பிரதமர் அலுவலகம்

டோக்கியோ-வில் பிரதமர் தலைமையில் தொழிலதிபர்களின் வட்ட மேஜை கூட்டம்

Posted On: 23 MAY 2022 4:09PM by PIB Chennai

டோக்கியோ-வில் ஜப்பானிய தொழிலதிபர்களின் வட்டமேஜை கூட்டத்துக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தலைமைவகித்தார்.

இந்த நிகழ்வில் 34 ஜப்பானிய நிறுவனங்களைச் சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் மற்றும் தலைமை செயல் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் ஏற்கனவே இந்தியாவில் முதலீடு செய்து செயல்பாட்டில் உள்ளன. ஆட்டோமொபைல்ஸ், எலெக்ட்ரானிக்ஸ், செமிகண்டக்டர்ஸ், உருக்கு, தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் வங்கி மற்றும் நிதி உள்ளிட்ட பல்வேறுபட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும், கெய்தன்ரேன், ஜப்பான் வெளி வர்த்தக அமைப்பு (ஜெட்ரோ), ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (ஜிகா), சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கி (ஜேபிஐசி), ஜப்பான்-இந்தியா வர்த்தக ஆலோசனைக் குழு (ஜேஐபிசிசி), இன்வெஸ்ட் இந்தியா போன்ற இந்தியா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த முக்கிய வர்த்தக அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் கலந்துகொண்டன.

இந்தியா-வும், ஜப்பானும் இயற்கையான கூட்டாளிகள் என்று குறிப்பிட்ட பிரதமர், இந்தியா-ஜப்பான் நல்லுறவின் தூதர்களாக வர்த்தக சமூகத்தினர் இருப்பதாக பாராட்டு தெரிவித்தார். மேலும் பிரதமர் பேசும்போது, பிரதமர் கிஷிடா, இந்தியாவுக்கு கடந்த மார்ச் மாதத்தில் பயணம் மேற்கொண்டபோது, அடுத்த 5 ஆண்டுகளில் ஜப்பானிலிருந்து 5 லட்சம் கோடி யென் முதலீடு செய்வது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது என்றார். இந்தியா ஜப்பான் இடையே தொழில் துறை போட்டித்திறன் ஒத்துழைப்பு, தூய்மை எரிசக்தி ஒத்துழைப்பு போன்ற பொருளாதார உறவுகளில் அண்மைக்காலமாக ஏற்பட்ட முன்னேற்றங்களை பிரதமர் குறிப்பிட்டார். தேசிய கட்டமைப்பு திட்டம், உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகை திட்டம், செமிகண்டக்டர்களுக்கான கொள்கை போன்ற நடவடிக்கைகள் குறித்தும் பேசினார். இந்தியாவில் புதிய நிறுவனங்கள் தொடங்குவதற்கான சூழல் இருப்பதையும் எடுத்துரைத்தார்.

சர்வதேச அளவில் அந்நிய நேரடி முதலீட்டு அளவு குறைந்துள்ளபோதிலும், முந்தைய நிதியாண்டில் இந்தியா சாதனை அளவாக 8,400 கோடி அமெரிக்க டாலர்கள் அளவுக்கு அந்நிய நேரடி முதலீட்டை பெற்றிருப்பதை அவர் குறிப்பிட்டார். இது இந்தியாவின் பொருளாதாரத் திறன் மீதான நம்பிக்கைக்கான அடையாளம் என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் ஜப்பான் நிறுவனங்கள் மிகப்பெரும் பங்களிப்பை செய்ய வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பானின் பங்களிப்பை கொண்டாடும் வகையில், ஜப்பான் வாரம் போன்ற நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று பிரதமர் ஆலோசனை தெரிவித்தார்.

வர்த்தக அமைப்பில் கீழ்க்காணும் தொழிலதிபர்கள் கலந்துகொண்டனர்.

***



(Release ID: 1827864) Visitor Counter : 149