பாதுகாப்பு அமைச்சகம்

நாடு முழுவதும் உள்ள நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட பொது சேவை மையங்களில் ஸ்பார்ஷ் திட்டத்தின் கீழ் ஓய்வூதிய சேவைகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது

Posted On: 24 FEB 2022 2:00PM by PIB Chennai

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சிறப்பு அமைப்பான  நாடு முழுவதும் உள்ள நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட பொது சேவை மையங்களில், ஓய்வூதிய நிர்வாக நடைமுறை (பாதுகாப்பு) (ஸ்பார்ஷ்) திட்டத்தின் கீழ், வசிப்பிடத்திற்கு அருகிலேயே ஓய்வூதிய சேவைகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு கணக்குகள் துறை கையெழுத்திட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், பாதுகாப்புத்துறை செயலாளர் டாக்டர் அஜய்குமார் முன்னிலையில்,   ஓய்வூதியங்களுக்கான பாதுகாப்பு கணக்குகள் துறையின் கட்டுப்பாட்டாளர் திரு ஷாம் தேவ் மற்றும் பொது சேவை மைய மின்னணு ஆளுகை சேவைகள் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, திரு சஞ்சய் குமார் ராகேஷ் ஆகியோர் புதுதில்லியில் பிப்ரவரி 24,2022 அன்று கையெழுத்திட்டனர்.

நாட்டின் தொலைதூர பகுதிகள் மற்றும் ஸ்பார்ஷ் திட்டத்தில்  கணினி மூலம் சேவைகளை பெறுவதற்கான தொழில்நுட்ப வசதி இல்லாத இடங்களில் வசிக்கும் ஓய்வூதியதாரர்களுக்கு, சேவை வழங்கும் நோக்கில், இந்த ஒப்பந்தம், மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் தங்களது மாதாந்திர ஓய்வூதியம் தொடர்பான சுயவிவரங்களில் மாற்றம் செய்தல், கோரிக்கைகளை பதிவு செய்தல், தீர்வு காண நடவடிக்கை எடுக்க கோருதல், டிஜிட்டல் முறையில் வருடாந்திர அடையாளம் உறுதி செய்தல், ஓய்வூதியதாரர்கள் தரவு ஆய்வு போன்றவற்றை மேற்கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது.

இது தவிர,முன்னாள் படைவீரர்கள் மிக அதிக அளவில் வசிக்கும் பகுதிகளில் உள்ள 14 கிளைகளில் சேவை மையங்களை ஏற்படுத்த கோட்டக் மஹிந்திரா வங்கியுடனும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறை செயலாளர் டாக்டர் அஜய்குமார், ஸ்பார்ஷ் திட்டத்தின் மூலம் ஓய்வூதிய மேலாண்மையில் வெளிப்படைத் தன்மையுடனும் பொறுப்புணர்வுடனும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி வரும் பாதுகாப்பு கணக்குகள் துறை தலைமைக் கட்டுப்பாட்டாளருக்கு பாராட்டுத் தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் முன்னாள் ராணுவத்தினரின் வாழ்க்கையை எளிதாக்கும் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதுடன், ஒய்வூதியம் சார்ந்த பிரச்சினைகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வுகாண வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலசெய்திக் குறிப்பைக் காணவம்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1800754

**************



(Release ID: 1800796) Visitor Counter : 313