குடியரசுத் தலைவர் செயலகம்
மொசாம்பிக் நாடாளுமன்ற தூதுக்குழுவினர் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
29 JUL 2022 6:49PM by PIB Chennai
மொசாம்பிக் குடியரசின் நாடாளுமன்ற அவைத் தலைவர் திருமதி எஸ்பெராங்கா லாரிண்டா ஃபிரான்ஸிஸ்கோ நிஹியுவான் பியாஸ் தலைமையிலான அந்நாட்டு நாடாளுமன்ற தூதுக்குழுவினர், இன்று (29.07.2022) குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசினர்.
வெளிநாட்டு தூதுக்குழுவினரை வரவேற்றுப் பேசிய குடியரசுத் தலைவர், கடந்த 25 ஆம் தேதி தாம் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, குடியரசுத் தலைவர் மாளிகையில் முதல் சர்வதேச தூதுக்குழுவினராக மொசாம்பிக் நாடாளுமன்ற உறுப்பினர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டார். இருநாடுகளுக்கு இடையே உயர்மட்ட அளவிலான பரஸ்பர பயணங்களுடன், இந்தியாவும், மொசாம்பிக்கும் நெருங்கிய நட்புறவை கொண்ட நாடுகளாக திகழ்வதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாகவும், முக்கிய கூட்டாளியாக மொசாம்பிக் உள்ளது என்றும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார். மொசாம்பிக் நாட்டின் இயற்கை எரிவாயு மற்றும் சுரங்கத் துறைகளில் இந்திய நிறுவனங்கள் சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு முதலீடு செய்திருப்பதாகவும் அவர் கூறினார். மொசாம்பிக்கில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்காற்றி இருப்பதாகவும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.
***************
(Release ID: 1846295)
(வெளியீட்டு அடையாள எண்: 1846339)
வருகையாளர் எண்ணிக்கை : 214