பிரதமர் அலுவலகம்

மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் சர்வதேச முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 11 JAN 2023 11:54AM by PIB Chennai

வணக்கம்!

மத்தியப்பிரதேச முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்ற அனைத்து முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோரை உற்சாகமாக வரவேற்கிறேன். வளர்ச்சி அடைந்த இந்தியாவை கட்டமைப்பதில் மத்தியப்பிரதேசத்தின் பங்கு மிகவும் இன்றியமையாதது. நம்பிக்கை மற்றும் ஆன்மீகத்தில் தொடங்கி சுற்றுலாத்துறை வரையிலும், வேளாண்மையில் தொடங்கி கல்வி மற்றும் திறன் மேம்பாடு வரையிலும், சாதனைப் படைத்த மத்தியப்பிரதேசம் ஒரு வியத்தகு  மாநிலம்..

நண்பர்களே,

மத்தியப்பிரதேசத்தில் நடத்தப்படும் இந்த உச்சிமாநாடு விடுதலையின் அமிர்தப் பெருவிழாக்காலத்தில் நடைபெறுகிறது.  நாம் அனைவரும் இணைந்து வளர்ச்சியடைந்த இந்தியாவைக்  கட்டமைக்க பணியாற்ற வேண்டும்.  வளர்ச்சி அடைந்த இந்தியாவைப் பற்றி பேசும் போது, இது நம் அனைவரின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியரின் தீர்மானமாகவும் இருக்கிறது. உலகின் ஒவ்வொரு அமைப்பிலும், நிபுணர்கள் பட்டியலிலும் இந்தியர்கள் இடம் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

நண்பர்களே,

 

 

உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவிற்கு முன்னணி இடம் கிடைத்திருக்கிறது. மற்ற  நாடுகளைவிட சர்வதேச அளவில் இந்தியா சிறப்பான இடத்தைப் பிடித்திருப்பதாக உலக வங்கி தெரிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆண்டில் ஜி-20 நாடுகளில் இடம் பெற்றுள்ள அதிவேக வளர்ச்சி அடையும்  பொருளாதார நாடுகளில் இந்தியாவும் இடம் பெறும் என ஓஇசிடி  என்ற பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு  அமைப்பு தெரிவித்திருக்கிறது. அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில், உலகின் மிகப்பெரிய 3-வது பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இந்தியா மாறும் என மோர்கன் ஸ்டான்லி என்ற அமெரிக்க பன்னாட்டு முதலீட்டு வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனம் தெரிவித்திக்கிறது.  நடப்பு  தசாப்தம் மட்டுமல்லாமல், இந்த நூற்றாண்டே இந்தியாவிற்கானது   என எம்சிகின்சே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கூறியிருக்கிறார். நிறுவனங்கள் மற்றும் அதன்  ஆதரவு குரல்களும், உலகப் பொருளாதாரம் இந்தியா மீது அபரிதமான நம்பிக்கைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறது. இதே நிலைப்பாட்டை சர்வதேச முதலீட்டாளர்களும் கொண்டிருக்கின்றனர். முன்னணி சர்வதேச வங்கி நடத்திய ஆய்வில், சர்வதேச முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய விரும்பும் நாடாக இந்தியா  திகழ்கிறது. நேரடி அந்நிய முதலீட்டில் இந்தியா இன்று சர்வதேச சாதனைகளைப் படைத்து வருகிறது என்பதை இங்கு வந்துள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை பிரதிபலிக்கிறது.

நண்பர்களே,

இந்தியாவின்  வலிமையான ஜனநாயகம், இளைஞர் திறன் ஆகியவை  நம் தேசத்தை நோக்கி மற்றவர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. வாழ்க்கை, வணிகம் ஆகிய இரண்டையும் எளிமையாக்க  இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்சார்பு இந்தியா என்ற விழிப்புணர்வு, முதலீட்டுக்கு உகந்த நாடாக  இந்தியாவை மாற்றியிருக்கிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் சீர்த்திருத்தம், மாற்றம் மற்றும்  செயல்பாடு என்ற வழியில் இந்தியா பயணிப்பதே இதற்குக் காரணம். இந்த நூற்றாண்டின் ஒரு கட்டத்தில் நெருக்கடியை சந்தித்த போதிலும் சீர்த்திருத்தப் பாதையை இந்தியா  தேர்வு செய்தது.

நண்பர்களே,

ஒரு நிலையான அரசு, தீர்க்கமான அரசு, சரியான பாதையில் நடைபோடும் அரசு, வளர்ச்சியில் அபரிதமான வேகத்தை எட்டும். இதன் காரணமாகவே கடந்த 8 ஆண்டுகளில் நம்முடைய இலக்கும் சீர்த்திருத்தத்திற்கான அளவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.   வங்கித்துறையில், ஆளுமை பெற்ற அரசாக இந்தியா மாறியிருப்பதற்கு திவால் குறியீடு போன்ற நவீன தீர்மான வரைவை உருவாக்குதல், ஜிஎஸ்டி போன்ற ஒரு தேசம், ஒரு வரி என்ற திட்டத்தை உருவாக்குதல், ஓய்வூதியம் போன்றவற்றுக்கு வரி விலக்கு அளித்தல், சர்வதேச நாடுகளோடு போட்டி போடும் அளவுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிவிதிப்பை உருவாக்குதல், மோட்டார் வாகனம் உள்ளிட்ட பல துறைகளில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்தல், சிறிய அளவிலான பொருளாதார தவறுகளையும் குற்றமற்றவையாக அங்கீகரித்தல் போன்ற சீர்திருத்தங்களை உருவாக்கி முதலீடு செய்வதில் உள்ள தடைகளை தகர்த்திருக்கிறது. அதே போல் பாதுகாப்பு, சுரங்கம் மற்றும் விண்வெளித்துறைகளில் தனியாரும் சமமான பங்களிப்பை அளிக்க வாய்ப்பு வழங்கியிருப்பது, தற்சார்பு இந்தியாவிற்கு அடித்தளம் அமைத்திருக்கிறது. அதிக எண்ணிக்கையிலான  தொழிலாளர் சட்டங்களை எளிமையான விதிகளாகக் குறைத்திருக்கிறோம்.

நண்பர்களே,

மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு பல முயற்சிகள்  மேற்கொண்டு  வருவதாகவும், கடந்த சில ஆண்டுகளில் 40,000 சிக்கல்கள் தீர்க்கப்பட்டு இணக்கம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. வர்த்தகத்தை எளிமையாக்குவதற்காக கொண்டுவரப்பட்ட தேசிய ஒற்றைச் சாளர முறையில் இதுவரை 50,000 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

நண்பர்களே,

நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள நவீன மற்றும் பன்னோக்கு உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்கள் இந்தியா மீதான முதலீட்டு வாய்ப்புகளுக்கு ஏற்றத்தை அளித்திருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில், விமான நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதோடு, தேசிய நெடுஞ்சாலைப் பணிகளின் வேகம் இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. இதே போல் இந்தியாவில் உள்ள துறைமுகங்களில் கையிருப்பு வசதியும் அபரிமித வளர்ச்சிக் கண்டிருப்பதாகவும், அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு முனையங்கள், தொழிற்சாலை முனையங்கள், தளவாடப் பூங்கா ஆகியவை புதிய இந்தியாவின் அடையாளங்களாக மாறியிருக்கிறது. விரைவுசக்தி பெருந்திட்டம், இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் தேசிய பிரதான திட்டமாக உருவெடுத்துள்ளது. இந்தியாவை உலகின் போட்டி மிகுந்த தளவாட சந்தையாக  மாற்றும் இலக்கை நிறைவேற்றுவதற்காக தேசிய தளவாடக் கொள்கையை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.

நண்பர்களே,

ஸ்மார்ட் போன் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. விமானப்போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகன சந்தையில் இந்தியா உலகின் 3-வது பெரிய நாடாக உருவெடுத்திருக்கிறது. சர்வதேச வளர்ச்சிக்கான அடுத்தக் கட்டத் திட்டத்தின்படி  ஒருபுறம் அனைத்து கிராமங்களிலும் செயற்கை கண்ணாடி இழை இணையத்தை ஏற்படுத்தப்படுகிறது. மறுபுறம் 5-ஜி அலைவரிசை இணையம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு துறையிலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் 5-ஜி அலைவரிசை  உதவியுடன் நுகர்வோரைத் தீர்மானிப்பதும், இந்தியாவின் வளர்ச்சிக்கான வேகத்தை துரிதப்படுத்தியிருக்கிறது.

நண்பர்களே,

உற்பத்தித் துறையில் உலக அளவில் இன்று, இந்தியா அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. பிரதமரின் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.2.5 லட்சம் கோடி அறிவிக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச உற்பத்தியாளர்களிடையே இந்தத் திட்டம் பிரபலம் அடைந்ததன் காரணமாக பல்வேறு துறைகளில் ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு உற்பத்தி அதிகரித்திருக்கிறது. இதில் பல கோடி ரூபாய் மத்தியப்பிரதேசத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டம் மத்தியப்பிரதேசத்தை மருந்தகம் மற்றும் ஜவுளி கேந்திரமாக மாற்றி வருகிறது. மத்தியப்பிரதேசத்தில் அதிக அளவில் முதலீடு செய்து இந்தத் திட்டத்தின்  மூலம்  பயனடைய முதலீட்டாளர்கள் முன்வரவேண்டும்.

நண்பர்களே,

பசுமை சுற்றுச்சூழலுக்கு வழிவகுக்கும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பசுமை ஹைட்ரஜன் இயக்கத்திற்கு மத்திய அரசு அனுமதித்தது. இதன் மூலம் ரூ.8 லட்சம் கோடிக்கான முதலீடு வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளது. இதில் இந்தியாவில் முதலீட்டுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதுடன் சர்வதேச அளவிலான பசுமை  எரிசக்திக்கானத் தேவையையும் பூர்த்தி செய்யும்.

நண்பர்களே,

சுகாதாரம், வேளாண்மை, ஊட்டச்சத்து, திறன் மேம்பாடு மற்றும் புத்தாக்க முயற்சிகளில், இந்தியாவுடன் இணைந்து சர்வதேச அளவிலும் விநியோகச் சங்கிலியை உருவாக்க வேண்டியது  அவசியம். எனவே, மீண்டும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உச்சிமாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள். மத்தியப்பிரதேசத்தின் ஆற்றலும், தீர்மானமும் உங்களை வளர்ச்சிக்கான பாதையில் இரண்டு அடி முன்னோக்கி அழைத்துச் செல்லும்.  அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

***

(Release ID: 1890207)

TV/ES/KPG/RJ



(Release ID: 1890507) Visitor Counter : 160