ரெயில்வே அமைச்சகம்

கவாச் என்கிற ரயில்வே பாதுகாப்பு நடைமுறை சோதனையை மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார்

Posted On: 04 MAR 2022 5:13PM by PIB Chennai

பயணிகள் பாதுகாப்புக்கான கவாச் எனும் ரயில் வண்டிகள் மோதல் தடுப்புக் கருவியின் செயல்பாட்டை மத்திய ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார்.

தெற்கு மத்திய ரயில்வேயில் குல்லாகுடா-சிட்கிட்டா ரயில் நிலையங்களுக்கிடையே இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது இரண்டு ரயில் என்ஜின்கள் எதிரெதிரான திசையில் வருகின்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டது. இந்த என்ஜின்களில் பொருத்தப்பட்ட கவாச் விபத்து தடுப்புக் கருவி தாமாகவே செயல்பட்டு 380 மீட்டருக்கு அப்பால் இரண்டு எஞ்சின்களையும் நிறுத்தி விட்டது. இதே போல் சிவப்பு சமிக்ஞை விளக்கு வரும் போது ஓட்டுனர் பிரேக்கை பயன்படுத்தாமலேயே கவாச் கருவி என்ஜின் செயல்பாட்டை நிறுத்திவிட்டது. இணைப்பு பாதைகள் வரும் போது ரயில் வண்டியின் வேகத்தை மணிக்கு 60 கி.மீ. என்பதிலிருந்து மணிக்கு 30 கி.மீட்டராக கவாச் கருவி தானாகவே குறைப்பதையும் அமைச்சர் பார்வையிட்டார்.

 இந்த பரிசோதனை நடத்தப்பட்ட போது ரயில்வே அமைச்சருடன் ரயில்வே வாரியத் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான திரு வி கே திரிபாதி, இதர மூத்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

 ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரங்கள் நிறுவனத்தால் தானியங்கி ரயில் வண்டி பாதுகாப்பு முறையான கவாச் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாகும். இந்த தொழில்நுட்பம் ஏற்றுமதி வாய்ப்புகளையும் உருவாக்கும். தற்சார்பு இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக 2022-23-ல் 2000 கி.மீ. ரயில் பாதை கவாச் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்படும்.

 மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1802968

***************



(Release ID: 1803001) Visitor Counter : 336