வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

நவம்பர் 4 முதல் 6 வரை கொச்சியில் ‘இந்திய நகர்ப்புற போக்குவரத்து கருத்தரங்கு மற்றும் கண்காட்சி, 2022’

Posted On: 03 NOV 2022 11:27AM by PIB Chennai

15-வது இந்திய நகர்ப்புற போக்குவரத்து கருத்தரங்கு  மற்றும் கண்காட்சி, 2022 நாளை (நவம்பர் 4, 2022) கொச்சியில் தொடங்க உள்ளது. மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, கேரள மாநில முதலமைச்சர் திரு பிணராயி விஜயன் ஆகியோர் இணைந்து இதனைத் தொடங்கி வைப்பார்கள். நவம்பர் 4 முதல் 6-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், கேரள மாநில அரசுடன் இணைந்து நடத்துகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள், கொள்கை வடிவமைப்பாளர்கள், மெட்ரோ ரயில் நிறுவனங்களின் மேலாண் இயக்குநர்கள், போக்குவரத்து நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள், சர்வதேச வல்லுநர்கள், தொழில்துறை நிபுணர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் முதலியவர்கள் இதில் கலந்து கொள்வார்கள்.

 

நகர்ப்புற போக்குவரத்து சம்பந்தமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாநில மற்றும் நகர அளவுகளில் திறன் கட்டமைப்பில் அதிக கவனம் செலுத்தி, சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் சமமான மற்றும் நிலையான நகர்ப்புற போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கான வழிமுறைகளை அமைப்பதற்காக தேசிய நகர்ப்புற போக்குவரத்துக் கொள்கை 2006-ஐ இந்திய அரசு கொண்டு வந்தது. இதை அடுத்து இந்த கொள்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்திய நகர்ப்புற போக்குவரத்து என்ற பெயரில் வருடந்தோறும் சர்வதேச கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை அமைச்சகம் ஏற்பாடு செய்து வருகிறது.

 

 

சர்வதேச அளவில் நடைமுறையில் உள்ள நவீன மற்றும் சிறந்த நகர்ப்புற போக்குவரத்து நடைமுறைகள் குறித்து அதிகாரிகள் தெரிந்து கொள்வதற்காகவே இந்த கருத்தரங்கு நடத்தப்படுகிறது. “விடுதலை@75- நிலையான தற்சார்பு நகர்ப்புற போக்குவரத்து” என்பது இந்த ஆண்டு கருத்தரங்கு மற்றும் கண்காட்சியின் கருப்பொருளாகும். திறமையான, உயர்தரத்திலான, நிலையான போக்குவரத்து அமைப்புமுறையை நகரங்களில் வடிவமைத்து, அமல்படுத்துவதில் இந்த நிகழ்ச்சி கவனம் செலுத்தும்.

*************

SM/RB/IDS



(Release ID: 1873434) Visitor Counter : 190