பிரதமர் அலுவலகம்

ஐக்கிய நாடுகள் சபையின் உலக புவிசார் சர்வதேச மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 11 OCT 2022 11:39AM by PIB Chennai

சர்வதேசப் பிரதிநிதிகளே, உலக புவிசார் துறையின் வல்லுநர்களே, மாநாட்டில் பங்கேற்றுள்ள நண்பர்களே,  இந்தியாவுக்கு வருக என வரவேற்கிறோம்.

 ஐநா சபையின் இரண்டாவது உலக புவிசார் சர்வதேச மாநாட்டின் ஒரு பகுதியாக உங்கள் அனைவருடனும் கலந்துரையாடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தர்ப்பத்தில் நாம் ஒன்றாக இணைந்து நமது எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்காக கூடியிருக்கும் உங்களை  வரவேற்பதில் இந்திய மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.  இந்த மாநாடு ஐதராபாத்தில் நடைபெறுவது சிறப்பான பொருத்தமாக அமைந்துள்ளது.  இந்த, நகரம், அதன் கலாச்சாரம் மற்றும் உணவு வகைகள், விருந்தோம்பல் மற்றும் உயர்தொழில்நுட்ப தொலைநோக்குப் பார்வைக்கு பெயர் பெற்றதாகும்.

நண்பர்களே!

 'உலகளாவிய புவிசார் இயக்கத்தை கட்டமைப்பதில் யாரும் விடுபடக்கூடாது' என்பது இந்த மாநாட்டின் கருப்பொருளாகும். கடந்த சில ஆண்டுகளாக இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகளில் இதனைக் காணலாம். கடைசி மைலில் உள்ள, கடைசி நபருக்கும் அதிகாரம் அளிக்கும் வகையிலான அந்தியோதயா என்னும் தொலைநோக்கில்  நாங்கள் பாடுபட்டு வருகிறோம்.   அமெரிக்காவின் மக்கள் தொகையை விட அதிக எண்ணிக்கையிலான, வங்கி கணக்கு இல்லாமல் இருந்த 450 மில்லியன்  பேருக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.  பிரான்ஸ் நாட்டின் மக்கள் தொகையை விட  இருமடங்கான 135 மில்லியன் மக்களுக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 110 மில்லியன் குடும்பங்களுக்கு சுகாதார வசதியும், 60 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. "யாரும் விடுபட்டுவிடக்கூடாது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளதை இது காட்டுகிறது.

நண்பர்களே!

 தொழில்நுட்பமும் திறமையும், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு முக்கிய இரண்டு தூண்கள். முதலில் தொழில்நுட்பம் என்ற முதல் தூணை பார்ப்போம்.  தொழில்நுட்பம் மாற்றத்தைக் கொண்டுவருகிறது. நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியா உலகின் முதலாவது நாடாக உள்ளது என்பதை உங்களில் சிலர் கேள்விபட்டிருக்கலாம்.  சிறு வியாபாரிகள் கூட, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஏற்று கொண்டிருப்பதை நீங்கள் காணலாம். இதே போல தொழில்நுட்பம் மூலம் கொவிட்-19 காலத்தில் ஏழைகளுக்கு நாங்கள் உதவினோம்.  தொழில்நுட்ப அடிப்படையிலான ஜன்தன் திட்டம், ஆதார், மொபைல் இணைப்பு, 800 மில்லியன் மக்களுக்கு நலத்திட்டங்களின் பயன்களை தடையின்றி வழங்க உதவியது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டமும், தொழில்நுட்பத் தளத்தின் வாயிலாக செயல்படுத்தப்பட்டது. இந்தியாவில், தொழில்நுட்பம் என்பது யாரையும் விலக்கி வைப்பதல்ல, எல்லோரையும் சேர்ப்பதாகும். நீங்கள் அனைவரும் 

புவிசார் துறையுடன் சம்பந்தப்பட்டுள்ளீர்கள். புவிசார் தொழில்நுட்பம் மூலம் அனைவரையும் சேர்த்து முன்னேறுவதை அறிந்து நீங்கள் பெருமகிழ்ச்சியடையலாம். எங்களது ஸ்வமிதா திட்டத்தை உதாரணத்திற்கு எடுத்துகொள்ளுங்கள். நாங்கள் கிராமங்களில் சொத்துக்களை வரைபடப்படுத்த ட்ரோன்களை பயன்படுத்தி வருகிறோம். இந்த தரவுகளை பயன்படுத்தி கிராமங்களில் வசிப்பவர்கள் தங்களை சொத்து அட்டைகளை பெற்றுள்ளனர். பல பத்து ஆண்டுகளில் முதல் முறையாக கிராம மக்கள் தெளிவான ஆவணங்களுக்கு சொந்தக்காரர்களாகி உள்ளனர். உலகில் எங்கிருந்தாலும் சொத்து உரிமைகள் தான் முன்னேற்றத்திற்கு அடித்தளம் என்பதை உங்களில் பலர் அறிவீர்கள். சொத்துக்களின் சொந்தக்காரர்கள் என்ற முக்கிய பயனாளிகளாக பெண்கள் ஆகும் போது இந்த முன்னேற்றம் மேலும் வலுப்படும்.

இதைத்தான் நாங்கள் இந்தியாவில் செய்துவருகிறோம். எங்களது பொது வீட்டுவசதி திட்டம் சுமார் 24 மில்லியன் ஏழை குடும்பங்களுக்கு வீடுகளை வழங்கியுள்ளது. அவர்களில் சுமார் 70 சதவீதத்தினர் பெண்கள் அல்லது கூட்டு உரிமையாளர்கள். இத்தகைய நடவடிக்கைகள், பாலின சமத்துவம் மற்றும் வறுமை குறித்த ஐநாவின் நீடித்த வளர்ச்சி இலக்குகள் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.  எங்களது முக்கிய திட்டமான பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டம் பன்மாதிரி உள்கட்டமைப்பை உருவாக்குவதாகும்.  இதற்கு புவிசார் தொழில்நுட்பம் பெரிதும் உதவுகிறது. எங்களது பெருங்கடல் டிஜிட்டல் தளம், எங்களது பெருங்கடல்களை நிர்வகிப்பதற்கான புவிசார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது. இது எங்களது சுற்றுச்சூழல், கடல்சார் சூழல்முறைக்கு மிகவும் முக்கியமானதாகும். புவிசார் தொழில்நுட்பத்தின் பயன்களை பகிர்ந்து கொள்வதில் இந்தியா ஏற்கனவே முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ளது.  எங்களது அண்டை நாடுகளில் தொலைத்தொடர்பு வசதியை அதிகரிக்க எங்களது தெற்காசிய செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே!

 இந்தியாவின் வளர்ச்சிப்பாதையில் தொழில்நுட்பமும், திறமையும் முக்கிய பங்கு வகிப்பதாக நான் ஏற்கனவே உங்களிடம் கூறினேன். இப்போது இரண்டாவது தூணாகிய திறமைக்கு வருவோம். இந்தியா புத்தாக்க உணர்வு கொண்ட ஒரு இளம் நாடாகும். உலகின் மிகச்சிறந்த ஸ்டார்ட் அப் மையங்களில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. 2021 ஆம் ஆண்டிலிருந்து யூனிகார்ன் ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ள - இந்தியாவின் இளம் திறமைக்கு ஒரு சான்றாகும். காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலையடைந்த 75 ஆண்டுகளை இந்தியா கொண்டாடி வருகிறது. விடுதலையில் மிகவும் முக்கியமான விடுதலை புத்தாக்கமாகும். இது இந்தியாவின் புவிசார் துறையை உறுதிசெய்துள்ளது. நாங்கள் இத்துறையை எங்களது பிரகாசமான இளைஞர்களுக்கு திறந்துவிட்டுள்ளோம். 200 ஆண்டுகளுக்கு மேலாக திரட்டப்பட்ட அனைத்து தரவுகளும் தற்போது திடீரென விடுவிக்கப்பட்டு, அணுகக்கூடியதாக மாறியுள்ளது. புவிசார் தரவுகளை சேகரித்து, உருவாக்கி, டிஜிட்டல் மயமாக்குவது தற்போது ஜனநாயகமாக்கப்பட்டுள்ளது. இத்தகைய சீர்திருத்தங்கள் விடுபட்டுவிடக்கூடாது, புவிசார் துறையுடன் சேர்த்து எங்களது ட்ரோன் பிரிவுக்கு முக்கிய உத்வேகத்தை நாங்கள் வழங்கியுள்ளோம். எங்களது விண்வெளித்துறை தனியார் பங்கேற்பிற்கு திறந்துவிடப்பட்டுள்ளது.  இந்தியாவில் 5ஜிசேவை  துவங்கப்பட்டுள்ளது. தற்போதைய தரவுகளை  அணுகுவதுடன், ட்ரோன் தொழில்நுட்பம் புதிய தரவுகள் விண்வெளி திறனுக்கான 

தளம், அதிவேக தொலைத்தொடர்பு ஆகியவற்றை வழங்கி இந்திய இளைஞர்கள் மற்றும் உலகுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும்.

நண்பர்களே!

யாரும் விடுபட்டுவிடக்கூடாது என்று நாம் கூறும் போது, இது எல்லாவற்றுக்கும் பொருந்தும். கொவிட்-19 தொற்றுநோய் அனைவரையும் அரவணைத்து  செல்வதற்கான ஒரு எச்சரிக்கை மணியாக உலகிற்கு இருந்திருக்க வேண்டும். வளர்ந்த நாடுகளின் கோடிக்கணக்கான மக்களுக்கு, மருத்துவ சிகிச்சை, மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், தடுப்பூசிகள் போன்றவை தேவைப்பட்டன.   நெருக்கடியான தருணத்தில் ஒருவருக்கொருவர் உதவும் அணுகுமுறை சர்வதேச சமூகத்தில் அவசியமாகும். ஐக்கிய நாடுகள் சபை போன்ற உலகளாவிய நிறுவனங்கள் ஒவ்வொரு பிராந்தியத்திலும் வளங்களை கடைசி மைல் வரை கொண்டு செல்வதில் வழிவகுக்க முடியும். பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதிலும், கைகோர்த்து செல்வது, தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகியவை முக்கியமானவை ஆகும். நாம் அனைவரும் ஒரே பூமியைத்தான் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். அதனை காப்பாற்றுவதற்கான சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்ளலாம் என நான் உறுதியளிக்கிறேன்.  புவிசார் தொழில்நுட்பம் வழங்கும் வாய்ப்புகளுக்கு அளவே இல்லை.  நீடித்த நகர்ப்புற வளர்ச்சி, பேரழிவுகளை நிர்வகித்தல், அவற்றை தணித்தல், பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் கண்காணித்தல், வன மேலாண்மை, நீர் மேலாண்மை, பாலைவனமாக்குதலை நிறுத்துதல், உணவுப் பாதுகாப்பு ஆகியவை இதில் அடங்கும். புவிசார் தொழில்நுட்பம் மூலம் நமது பூமிக்காக செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன. இந்த மாநாடு இது போன்ற முக்கியமான துறைகளில் முன்னேற்றம் குறித்து விவாதிக்கும் தளமாக அமைய வேண்டும் என நான் விரும்புகிறேன்.

நண்பர்களே!

 ஐநா இரண்டாவது உலக புவிசார் சர்வதேச மாநாடு எனக்கு நம்பிக்கையை ஊட்டியுள்ளது. உலகளாவிய புவிசார் துறையின் பங்குதாரர்கள் ஒன்றிணைந்து, கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் கல்வித்துறையினரை ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதால், இந்த மாநாடு உலகளாவிய கிராமத்தை ஒரு புதிய எதிர்காலத்திற்கு வழிநடத்த உதவும் என்று நான் நம்புகிறேன்.

நன்றி!

**************

PKV/AG/SM/IDS



(Release ID: 1866757) Visitor Counter : 275