பிரதமர் அலுவலகம்

பிரம்ம வித்யாலயாவின் பொன்விழா மற்றும் சிவகிரி புனித யாத்திரையின் 90-வது ஆண்டின் ஓராண்டு கால கொண்டாட்டத்தின் தொடக்க விழாவில் பிரதமர் பங்கேற்றார்


“மாறுபட்ட காலங்களில் மாறுபட்ட ஊடகங்கள் வழியே முன்னேறிச் செல்லும் இந்தியாவின் அழியாத பயணத்தை இந்தக் கூட்டு விழா அடையாளப்படுத்துகிறது”

“நமது ஆற்றல் மையங்கள் வெறும் புனிதத் தளங்களாவும், நம்பிக்கை மையங்களாக மட்டுமல்லாமல் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்னும் எழுச்சி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் அமைப்புகளாக திகழ்கின்றன”

“இந்தியாவில் நமது துறவிகளும், ஆன்மீக குருக்களும் நமது எண்ணங்களை எப்போதும் தூய்மையாக்கி நமது நடத்தையை உயர்த்தி உள்ளனர்”

“சாதீயிசம் என்ற பெயரில் நிலவிய வேறுபாட்டுக்கு எதிராக தர்க்கரீதியாகவும் நடைமுறைக்கு ஏற்ற வகையிலும் ஸ்ரீ நாராயண குரு போராடினார். இன்று நாராயண குருவின் அதே உணர்வுடன் நாடு ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு சேவை புரிந்து வருவதுடன் அவர்களது உரிமைகளையும் வழங்கி வருகிறது”

“ஸ்ரீ நாராயண குரு பகுத்தறிவு சிந்தனைவாதியாகவும், நடைமுறை சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார்”

“நாம் சமுதாய சீர்திருத்தப்பாதையில் நடைபோடும்போது, சுயமுன்னேற்ற ஆற்றல் சமுதாயத்தில் விழிப்பை ஏற்படுத்தும், இதற்கு ‘பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்

Posted On: 26 APR 2022 12:29PM by PIB Chennai

சிவகிரி புனித யாத்திரையின் 90-வது ஆண்டு மற்றும் பிரம்ம வித்யாலயாவின் பொன் விழா ஆகியவற்றின் ஓராண்டு கால கூட்டுக் கொண்டாட்டத்தின் துவக்க விழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் பங்கேற்றார். இந்த ஓராண்டு கால கொண்டாட்டத்திற்கான இலச்சினையையும் அவர் வெளியிட்டார். சிவகிரி புனித யாத்திரை, பிரம்ம வித்யாலயா ஆகியவை பெரும் சமூக சீர்திருத்தவாதியான ஸ்ரீ நாராயண குருவின் வழிகாட்டுதலுடன் தொடங்கப்பட்டவையாகும். சிவகிரி மடத்தைச் சேர்ந்த ஆன்மீக தலைவர்கள், பக்தர்கள் ஆகியோருடன் மத்திய அமைச்சர்கள் திரு.ராஜீவ் சந்திரசேகர், திரு.வி.முரளிதரன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தமது இல்லத்தில் துறவிகளை வரவேற்றது தமக்கு மகிழ்ச்சியை அளித்ததாக பிரதமர் குறிப்பிட்டார். பல ஆண்டுகளாக சிவகிரி மடத்தின் துறவிகளையும், பக்தர்களையும் தாம் சந்தித்து வந்ததை நினைவுகூர்ந்த அவர், கலந்துரையாடல்கள் மூலம் தமக்கு சக்தி கிடைத்தது பற்றி குறிப்பிட்டார். உத்தராகண்ட் – கேதார்நாத் விபத்து காலத்தினை நினைவுகூர்ந்த அவர், மத்தியில் காங்கிரஸ் அரசும், பாதுகாப்புத் துறை அமைச்சராக கேரளாவைச் சேர்ந்தவர் இருந்தபோதிலும் குஜராத் முதலமைச்சர் என்ற முறையில் தாம் சிவகிரி மடத்தின் துறவிகளுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதை சுட்டிக்காட்டினார். இந்த நிகழ்ச்சியை தாம் ஒருபோதும் மறந்ததில்லை என்றும் பிரதமர் கூறினார்.

சிவகிரி புனித யாத்திரையின் 90 ஆவது ஆண்டு மற்றும் பிரம்ம வித்யாலயாவின் பொன்விழா கொண்டாட்டத்தை பாராட்டிய பிரதமர், இவை வெறும் புனிதத் தலங்களுக்கான பயணமாக மட்டும் சுருக்கிக் கொள்ளாமல் பல்வேறு காலங்களில் பல்வேறு ஊடகங்கள் மூலம் இந்தியா வளர்ந்து வருவதை சுட்டிக்காட்டினார். “சிவபெருமானின் நகரான வாரணாசியாக இருந்தாலும் அல்லது வர்கலாவின் சிவகிரியாக இருந்தாலும் இந்தியாவின் ஒவ்வொரு ஆற்றல் மையமும் அனைத்து இந்தியர்களின் வாழ்க்கையில் சிறப்பிடம் பெற்றுள்ளன.  இவை வெறும் புனிதத் தலங்களாவும், நம்பிக்கை மையங்களாக மட்டுமல்லாமல் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்னும் எழுச்சி பற்றி விழிப்பை ஏற்படுத்தும் அமைப்புகளாகத் திகழ்கின்றன” என்று அவர் கூறினார்.

பல நாடுகள் தங்களது தர்மத்திலிருந்து வழுவிச் செல்லும் நிலையில், இந்தியா தனது ஆன்மீகத்தைக் கொண்டு செல்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். நமது துறவிகள் இந்தியாவில் நமது துறவிகளும், ஆன்மீக குருக்களும் நமது எண்ணங்களை எப்போதும் தூய்மையாக்கி நமது நடத்தையை உயர்த்தி உள்ளனர் என்று அவர் கூறினார். ஸ்ரீ நாராயண குரு நவீனம் குறித்து பேசியதாக கூறிய பிரதமர், ஆனால் அவர் இந்தியக் கலாச்சாரம் மற்றும் விழுமியங்களால் செழுமை பெற்றிருந்தார் என்று கூறினார். கல்வி, அறிவியல் பற்றி அவர் பேசினாலும், தர்மம், நம்பிக்கை மற்றும் ஆயிரமாண்டு பழமை வாய்ந்த பாரம்பரியத்தின் புகழை உயர்த்த அவர் ஒருபோதும் தயங்கியதில்லை என்று திரு.மோடி கூறினார். ஸ்ரீ நாராயண குரு தீமைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்து இந்தியாவை தனது உண்மையான நிலையை புரிந்து கொள்ள வைத்தார் என்று அவர் தெரிவித்தார். சாதீயிசம் என்ற பெயரில் நிலவிய வேறுபாட்டுக்கு எதிராக தர்க்கரீதியாகவும் நடைமுறைக்கு ஏற்ற வகையிலும்
ஸ்ரீ நாராயண குரு போராடினார். இன்று நாராயண குருவின் அதே உணர்வுடன் நாடு ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு சேவை புரிந்து வருவதுடன் அவர்களது உரிமைகளையும் வழங்கி வருவதாக பிரதமர் தெரிவித்தார். அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி என்ற தாரக மந்திரத்துடன் நாடு முன்னேறிச் செல்வதாக அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீ நாராயண குரு பகுத்தறிவு சிந்தனைவாதியாகவும், நடைமுறை சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார் என்று குறிப்பிட்ட பிரதமர், குரு அவர்கள் எப்போதும் விவாதத்தின் அழகை பின்பற்றியதுடன் மற்றவர்களின் கருத்தை புரிந்து கொண்டு மற்றவர்களுடன் சேர்ந்து தமது கருத்தை தெளிவாக தெரிவிக்க முயற்சி செய்ததாக குறிப்பிட்டார்.

சமுதாயத்தில் உரிமையுடன் கூடிய சுயமுன்னேற்ற திசையை நோக்கிய சூழலை உருவாக்க அவர் முயன்றதாக பிரதமர் குறிப்பிட்டார். நாம் சமுதாய சீர்திருத்தப்பாதையில் நடைபோடும்போது, சுயமுன்னேற்ற ஆற்றல் சமுதாயத்தில் விழிப்பை ஏற்படுத்தும், இதற்கு ‘பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்என்பது ஒரு சமீபத்திய உதாரணமாகும். இந்தியர்களாகிய நமக்கு ஒரேயொரு சாதிதான் உள்ளது, அதாவது இந்தியத்துவம் என்பதுதான் அது என்று குறிப்பிட்ட பிரதமர், நமக்கு ஒரே சேவை, தர்மம் மற்றும் கடமை என்ற ஒரே மதம் தான் உள்ளது. நமது ஒரே கடவுள் அன்னை இந்தியா. ‘ஒரே சாதி, ஒரே மதம், ஒரே கடவுள் என்ற ஸ்ரீ நாராயண குருவின் கருத்து நமது தேசப்பற்றுக்கு ஆன்மீக வடிவத்தை வழங்குவதாக பிரதமர் கூறினார். “ஒன்றுபட்ட இந்தியர்களுக்கு உலகில் எதுவும் முடியாதது அல்ல என்பது  நம் அனைவருக்கும் தெரியும் என்றார் அவர்.

விடுதலையின் அமிர்தப் பெருவிழா காலத்தில் பிரதமர் மீண்டும் விடுதலைப் போராட்டம் குறித்த பகுப்பாய்வை முன்னெடுத்தார். பிரதமரை பொறுத்தவரை விடுதலைப் போராட்டத்தின் ஆன்மீக அடித்தளம் உள்ளது என்று நம்புகிறார். “நமது விடுதலைப் போராட்டம் எதிர்ப்புக் குரல் எழுப்புவது, அரசியல் உத்திகளுடன் ஒருபோதும் சுருங்கியதில்லை. அடிமைத்தளையை உடைக்கும் போராட்டமாக இருந்தபோதிலும் சுதந்திர நாடாக நாம் எப்படி மாறினோம் என்பதை தெரிவித்துள்ளதுடன், எதிர்ப்பு என்பது முக்கியமானதல்ல என்றும், அனைவரும் ஒன்றாக நின்றதுதான் முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விடுதலைப் போராட்ட வீரர்களுடன் ஸ்ரீ நாராயண குரு நடத்திய கூட்டங்கள் பற்றி பிரதமர் நினைவுகூர்ந்தார். குருதேவ் ரவீந்திர நாத் தாகூர், மகாத்மா காந்தியடிகள், சுவாமி விவேகானந்தர் மற்றும் பல தலைவர்கள் ஸ்ரீ நாராயண குருவை பல்வேறு சமயங்களில் சந்தித்துள்ளனர். இந்தக் கூட்டங்களில் இந்தியாவை மறுகட்டுமானம் செய்வதற்கான விதைகள் விதைக்கப்பட்டன என்று பிரதமர் தெரிவித்தார். அதன் பலன் இன்றைய இந்தியாவில் தெளிவாக தெரிகிறது என்றும் இந்தியா தனது சுதந்திரத்தின் 75-வது ஆண்டை கொண்டாடுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இன்னும் 10 ஆண்டுகளில் சிவகிரி புனித யாத்திரை, இன்னும் 25 ஆண்டுகளில் இந்தியாவின் சுதந்திரம் ஆகியவை நூற்றாண்டை கொண்டாடும் என்று குறிப்பிட்ட அவர், இந்த சூழலில் நமது சாதனை மற்றும் தொலைநோக்கு உலகளாவிய பரிமாணத்துடன் இருக்க வேண்டுமென்று கூறினார்.

சிவகிரி புனித யாத்திரை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 30-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை 3 நாட்களுக்கு திருவனந்தபுரத்தில் உள்ள சிவகிரியில் நடைபெறும். புனித யாத்திரையின் நோக்கம் மக்களிடையே விரிவான அறிவை உருவாக்குவதாக இருக்க வேண்டும் என்ற ஸ்ரீ நாராயண குருவின் பொன்மொழிக்கேற்ப புனித யாத்திரை ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உதவுவதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். எனவே புனித யாத்திரை, கல்வி, தூய்மை, பக்தி, கைவினைப் பொருட்கள், வர்த்தகம், வேளாண்மை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய 8 துறைகளில் இந்தப் புனித யாத்திரை கவனம் செலுத்துவதாக இருக்க வேண்டும்.

1933 ஆம் ஆண்டு சில பக்தர்கள் ஆரம்பித்த இந்த புனித யாத்திரை தென்னிந்தியாவில் ஒரு முக்கிய பெரும் நிகழ்வாக மாறியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள், சாதி, இனம், மதம், மொழி ஆகியவற்றை கடந்து சிவகிரிக்கு பயணம் செய்து புனித யாத்திரையில் பங்கேற்கின்றனர்.

ஸ்ரீ நாராயண குரு ஓரிடத்தை உருவாக்கி அனைத்து மதத்தை சேர்ந்த மக்களுக்கும் சம மரியாதை, சமத்துவத்தை போதித்தார். சிவகிரியின் பிரம்ம வித்யாலயா இந்த தொலைநோக்குக்காக ஏற்படுத்தப்பட்டது. பிரம்ம வித்யாலயாவில் இந்திய தத்துவம் குறித்த 7 ஆண்டு படிப்பு கற்பிக்கப்படுகிறது. இதில் ஸ்ரீ நாராயண குருவின் நூல்கள் உட்பட உலகின் அனைத்து முக்கிய மதங்களின் வேத நூல்களும் இதில் இடம் பெறுகின்றன.


***************



(Release ID: 1820174) Visitor Counter : 192