சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

சுகாதார அமைச்சகத்தின் முதன்மைத் தொலைமருத்துவ சேவையான “இசஞ்சீவனி” 3 கோடி மருத்துவ ஆலோசனைகளைப் பதிவு செய்து சாதனை: முதல் 5 இடங்களில் தமிழகம்

Posted On: 25 MAR 2022 2:07PM by PIB Chennai

தனது இணைய வழிச்  சுகாதாரப்  பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை இந்தியா கடந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் இசஞ்சீவனி தொலைமருத்துவ சேவை 3 கோடி மருத்துவ ஆலோசனைகளைத் தாண்டியுள்ளது. மேலும், ஒரே நாளில் 1.7 லட்சம் ஆலோசனைகளை வழங்கி இசஞ்சீவனி புதிய சாதனையையும்  படைத்துள்ளது.

 

சில மாநிலங்களில், வாரத்தின் அனைத்து நாட்களிலும் இந்தச்  சேவை செயல்படுகிறது. மேலும் சில மாநிலங்களில் 24 மணி நேரமும் இயங்குகிறது. கொவிட்-19-ன் போது தொலைமருத்துவ சேவை கணிசமாக பங்களித்ததோடு மருத்துவமனைகளின்  சுமையையும் குறைத்தது.

 

நோயாளிகள் டிஜிட்டல் முறையில் தொலைதூரத்தில் உள்ள மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை பெற இது உதவியது. பயனாளிகளின் வீடுகளுக்கு தரமான சுகாதாரச்  சேவைகளை கொண்டு செல்வதன் மூலம் கிராமப்புற நகர்ப்புற இடைவெளியைக் குறைக்க இது உதவியது.

 

3 கோடி பயனாளிகளில், 2,26,72,187 பேர் இசஞ்சீவனி ஆயுஷ்மான் பாரத்-சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் தளம் மூலமாகவும், 73,77,779 பேர் இசஞ்சீவனி வெளி நோயாளிகள் பிரிவு மூலமாகவும் பலன்களைப் பெற்றுள்ளனர். தேசிய தொலைமருத்துவ சேவையில் பயனாளிகளுக்கு சேவை செய்ய 1,00,000 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், நிபுணர்கள் உள்ளிட்டோர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

 

இசஞ்சீவனி மருத்துவ ஆலோசனைகளைப் பயன்படுத்தியதில்   ஆந்திரப் பிரதேசம் முதலிடத்திலும், கர்நாடகா இரண்டாம் இடத்திலும், மேற்கு வங்கம் மூன்றாம் இடத்திலும், தமிழ்நாடு நான்காவது இடத்திலும், உத்தரப் பிரதேசம் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

 

தமிழகத்தின் மொத்த ஆலோசனைகளின் எண்ணிக்கை 18,56,861. இதில் இசஞ்சீவனி ஆயுஷ்மான் பாரத்-சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் தளம் மூலமாக 1,52,721 ஆலோசனைகளும், இசஞ்சீவனி வெளி நோயாளிகள் பிரிவு மூலமாக 17,04,140 ஆலோசனைகளும் பெறப்பட்டுள்ளன.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1809569

***************



(Release ID: 1809649) Visitor Counter : 266