தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
திரைப்பட படப்பிடிப்பு, இணை தயாரிப்பு, படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகள், திரைப்படத் துறையில் தொழில்நுட்ப பயன்பாடு ஆகியவற்றின் மையமாக இந்தியா மாறும்: அனுராக் சிங் தாக்கூர்
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆகியோர் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்கத் திரைப்படமான அல்மா & ஆஸ்கரின் உலகப் பிரீமியர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
“இந்திய சர்வதேச திரைப்பட விழா உலகெங்கிலும் உள்ள திரைப்பட இயக்குனர்கள் தங்கள் படைப்புகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு தளமாக மாறியுள்ளது. இணை தயாரிப்பு, படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள், திரைப்பட படப்பிடிப்பு, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துபவர்கள் ஆகியவற்றின் மையமாக இந்தியா மாறும் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்று மத்திய தகவல், ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறியுள்ளார்.
ஆஸ்திரிய இயக்குனர் டியட்டர் பெர்னரின் திரைப்படமான அல்மா மற்றும் ஆஸ்கார் திரைப்படத்தின் உலகப் பிரீமியர், திரைப்பட விழாவின் தொடக்கமாக திரையிடப்பட்டது. இப்படத்திற்கான சிவப்பு கம்பள வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், ஒவ்வொரு ஆண்டும், திருவிழா பெரிதாகி வருகிறது. இந்த ஆண்டு பல பிரீமியர்கள் உள்ளன. இந்த ஆண்டு விழாவில் 79க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 280 படங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. இது வரை நாம் என்ன செய்துள்ளோம் என்பதைப் பற்றி விழா விரிவாகப் பேசுகிறது என்றார்.
தொடக்க விழாவிற்கு முன் ஒரு தொடக்கப் படம் திரையிடப்படுவது இதுவே முதல் முறை என்று அமைச்சர் குறிப்பிட்டார். 75 நாளைய இளம் படைப்பாளர்கள் முன்முயற்சியிலிருந்து உலக பிரீமியர்கள் வரை, ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் வித்தியாசமான ஒன்றைச் செய்ய முயற்சிக்கிறோம். சர்வதேச திரைப்பட வல்லுநர்களின் பங்கேற்பை எதிர்பார்க்கிறோம் என்று அமைச்சர் கூறினார்.
மத்திய தகவல், ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர், டாக்டர். எல். முருகன், தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் அபூர்வ சந்திரா, நடிகர்கள் மற்றும் அல்மா மற்றும் ஆஸ்கார் குழுவினருடன் கோவா பனாஜியில் ஐநாக்ஸில் படத்தின் பிரமாண்டமான திரையிடலில் கலந்து கொண்டனர்.
இந்திய சர்வதேச திரைப்பட விழா ஏற்படுத்திய மகிழ்ச்சிகரமான சூழல் உணர்வு பற்றி பேசிய டாக்டர். எல். முருகன், இந்திய சர்வதேச திரைப்பட விழா உலகை இணைக்கிறது என்று கூறினார். இந்த விழாவில் உலகம் முழுவதிலுமிருந்து திரையுலகப் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். ஐஎப்எப்ஐ நமது இந்திய கலாச்சாரத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்கிறது, என்றார்.
அல்மா மற்றும் ஆஸ்கார் என்ற உணர்ச்சிமிக்க காதல் கதையைப் பற்றி விளக்கிய இயக்குனர் டியட்டர் பெர்னர், இந்த படம் பிரபல வியன்னா பெண்மணியான அல்மா மஹ்லர் என்ற அழகான, தைரியமான பெண்ணுக்கும் , ஆஸ்கர் கோகோஷ்கா என்னும் நாடக ஆசிரியருக்கும் இடையிலான உறவு பற்றியது என்றார்.
*********
MSV/PKV/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1877561)
வருகையாளர் எண்ணிக்கை : 237