சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
உ.பி., சத்தீஸ்கர் மாநிலங்களுக்கான மத்திய காசநோய் பிரிவு மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு டாக்டர் மன்சுக் மாண்டவியா, திரு.ஹர்தீப் சிங் பூரி வரவேற்பு
Posted On:
28 DEC 2022 3:08PM by PIB Chennai
காசநோயை அடியோடு ஒழிக்க இந்தியா மேற்கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கு சான்றாக இந்தியன் ஆயில் நிறுவனம் மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய காசநோய் பிரிவுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காசநோய் ஒழிப்புத் திட்டத்தை தீவிரமாக மேற்கொள்ள இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்யும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் திரு.ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் கூறியுள்ளனர்.
இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் காசநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. காசநோய்க்கு எதிரான இயக்கத்தை இந்த மாநிலங்களில் தீவிரமாக செயல்படுத்த இது வழிவகுக்கும்.
மத்திய அமைச்சர்கள், டாக்டர் மன்சுக் மாண்டவியா, ஹர்தீப் சிங் பூரி முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. ஒப்பந்தத்தை வரவேற்றுள்ள டாக்டர் மாண்டவியா, 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் காசநோயை முற்றிலும் ஒழிக்கும் பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தொலைநோக்கை செயல்படுத்தும் வகையில் இத்தகைய ஒப்பந்தங்கள் செயல்முறைக்கு வரும் என்று கூறினார். இத்திட்டம் தொடங்கப்பட்டு 15 நாட்களுக்குள் அனைத்து 12 லட்சம் காசநோயாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு ஊட்டச்சத்து உபகரணங்கள் மற்றும் இதர ஆதரவுகள் வழங்கப்படுவதாக கூறினார்.
இந்த முன்முயற்சியை மேற்கொண்டதற்காக இந்தியன் ஆயில் நிறுவனத்தைப் பாராட்டிய திரு.ஹர்தீப் சிங் பூரி இந்த சாதனைமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியாவின் சுகாதார நடைமுறையின் வளர்ச்சியை அதிகரிக்கும் பிரதமரின் தொலைநோக்கை நனவாக்க உதவும் என்று தெரிவித்தார்.
**************
SM/PKV/RR/GK
(Release ID: 1887059)