பிரதமர் அலுவலகம்

தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்


விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளது

கடந்த 7 ஆண்டுகளில், மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 596 ஆக அதிகரித்துள்ளது, மருத்துவ இளநிலை பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களில் 54% அதிகரித்து சுமார் 1 லட்சத்து 48 ஆயிரம் இடங்களாக உயர்ந்துள்ளது, 2014-ல் 82 ஆயிரம் இடங்களாக இருந்தது 80% அதிகரித்துள்ளது

2014-ல் 7 ஆக இருந்த எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையும் 22 ஆக உயர்ந்துள்ளது

“சுகாதார சேவையில் முதலீடு செய்யும் சமுதாயங்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. இந்த துறையில் மத்திய அரசு பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது”

தமிழ்நாட்டிற்கு அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ.3,000 கோடி அளவுக்கு உதவி வழங்கப்படும். இது, நகர்ப்புற சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்கள், மாவட்ட பொது சுகாதார பரிசோதனைக் கூடங்கள் மற்றும் மாநிலம் முழுவதும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளை தொடங்க உதவும்

“தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் செழுமை என்னை எப்போதும் ஈர்க்கிறது”

Posted On: 12 JAN 2022 5:45PM by PIB Chennai

தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (12 ஜனவரி 2022) காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.  மத்திய அமைச்சர்கள் டாக்டர் மன்சுக் மாண்டவியா, டாக்டர் எல் முருகன் மற்றும் டாக்டர் பாரதி பவார், தமிழக ஆளுநர் திரு. ஆர். என். ரவி, முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் வணக்கம் என்றும், “தை பிறந்தால்-வழி பிறக்கும்” என்றும் தமிழில் கூறி மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து, தமது உரையை தொடங்கிய பிரதமர், 11 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய கட்டிடம் திறப்பு மூலம், சமுதாயத்தின் ஆரோக்கியம் மேம்படும் அதேவேளையில் கலாச்சாரத்துடனான நமது தொடர்பும் மேலும் வலுவடையும் என்றார். 

மருத்துவர்கள் பற்றாக்குறை என்பது மிக நீண்டகாலமாக இருந்து வரும் பிரச்சினை என்று குறிப்பிட்ட பிரதமர், இந்த இடைவெளியை குறைக்க தற்போதைய மத்திய அரசு முன்னுரிமை அடிப்படையில் செயல்பட்டு வருகிறது என்றார். 2014-ல் நாட்டில் 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்ததாக பிரதமர் குறிப்பிட்டார்.  கடந்த ஏழாண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 596 ஆக உயர்ந்துள்ளது.  இது 54% உயர்வாகும்.  2014-ல் இந்தியாவில் சுமார் 82 ஆயிரம் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் தான் இருந்தன.  கடந்த 7 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை சுமார் சுமார் 1 லட்சத்து 48 ஆயிரம் இடங்களாக அதிகரித்துள்ளது. 2014-ல் நாட்டில் 7 எய்ம்ஸ்  மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன.  ஆனால், 2014-க்கு பிறகு 22  எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  அதே நேரத்தில் மருத்துவக் கல்வித் துறையை மேலும் வெளிப்படையானதாக்க பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.  தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டிருப்பதன் மூலம், அண்மையில் உத்தரப்பிரதேசத்தில் ஒரேநாளில் 9 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கிய தமது சாதனையை தாமே முறியடித்து இருப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். முன்னேற்றத்தை விரும்பும் ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலும், மலை மாவட்டமான நீலகிரியிலும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டிருப்பதன் மூலம் பிராந்திய சமச்சீரற்ற தன்மை களையப்பட்டிருப்பதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

வாழ்வில் ஒருமுறை ஏற்பட்ட கோவிட் 19 பெருந்தொற்று சுகாதாரத் துறையின் முக்கியத்துவத்தை உணர்த்தியிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.  சுகாதார சேவைகளில் முதலீடு செய்வோருக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது.  இந்த துறையில் மத்திய அரசு ஏராளமான சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.  ஆயுஷ்மான் பாரத்தின் விளைவாக ஏழை மக்களுக்கு உயர்தர சிகிச்சை குறைவான செலவில் கிடைக்கிறது.  செயற்கை மூட்டு மற்றும் ஸ்டென்ட் போன்றவற்றின் விலையும் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது.  ஒரு ரூபாய் விலைக்கு நாப்கின்கள் வழங்கப்படுவதன் மூலம் பெண்களின் ஆரோக்கிய வாழ்க்கை முறை மேம்பட்டுள்ளது.  பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் கட்டமைப்பு இயக்கம், சுகாதார கட்டமைப்பு வசதிகளில் காணப்படும் இடைவெளியை அகற்றி, மாவட்ட அளவில் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வகை செய்துள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டுக்கு  3,000 கோடி ரூபாய்க்கு மேல் உதவி வழங்கப்படவுள்ளது.  இது, நகர்ப்புற சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்கள், மாவட்ட பொது சுகாதார பரிசோதனைக் கூடங்கள் மற்றும் மாநிலம் முழுவதும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளை தொடங்க உதவும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.  வரும் ஆண்டுகளில், “தரமான குறைந்த செலவிலான, சிகிச்சைக்கு உரிய இடமாக இந்தியாவை மாற்றுவதே எனது கனவு என்று அவர் குறிப்பிட்டார்.  மருத்துவ சுற்றுலாவுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இந்தியாவில் உள்ளன.  இது நமது மருத்துவர்களின் திறன் அடிப்படையில் ஏற்பட்டதாகும்” என்றும் அவர் தெரிவித்தார்.  தொலை மருத்துவ சேவைகளிலும் கவனம் செலுத்துமாறு மருத்துவர்களை அவர் கேட்டுக் கொண்டார். 

தமிழ்மொழி மற்றும் கலாச்சாரம் தம்மை எப்போதும் ஈர்ப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.  “ஐநா சபையில், உலகின் மிகத் தொன்மை வாய்ந்த மொழியான தமிழ்மொழியில் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது எனது வாழ்நாளில் ஏற்பட்ட மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாகும்” என்று அவர் தெரிவித்தார்.  பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆய்வுகளுக்காக ‘சுப்ரமணிய பாரதி இருக்கை’ ஏற்படுத்திய கவுரவமும் தமது அரசுக்கு கிடைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.  தமது நாடாளுமன்ற தொகுதியில் அமைந்துள்ள இந்த இருக்கை, தமிழ் மொழி மீது பேரார்வத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-ல் இந்திய மொழிகள் மற்றும் இந்திய அறிவாற்றல் முறை ஊக்குவிக்கப்பட்டிருப்பது பற்றி குறிப்பிட்ட பிரதமர், இதன் மூலம் தமிழ்மொழியை தற்போது தொடக்க கல்வி மற்றும் நடுநிலைக் கல்வி அளவிலான பள்ளிக் கல்வியிலேயே செம்மொழியாக கற்க முடியும் என்றார்.  பல்வேறு இந்திய மொழிகளில் 100 வார்த்தைகளை ஒளி-ஒலி வடிவில் சிறப்பாக கற்றறிந்த பள்ளிக்கூட மாணவர்களின் அமைப்பான பாஷா-சங்கத்தில் ஒரு மொழியாக தமிழும் உள்ளது.  தமிழ்மொழியின் பெருமளவு மின்னணு வடிவங்கள் பாரத்வாணி திட்டத்தின் கீழ் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. “பள்ளிக்கூட அளவில் தாய்மொழி மற்றும் உள்ளூர் மொழியில் கல்வி கற்பதை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.  பொறியியல் போன்ற தொழில்நுட்பப் படிப்புகளையும் இந்திய மொழிகளில் மாணவர்களுக்கு வழங்க எங்களது அரசு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

“ஒரே பாரதம், உன்னத பாரதம்என்பது வேற்றுமையில் ஒற்றுமை உணர்வை விரிவுபடுத்தவும், நமது மக்களை நெருக்கமாக்கவும் விரும்புகிறது என பிரதமர் கூறினார்.” ஹரித்வாரில் உள்ள ஒரு இளம் சிறுவன் திருவள்ளுவர் சிலையைக் கண்டு அவரது மேன்மையை அறிந்து கொள்ளும் போது, அந்த இளம் மனதில்ஒரே பாரதம், உன்னத பாரதம்என்ற விதை விழும்என்பதை அவர் சுட்டிக்காட்டினார். அனைவரும் முன்னெச்சரிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் கொவிட் கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பேண வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு, அவர் உரையை நிறைவு செய்தார்.

புதிய மருத்துவக் கல்லூரிகள் ரூ.4,000 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளன. இதில் ரூ.2,145 கோடி மத்திய அரசாலும்     எஞ்சிய தொகை தமிழ்நாடு அரசாலும் வழங்கப்பட்டது. விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் குறைந்த செலவில் மருத்துவக் கல்வி கிடைப்பதை ஊக்குவிக்க வேண்டும் என்ற பிரதமரின் தொடர் முயற்சிக்கேற்ப இந்த மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன.தற்போதுள்ள மாவட்ட / அவசர முதலுதவி மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கும்மத்திய அரசு ஆதரவிலான திட்டத்தின் கீழ்மொத்தம் 1,450 இடங்களைக் கொண்ட புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு அல்லது தனியார் மருத்துவக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் இந்தத் திட்டத்தின் கீழ் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படுகின்றன.

இந்தியப் பாரம்பரியம், செம்மொழிகள் ஆகியவற்றை மேம்படுத்தி பாதுகாக்கும் பிரதமரின் தொலைநோக்குத் திட்டத்தின்  அடிப்படையில், சென்னையில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முழுமையான நிதியுதவியைக் கொண்ட இப்புதிய வளாகம் ரூ.24 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதுவரை வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வந்த இந்த நிறுவனம், தற்போது மூன்று தளங்களைக் கொண்ட புதிய வளாகத்தில் செயல்படும். விசாலமான நூலகம், மின்னணு நூலகம், கருத்தரங்கக் கூடங்கள், பலவகை ஊடக அரங்கு போன்றவற்றை புதிய வளாகம் தன்னகத்தே கொண்டுள்ளது.

மத்திய கல்வித்துறையின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், ஆராய்ச்சி செயல்பாடுகள்  மூலம், செம்மொழித் தமிழ் மேம்பாட்டிற்குப் பங்களிப்பு செய்கிறது.   இதன் மூலம் தமிழ் மொழியின் தொன்மையும், தனித்துவமும் நிறுவப்படுகிறது. இதன் நூலகத்தில் 45,000-க்கும் கூடுதலாக தொன்மையான தமிழ் நூல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. செம்மொழித் தமிழை  மேம்படுத்தவும், அதன் மாணவர்களுக்கு உதவவும் இந்த நிறுவனம்  கருத்தரங்குகள் நடத்துதல், பயிற்சித் திட்டங்கள், படிப்பு உதவித்தொகை வழங்குதல் போன்ற கல்வி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுகிறது. ‘திருக்குறளைபல்வேறு  இந்திய மொழிகளிலும், 100 வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடுவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளதுசெம்மொழித் தமிழை உலகம் முழுவதும் பரப்புவதற்கு உகந்த வகையில், பணியாற்றும் சூழலைக் கொண்டதாக இந்தப் புதிய வளாகம் இருக்கும்.

***************



(Release ID: 1789444) Visitor Counter : 301