தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

தவறான புரிதல் உருவாக்கப்பட்டால் ஊடகங்கள் சுயபரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் ; மத்திய அமைச்சர் திரு அனுராக் தாக்கூர்

Posted On: 23 JUL 2022 6:26PM by PIB Chennai

"யே ஆகாஷ்வானி ஹை", ஒவ்வொரு இந்தியனும் அடையாளம் காணக்கூடிய அமரத்துவம் பெற்ற  வார்த்தைகள். இன்று ஆகாஷ்வானி பவனில் உள்ள ரங் பவன் அரங்கத்தில், மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் திரு  அனுராக் தாக்கூர் அவர்கள் உச்சரித்தபோது, அது அகில இந்திய வானொலி தொடங்கப்பட்ட நாளான இன்று தேசிய ஒலிபரப்பு தினத்தை கொண்டாடுவதைக் குறித்ததுஇது 1927 முதல் ஒரு நீண்ட மற்றும் புகழ்பெற்ற பயணமாக தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் இடையே உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு அனுராக் தாக்கூர், தொலைக்காட்சி, இணையத்தின் வருகையால் வானொலிக்கு  நெருக்கடி ஏற்படப் போகிறது என்று சிலர் கருதிய போது, வானொலி அதன் பார்வையாளர்களை அடையாளம் கண்டு, அதன் இருப்பை மட்டுமல்லாமல், அதன் நம்பகத்தன்மையையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இன்று, மக்கள் நடுநிலையான செய்திகளைக் கேட்க விரும்பும்போது, அவர்கள் இயல்பாகவே ஆல் இந்தியா ரேடியோ மற்றும் தூர்தர்ஷன் செய்திகளுக்கு மாறுகின்றனர் என்று அவர் கூறினார். நாட்டின் 92 சதவீத பகுதிகள் மற்றும் 99 சதவீத மக்களை அகில இந்திய வானொலி சென்றடைந்துள்ளது பாராட்டத்தக்க சாதனையாகும் என்றார் அவர்.

வானொலியின் முக்கியத்துவத்தைப் பற்றிக் குறிப்பிட்ட திரு தாக்கூர், பல பிரதமர்கள் வந்திருக்கிறார்கள், ஆனால் வானொலியின் மதிப்பை யாரும் பார்க்கவில்லை, பிரதமர் நரேந்திர மோடி, தனது மாதாந்திர மனதின் குரல் நிகழ்ச்சிக்கு, மக்களுடன் நேரடியாக இணையும் ஒரு தளமாக அதைத் தேர்ந்தெடுத்தார்.

 நாட்டின் ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர், 'ஊடகங்கள் நடத்தும் வழக்கு விசாரணைகள்' என்ற பெயரில் தனியார் ஊடகங்கள் வாயிலாக எங்காவது தவறான கருத்து உருவாக்கப்படுமானால், நமது செயல்பாடுகள் குறித்து நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்.

விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் முக்கியத்துவத்தை  வழங்குவதில் அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் ஆகிய இரு நிறுவனங்களின் பங்கை பாராட்டிய அமைச்சர், சுதந்திரத்திற்குப் பிறகு பாடத்திட்டங்கள் பல பிராந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்கைக் குறிப்பிடாதபோது, வானொலி மற்றும் தூர்தர்ஷன் தகவல்களை சேகரித்தன. நாட்டின் தொலைதூர மூலைகளிலிருந்து ஐநூறுக்கும் மேற்பட்ட வெளியே தெரியாத  மாவீரர்கள் மற்றும் சுதந்திரப் போராட்டத்திற்கான அவர்களின் பங்களிப்பைக் கொண்டாடும் வகையில் அதை தேசத்திற்கு வழங்கின.

இரண்டு நிறுவனங்களுக்கும் உள்ளடக்கத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய அமைச்சர், உள்ளடக்கம்தான் மக்களை இந்த அலைவரிசைக்கு ஈர்த்தது என்றும், கோபுரங்கள் மூலம் எவ்வளவு தூரம் சென்றடைந்தாலும் உள்ளடக்கத்தின் முக்கியத்துவத்தை ஒப்பிட முடியாது என்றும் கூறினார். டிஜிட்டல் யுகத்தில், வானொலி மக்கள் மத்தியில் தனது இருப்பை வலுப்படுத்தப் போகிறது என்று அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.

தேசிய ஒலிபரப்பு தினத்தை முன்னிட்டு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் பார்வையாளர்களுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார். சுதந்திரப் போராட்டத்தின் போது வானொலியை பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசுக்கு எதிரான தகவல் பரிமாற்றத்திற்கான கருவியாகப் பல சுதந்திரப் போராளிகள் பயன்படுத்தியதை, டாக்டர் முருகன் சுட்டிக்காட்டினார். நாட்டின் தொலைதூர மூலை முடுக்குகளை  இணைப்பதில் வானொலி ஆற்றிய பங்கை அவர் நினைவுகூர்ந்தார். பிரசார் பாரதி உலகின் மிகப்பெரிய பொது ஒலிபரப்பு நிறுவனமாக திகழ்கிறது என்று  பெருமிதம் பொங்க கூறினார்.

பிரசார் பாரதியின் தலைமை செயல் அதிகாரி திரு மயங்க் அகர்வால், தொலைக்காட்சி மற்றும் வானொலி ஆகிய இரண்டு ஊடகங்களின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார், மேலும் இதில் வெளியாகும் செய்திகள், தனியார் ஊடகங்களோடு ஒப்பிடுகையில் கூடுதல் நம்பகத்தன்மையுடன் சிறந்து விளங்குவதாகவும், பல்வேறு ஆய்வுகள் மூலம் இது நிரூபணமானதாகவும் கூறினார்.

அகில இந்திய வானொலியின் தலைமை இயக்குநர் திரு என். வேணுதர் ரெட்டி, பிரசார் பாரதி, தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியின் மூத்த அதிகாரிகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

•••••••••••••



(Release ID: 1844281) Visitor Counter : 174