தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

பிஐபி ஆராய்ச்சி பிரிவின் பணியை ஆய்வு செய்த தகவல் ஒலிபரப்பு அமைச்சக செயலர், திறன் மேம்பாட்டு பயிலரங்கை துவக்கி வைத்தார்

Posted On: 28 OCT 2022 6:28PM by PIB Chennai

பத்திரிகை தகவல் அலுவலகத்தின் ஆராய்ச்சிப் பிரிவு  முதல் ஆண்டை நிறைவு செய்ததை அடுத்து தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு. அபூர்வ சந்திரா, பத்திரிகை தகவல் அலுவலகத்தின்  முதன்மை தலைமை இயக்குநர் திரு சத்யேந்திர பிரகாஷ் ஆகியோர் இன்று அப்பிரிவினை ஆய்வு செய்தனர். அரசாங்கத்தின் முடிவுகள் மற்றும் கொள்கைகள் பற்றிய முழுமையான கண்ணோட்டத்தை ஊடகங்களுக்கு வழங்குவதற்காக, ஆராய்ச்சி பிரிவு அமைக்கப்பட்டது.

2021அக்டோபர் மாதம் தனது பயணத்தைத் தொடங்கிய ஆராய்ச்சிப் பிரிவு, பிஐபி மற்றும் பிற அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் ஊடகங்களுக்கும் மக்களுக்கும் அரசின் திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் பற்றிய உண்மை அடிப்படையிலான, நன்கு ஆய்வு செய்யப்பட்ட தகவல்களையும், செய்திகளையும் தயாரித்து வழங்குகிறது.  உண்மைத் தகவல்கள், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என பல்வேறு வடிவங்களில் கிட்டத்தட்ட 450 ஆவணங்களை ஆராய்ச்சிப் பிரிவு உருவாக்கியுள்ளது.

 

 

ஆராய்ச்சி பிரிவு அதன் உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த ஒரு நாள் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கை திரு. சந்திரா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய செயலாளர், மக்களைச் சென்றடைவதற்கும், அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஹிந்தி மற்றும் பிராந்திய மொழிகளில் தகவல் தொடர்புக்கான உள்ளடக்கத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். பல்வேறு திட்டங்களின் பயன்களுடன் குழுவின் பங்களிப்புகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். எதிர்காலத்தில் அதன் பணியை மேலும் மேம்படுத்த உதவும் மதிப்புமிக்க ஆலோசனைகளை அவர் வழங்கினார். பயிலரங்கின் தொடக்க அமர்வில், தகவல் ஒலிபரப்பு அமைச்சக இணைச் செயலாளர் திரு விக்ரம் சஹே, மற்றும் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 

ஆராய்ச்சிப் பிரிவின் உருவாக்கம் கடந்த ஆண்டில் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மிக முக்கியமான புதிய முயற்சிகளில் ஒன்றாகவும், அரசாங்க தகவல் தொடர்புத் துறையில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டார்.

*******

MSV/PKV/BD



(Release ID: 1871762) Visitor Counter : 114