பிரதமர் அலுவலகம்

பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 25 DEC 2021 11:01PM by PIB Chennai

எனதருமை நாட்டு மக்களே,

உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்! நாம் இந்தாண்டின் கடைசி வாரத்தில் இருக்கிறோம். 2022 விரைவில் பிறக்கப் போகிறது. 2022-ஐ வரவேற்க நீங்கள் அனைவரும் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறீர்கள். உற்சாகம் மற்றும் கொண்டாட்டங்களுடன் கவனமாக இருக்க வேண்டிய நேரமிது.

உருமாறிய கொவிட் தொற்றான ஓமிக்ரான் உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. இந்தியாவிலும் ஏராளமானோர் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. எனினும் நீங்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். அதே நேரத்தில் கவனமாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும். முகக்கவசம் அணிவதையும், கைகளை கிருமிநாசினி கொண்டு அடிக்கடி சுத்தப்படுத்துவதையும் நாம் மறக்கக் கூடாது.

வைரஸ் உருமாறிக் கொண்டிருக்கும் வேளையில், சவால்களை எதிர்கொள்வதற்கான நமது வலிமை மற்றும் நம்பிக்கையும் பன்மடங்கு அதிகரிக்கிறது. நமது கண்டுபிடிப்பு உணர்வும் அதிகரித்து வருகிறது. நான் நாடு முழுவதும் தற்போது 18 லட்சம் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 5 லட்சம் படுக்கைகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள் 1.40 லட்சம் படுக்கைகள் தயாராக உள்ளன. தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும், தீவிர சிகிச்சை அல்லாத படுக்கைகளையும் சேர்த்தால் குழந்தைகளுக்காக மட்டும் 90,000 படுக்கைகள் பிரத்யேகமாக தயாராக உள்ளன. நாட்டில் தற்போது 3,000 பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் செயல்பாட்டில் உள்ளன. நாடு முழுவதும் சுமார் 4 லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய மருந்துகளை சேமித்து வைக்க தேவையான உதவிகள் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தொற்று பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளது.

நண்பர்களே,

நாட்டில் தற்போது 15 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இது ஜனவரி 3, 2022 திங்கட்கிழமை அன்று தொடங்கப்பட உள்ளது. இந்த முடிவு கொரோனாவுக்கு எதிரான நாட்டின் போராட்டத்திற்கு வலிமை சேர்ப்பதோடு மட்டுமின்றி பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் நமது குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் கவலையையும் போக்கும்.

நண்பர்களே,

இந்தப் போராட்டத்தில் சுகாதார மற்றும் முன்கள பணியாளர்கள் பெரும் பங்கு வகிப்பதை நாம் அனைவரும் அறிவோம். இவர்கள் தங்களது பெரும்பாலான நேரத்தை இப்போதும் கொரோனா நோயாளிகளுடனேயே கழித்து வருகின்றனர். எனவே முன்னெச்சரிக்கை கருதி, சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களுக்கு ‘முன்னெச்சரிக்கை தடவை’ தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டம் ஜனவரி 10, 2022 அன்று தொடங்கும்.

நண்பர்களே,

வதந்திகளை பரப்பி, குழப்பம் மற்றும் அச்சத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளை தவிர்க்குமாறு நான் உங்களை கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். நாம் அனைவரும் இணைந்து உலகின் மிகப் பெரிய தடுப்பூசி இயக்கத்தை மேற்கொண்டு வருகிறோம். வருங்காலத்தில் இதனை மேலும் விரைவுபடுத்தி விரிவுபடுத்த இருக்கிறோம். நம் அனைவரின் முயற்சிகளும் கொரோனாவுக்கு எதிரான நாட்டின் போராட்டத்திற்கு வலு சேர்க்கும்.

உங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல

***



(Release ID: 1791189) Visitor Counter : 156