பிரதமர் அலுவலகம்

விஸ்வகர்மா ஜெயந்தி அன்று ஐடிஐ திறன் மேம்பாட்டு பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

Posted On: 17 SEP 2022 4:35PM by PIB Chennai

வணக்கம்!

நாட்டில் உள்ள ஐடிஐ-களின் லட்சக்கணக்கான மாணவர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பை பெற்றிருப்பதற்காக நான் பெருமை அடைகிறேன். திறன் மேம்பாடு தொடர்பான பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களே, ஆசிரியர்களே, கல்வி உலகத்தின் பிரமுகர்களே, பெரியோர்களே, தாய்மார்களே!

21-ஆம் நூற்றாண்டில் புதிய வரலாறு  படைப்பதை நோக்கி நமது நாடு

சென்றுகொண்டிருக்கிறது.  முதன்முறையாக திறன் மேம்பாட்டு பட்டமளிப்பு விழாவில் 9 லட்சத்திற்கும் அதிகமான ஐடிஐ மாணவர்கள் திரட்டப்பட்டுள்ளனர். மெய்நிகர்  ஊடகம் வழியாக 40 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். திறன் மேம்பாட்டுப் பட்டமளிப்பு விழாவில்  உங்கள் அனைவருக்கும் நான் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.  இன்று மிகவும் புனிதமான ஒரு நாளும் கூட. இந்நாள் பகவான் விஸ்வகர்மாவின் பிறந்த நாளாகும்.  உங்களுக்கும் நாட்டு மக்கள் அனைவருக்கும்  பகவான் விஸ்வகர்மா ஜெயந்தியையொட்டி  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

நான்காவது தொழிற்புரட்சி சகாப்தத்தில் அதாவது தொழிற்புரட்சி 4.0-ல் இந்தியாவின் வெற்றிக்கு தொழிற்பயிற்சிக் கல்வி நிறுவனங்கள் பெரிய பங்களிப்பை செய்யவிருக்கின்றன. பணிகளின் தன்மையும் கூட காலத்திற்கேற்ப மாறி வருகின்றன. எனவே அரசு பல்வேறு சிறப்பு கவனங்களை மேற்கொண்டுள்ளது. இதனால் ஐடிஐ-களில் படிக்கும் மாணவர்கள் புதிய பாடத்திட்டங்களைப்  பெறுவதற்கு வகைசெய்யப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு விஷயத்தை நினைவு கொள்ள வேண்டும். உலகில் பல பெரிய நாடுகளின் கனவுகளை நிறைவேற்றவும் வேகத்தைப்  பராமரிக்கவும் திறமை வாய்ந்த  பணியாளர்கள் இன்று

தேவைப்படுகிறார்கள்.  உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உங்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

நண்பர்களே,

உங்களிடம் இன்னொரு வேண்டுகோளையும் முன்வைக்க நான் விரும்புகிறேன்.  இன்று நீங்கள் கற்றுக் கொண்டிருப்பது நிச்சயமாக உங்களின் எதிர்காலத்திற்கு அடிப்படையாகும்.  ஆனால்,  உங்களின் திறமைகளை எதிர்காலத்திற்கு ஏற்ப மேம்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே திறன்கள் என்று வரும்போது உங்களின் மந்திரம்  'திறன் பெறுவது', 'மறுதிறன் பெறுவது',  'திறனை மேம்படுத்திக் கொள்வது' என்பதாக இருக்க வேண்டும்.  உங்களின் துறை எதுவாக இருந்தாலும் அதில் புதிதாக என்ன நடக்கிறது என்பதை நீங்கள் எப்போதும் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்.

நண்பர்களே,  மேலும் ஒரு விஷயத்தை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட்டுக் கொள்ளாதீர்கள்.  உங்களின் திறன், மனவுறுதி,  அர்ப்பணிப்பு ஆகியவை  பிரகாசமான எதிர்கால இந்தியாவிற்கு மிகப்பெரிய சொத்துக்களாகும்.  திறமைகளையும், கனவுகளையும் கொண்ட  உங்களைப்போன்ற இளைஞர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பை நான் பெற்றதற்காகப்  பெருமை கொள்கிறேன். இன்றைய  உணர்வோடு  பகவான் விஸ்வகர்மாவின் ஆசிகளுடன் உங்களுடைய திறமை தொடர்ந்து மேம்பாடு அடையட்டும், விரிவடையட்டும்.  உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

 

மிக்க நன்றி!

 

******



(Release ID: 1860372) Visitor Counter : 101