பிரதமர் அலுவலகம்

தில்லியின் பிரகதி மைதானத்தில் பாரத் ட்ரோன் மஹோத்சவத்தின் தொடக்கவிழாவில் பிரதமரின் உரை

Posted On: 27 MAY 2022 3:27PM by PIB Chennai

மத்திய அமைச்சரவையின் எனது சக நண்பர்கள், நாடு முழுவதிலுமிருந்து கலந்துகொண்டுள்ள விருந்தினர்கள் மற்றும் இதர பிரமுகர்கள் அனைவருக்கும் வணக்கம்!

இந்தியாவில் ட்ரோன் தொழில்நுட்பம் பெற்றிருக்கும் வரவேற்பு என்னை ஆச்சரியப்படுத்துகிறது. இந்தியாவில் ட்ரோன் சேவைகள் மற்றும் ட்ரோன் சார்ந்த தொழில்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கான பிரதிபலிப்பின் சக்தியை இங்கு காணமுடிகிறது. இந்தியாவில் வேலை வாய்ப்பு உருவாக்கத்திற்கான அபரிமிதமான சாத்தியங்களை இது எடுத்துரைக்கிறது. புதிய நிறுவனங்கள் வழங்கும் சக்தியால் உலகளவில் ட்ரோன் தொழில்நுட்பத்தின் வல்லரசாக மாறுவதை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறுகிறது.

நண்பர்களே,

தொழில்நுட்பத்தின் கொண்டாட்டமாக மட்டுமல்லாமல் புதிய இந்தியாவின் புதிய ஆளுகை மற்றும் புதிய சோதனைகளை நோக்கிய முன் எப்போதும் இல்லாத நேர்மறையான விஷயங்களைக் கொண்டாடும் விதமாகவும் இந்தத் திருவிழா அமைந்துள்ளது. குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுகை என்ற பாதையைப் பின்பற்றி எளிதான வாழ்வு மற்றும் எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதற்கு நாம் முன்னுரிமை அளித்தோம். அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற தாரக மந்திரத்துடன் அரசுடன் ஒவ்வொரு நபரையும் நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் இணைக்கும் பாதையை நாம் தேர்ந்தெடுத்தோம். நாட்டில் சேவைகளை அணுகவும், விநியோகிக்கவும் இருந்துவந்த இடைவெளியை நீக்க நவீன தொழில்நுட்பத்தை சார்ந்து, அவற்றை அமைப்புமுறையின் ஓர் அங்கமாக மாற்றினோம்.

நண்பர்களே,

முந்தைய அரசு காலங்களில் தொழில்நுட்பம் என்பது பிரச்சினையின் ஓர் அங்கமாக கருதப்பட்டது இதை ஏழைகளுக்கு எதிரானதாக நிரூபிக்க முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு ஆளுகையில் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டில் வேறுபட்ட சூழல் காணப்பட்டது.  புதிய தொழில்நுட்பம், இடையூறை ஏற்படுத்தும் என்பது மறுப்பதற்கு அல்ல. புதிய ஊடகங்களை அது நாடுவது புதிய அத்தியாயங்களை எழுதி புதிய பாதையையும், புதிய அமைப்புமுறைகளையும் உருவாக்குகிறது. கடைசி மைல் விநியோகத்தை உறுதி செய்வது மற்றும் முழுமையான நிலை என்ற தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வது ஆகியவற்றில் தொழில்நுட்பம் மிகப்பெரிய பங்காற்றியுள்ளது.

நண்பர்களே,

நமது தொழில்நுட்பத் தீர்வுகளை சரியாக வடிவமைத்து திறம்பட மேம்படுத்தி செயல்படுத்துவது நமது சக்தியாகும், இன்று இந்தியா உலகின் மிகப்பெரிய தடுப்பூசித் திட்டத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. வலுவான யுபிஐ திட்ட வடிவமைப்பின் உதவியால் ஏழை மக்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்படுகிறது. 21-ஆம் நூற்றாண்டின் புதிய இந்தியாவிற்கு புதிய வலிமை, வேகம் மற்றும் அளவை வழங்குவதற்காக தொழில்நுட்பத்தை ஒரு முக்கிய கருவியாக நாம் செயல்படுத்துகிறோம். சிறந்த ஆளுகை மற்றும் எளிதான வாழ்வு என்ற உறுதிப்பாட்டை முன்னெடுத்துச் செல்வதற்காக ட்ரோன் தொழில்நுட்பமும் ஊக்குவிக்கப்படுகிறது. கிராமப்புறங்களில் வசிக்கும் விவசாயிகளின் வாழ்க்கையை வளமானதாகவும், வசதியானதாகவும் மாற்றுவதில் தொழில்நுட்பமும் முக்கிய பங்கு வகிக்கவுள்ளது. மாபெரும் புரட்சியின் அடித்தளமாக தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு பிரதமரின் ஸ்வாமித்வா திட்டமும் ஒரு சிறந்த உதாரணம். ட்ரோன் தொழில்நுட்பத்தில் நமது விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுவதுடன் இதனை பயன்படுத்தவும் தயாராக உள்ளனர். கடந்த 7-8 ஆண்டுகளில் வேளாண்மைத் துறையில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டதால் இது சாத்தியமாகியுள்ளது.

இந்த ட்ரோன் மஹோத்சவம் அனைவருக்கும் மிகுந்த பயனளிக்கும் என்று நான் நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்வாழ்த்துகள்.

மிக்க நன்றி!

பொறுப்புதுறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

***************



(Release ID: 1829807) Visitor Counter : 128