பிரதமர் அலுவலகம்

பஞ்சாப், மொஹாலியில் உள்ள ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 24 AUG 2022 5:58PM by PIB Chennai

பஞ்சாப் ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித் அவர்களே, முதல்வர் திரு.பகவந்த் மான் அவர்களே, மத்திய அமைச்சரவையை சேர்ந்த டாக்டர் திரு.ஜிதேந்திர சிங் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு.மனீஷ் திவாரி அவர்களே, அனைத்து மருத்துவர்களே, ஆராய்ச்சியாளர்களே, மருத்துவ உதவியாளர்களே, பிற ஊழியர்களே, மற்றும் எனது அன்பு சகோதர, சகோதரிகளே, பஞ்சாபின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வந்துள்ளவர்களே..

சுதந்திரத்தின் அமிர்த காலத்திலிருந்து நாடு புதிய தீர்மானங்களை எட்டுவதை நோக்கி பயணிக்கிறது. நாட்டில் சுகாதார வசதிகள் வளர்ச்சி அடைந்துள்ளதை இன்றைய நிகழ்ச்சிகள் பிரதிபலிக்கின்றன. ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், பஞ்சாப், ஹரியானா மற்றும் இமாச்சல பிரதேச மக்களுக்கு பயனளிக்கும். இன்று நான் பஞ்சாப் மண்ணுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். பஞ்சாப் சுதந்திரப் போராட்ட வீரர்கள், புரட்சியாளர்களை கொண்ட தேசபக்தியின் பூமி. இல்லந்தோறும் மூவண்ணக்கொடி பிரச்சாரத்திலும் பஞ்சாப் தனது பாரம்பரியத்தை பறைசாற்றியது. வீடுகள்தோறும் மூவண்ணக்கொடி இயக்கத்தை வெற்றியடைய செய்ததற்கு, பஞ்சாப் மக்களுக்கு, குறிப்பாக பஞ்சாப் இளைஞர்களுக்கு எனது நன்றி.

நண்பர்களே....

சில தினங்களுக்கு முன்பு, இந்தியாவை வளர்ச்சி பெற்ற நாடாக மாற்றுவோம் என நாம் அனைவரும் செங்கோட்டையிலிருந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டோம். இந்தியாவை வளர்ச்சியடைய செய்வதற்கு, அதன் சுகாதார தேவைகளை மேம்படுத்துவது மிகவும் முக்கியமானது. சிகிச்சைக்கான நவீன வசதிகளுடன் நவீன மருத்துவமனைகள் மக்களுக்கு கிடைக்கும் போது அவர்கள் விரைவில் குணமடைந்து சரியான திசையை நோக்கி பயணிப்பார்கள். ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் வடிவில் மற்றொரு நவீன மருத்துவமனையை இந்தியா பெற்றுள்ளது. இந்த நவீன வசதியை ஏற்படுத்துவதில், மத்திய அரசின் டாடா நினைவு மையம் முக்கியப் பங்காற்றியுள்ளது. இந்த மையம் இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் தனது சேவைகள் வாயிலாக புற்றுநோயாளிகளை காப்பாற்றி வருகிறது. நாட்டில், புற்றுநோய்க்கான நவீன சிகிச்சை வசதிகளை ஏற்படுத்த மத்திய அரசு உறுதிப்பூண்டு, செயலாற்றி வருகிறது. டாடா நினைவு மையத்தில் தற்போது ஆண்டுதோறும் 1.5 லட்சம் புதிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது புற்று நோயாளிகளுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் தொலைதூரப் பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர், புற்றுநோய் உள்ளிட்ட பல தீவிர நோய்களுக்கு சிகிச்சைப் பெற சண்டிகரிலுள்ள முதுநிலைக் கல்வி நிலையத்துக்கு வருவது எனக்கு நினைவுள்ளது. அதிக கூட்டம் காரணமாக, நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருந்தது. தற்போது, இமாச்சலில் உள்ள பிலாஸ்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்பட்டு, புற்றுநோய்க்காக மிகப் பெரிய சிகிச்சை மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பிலாஸ்பூரில் உள்ள புற்றுநோயாளிகள் அங்கு செல்கின்றனர். மொஹாலிக்கு அருகில் வசிப்பவர்கள் இங்கு வருவார்கள்.

நண்பர்களே..

நாட்டில் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு இதுபோன்ற நவீன சிகிச்சை வசதி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். சுகாதார அமைப்பு என்பது, ஏழைகளின் ஆரோக்கியம், நோய்களிலிருந்து அவர்களை பாதுகாத்தல், நோய் ஏற்பட்டால் சிறந்த சிகிச்சை அளித்தல் ஆகியவையே. நல்ல சுகாதார அமைப்பு என்பது, நான்கு சுவர்களை கட்டுவது மட்டுமன்று. எந்தவொரு நாட்டிலும், அனைத்து வழிகளிலும் தீர்வுகளை காண்பது மற்றும் படிப்படியாக ஆதரவு அளிப்பதன் மூலமே, சுகாதார கட்டமைப்பு வலிமையாகும். கடந்த எட்டு ஆண்டுகளில், அரசின் முதன்மையான முன்னுரிமைகளில், சுகாதார சேவை வழங்குவது இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் சுகாதாரத் துறையில், கடந்த 7-8 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், கடந்த 70 ஆண்டுகளில் செய்யப்படவில்லை. இன்று ஏழை மக்கள் சுகாதாரமா வாழ, ஆறு முக்கிய அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் வாயிலாக சுகாதாரத்துறை வலுப்படுத்தப்பட்டுள்ளது. முதலாவதாக நோய்த்தடுப்பு சுகாதார மையத்தை ஏற்படுத்துதல், இரண்டாவதாக கிராமங்களில் சிறிய மற்றும் நவீன மருத்துவமனைகளை திறத்தல், மூன்றாவதாக நகரங்களில் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பெரிய மருத்துவ ஆராய்ச்சி கழகங்களை திறத்தல், நான்காவதாக நாடு முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், ஐந்தாவதாக நோயாளிகளுக்கு விலை குறைந்த மருந்துகள், உபகரணங்கள் மற்றும் ஆறாவதாக தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் நோயாளிகளின் சிரமங்களை குறைத்தல் ஆகிய ஆறு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஆயிரக்கணக்கான கோடிகளை முதலீடு செய்து மத்திய அரசு சாதனை படைத்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1854160

                                ***************



(Release ID: 1854564) Visitor Counter : 135