக்க இந்தியாவுக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறினார். இந்தியாவில் 125 க்கும் மேற்பட்ட ஆறுகள் மற்றும் உபநதிகள் உள்ளன என்றும், அவை சரக்குகளைக் கொண்டு செல்வதற்கும், மக்களை கப்பல் மூலம் கொண்டு செல்வதற்கும் உருவாக்கப்படலாம் என்றும், மேலும் துறைமுகம் சார்ந்த வளர்ச்சியை மேலும் விரிவுபடுத்துவதற்கு உத்வேகம் அளிக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார். நவீன பலதரப்பட்ட நீர்வழி வலையமைப்பைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியதோடு, வடகிழக்கில் நீர் இணைப்பை வலுப்படுத்திய பங்களாதேஷ் மற்றும் பிற நாடுகளுடனான கூட்டாண்மை குறித்தும் பேசினார்.

 இந்தியாவில் நீர்வழிப் பாதைகளை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான வளர்ச்சி செயல்முறை குறித்துக் குறிப்பிட்ட பிரதமர், "வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்கு வலுவான இணைப்பு அவசியம்" என்றார். இந்தியாவின் நதி நீர் ஆற்றலுக்கும், நாட்டின் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவுக்கும் புதிய உயரங்களைத் தரும் என்றும் நம்பிக்கை தெரிவித்த பிரதமர், அனைத்துக் கப்பல் பயணிகளுக்கும் இனிய பயணம் அமைய வாழ்த்து தெரிவித்தார்.

உத்தரபிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், அசாம் முதலமைச்சர் திரு  ஹிமந்தா பிஸ்வா சர்மா, மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னணி

எம்வி கங்கா விலாஸ்

எம்வி கங்கா விலாஸ், உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசியில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கி, 51 நாட்களில் 3,200 கிமீ பயணம் செய்து, இந்தியா மற்றும் பங்களாதேசில் உள்ள 27 நதி அமைப்புகளைக் கடந்து அசாமில் உள்ள திப்ருகரை அடையும். எம்வி கங்கா விலாஸில் மூன்று தளங்கள், 18 சொகுசு அறைகள், 36 சுற்றுலாப் பயணிகள் தங்கும் வசதியுடன், அனைத்து ஆடம்பர வசதிகளும் உள்ளன. முதல் பயணத்தில் சுவிட்சர்லாந்தில் இருந்து 32 சுற்றுலாப் பயணிகள் பதிவு செய்துள்ளனர்.

எம்வி கங்கா விலாஸ் கப்பல், நாட்டின் சிறந்தவற்றை உலகுக்குக் காண்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலக பாரம்பரிய தளங்கள், தேசிய பூங்காக்கள், நதி தொடர்ச்சி மலை, பீகாரில் உள்ள பாட்னா, ஜார்கண்டில் உள்ள சாஹிப்கஞ்ச், மேற்கு வங்கத்தில் கொல்கத்தா, பங்களாதேஷின் டாக்கா, அசாமில் உள்ள கவுகாத்தி போன்ற முக்கிய நகரங்கள் உட்பட 50 சுற்றுலா தலங்களுக்கு 51 நாட்கள் பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பங்காளதேசின் கலை, கலாச்சாரம், வரலாறு மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றில் ஈடுபடுவதற்கும், அனுபவமிக்க பயணத்தைத் தொடங்குவதற்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தப் பயணம் வாய்ப்பளிக்கும். நதிக் கப்பல் சுற்றுலாவை மேம்படுத்தும் பிரதமரின் முயற்சி, இந்தச் சேவை தொடங்கப்பட்டதன் மூலம், நதிக்கப்பல்  பயணங்களின் மிகப் பெரிய சாத்தியக்கூறுகளுடன், இந்தியாவிற்கான நதிக் கப்பல் சுற்றுலாவின் புதிய யுகத்தை அறிவிக்கும்.

வாரணாசியில் டென்ட் சிட்டி

இப்பகுதியில் சுற்றுலாவின் திறனைப் பயன்படுத்திக் கொள்ள கங்கை நதிக்கரையில் டென்ட் சிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காசி விஸ்வநாத் தாம் திறக்கப்பட்டதிலிருந்து வாரணாசியில் அதிகரித்த சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பூர்த்தி செய்யும் வகையில், தங்கும் வசதிகளை வழங்கும் விதமாக நகரத் தொடர்ச்சி மலைகளுக்கு எதிரே இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது பொதுத்துறை, தனியார் கூட்டு முயற்சி முறையில் வாரணாசி மேம்பாட்டு ஆணையத்தால் உருவாக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் அருகில் உள்ள பல்வேறு தொடர்ச்சி மலைகளில் இருந்து படகுகள் மூலம் டென்ட் சிட்டியை அடைவார்கள். டென்ட் சிட்டி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் ஜூன் வரை செயல்படும். மழைக்காலத்தில் ஆற்றின் நீர் மட்டம் அதிகரிக்கும் போது மூன்று மாதங்களுக்கு அகற்றப்படும்.

உள்நாட்டு நீர்வழித் திட்டங்கள்

மேற்கு வங்காளத்தில் ஹால்தியா பன்மாதிரி முனையத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். நீர் வழி வளர்ச்சித் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இது,  ஆண்டுக்கு சுமார் 3 மில்லியன் மெட்ரிக் டன் சரக்கு கையாளும் திறனைக் கொண்டுள்ளது. இங்குள்ள தளங்கள்  சுமார் 3000  டன்  கப்பல்களைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

காஜிபூர் மாவட்டத்தில் சைத்பூர், சோசக்பூர், ஜமானியா, உத்தரப்பிரதேசம் பல்லியா மாவட்டத்தில் உள்ள கான்ஸ்பூரில் நான்கு மிதக்கும்  மீன்பிடித்தளங்களையும் பிரதமர் திறந்து வைத்தார். மேலும், பீகாரில் பாட்னா மாவட்டத்தில் உள்ள திகா, நக்தா தியாரா, பார், பானாபூர்,  சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள ஹசன்பூர் ஆகிய இடங்களில் ஐந்து ஜெட்டிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். கங்கை ஆற்றின் குறுக்கே உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் , மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 60க்கும் மேற்பட்ட  மீன்பிடித்தளங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சிறு விவசாயிகள், மீன்பிடி அலகுகள், அமைப்புசாரா பண்ணை உற்பத்தி அலகுகள், தோட்டக்கலையாளர்கள், பூ வியாபாரிகள் மற்றும் கைவினைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் இந்த  மீன்பிடித்தளங்கள் முக்கியப் பங்கு வகிக்கும்.

குவஹாத்தியில் வடகிழக்குக்கான கடல்சார் திறன் மேம்பாட்டு மையத்தையும் பிரதமர் திறந்து வைத்தார். இது வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளமான திறமைகளை மேம்படுத்தவும், வளர்ந்து வரும் தளவாடத் துறையில் சிறந்த வேலை வாய்ப்புகளை வழங்கவும் உதவும்.

இவை தவிர, குவாஹாத்தியில் உள்ள பாண்டு முனையத்தில் கப்பல் பழுதுபார்க்கும் வசதி மற்றும் உயர்த்தப்பட்ட சாலைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இதனால், கொல்கத்தா பழுதுபார்க்கும் தளத்திற்கு செல்லும் நேரமும், செலவும் பல மடங்கு மிச்சமாகும். பாண்டு முனையத்தை என்எச் 27 உடன் இணைக்கும் பிரத்யேக சாலை 24 மணி நேர இணைப்பை ஏற்படுத்தும்.

***

AP/PKV/RJ



(Release ID: 1890978) Visitor Counter : 233