பிரதமர் அலுவலகம்

அகில இந்திய மேயர்கள் மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்


தங்கள் நகரங்களுக்கு புத்துயிரூட்ட மேற்கொள்ள வேண்டிய பல நடவடிக்கைகளை சுட்டிக்காட்டினார்

“தற்போதைய நவீனமய யுகத்தில், நமது நகரங்களின் புராதனத் தன்மையைப் பாதுகாப்பதும் முக்கியம்”

“நமது நகரங்களை தூய்மையாகவும் சுகாதாரமானதாகவும் பராமரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்”

“ஆறுகளை மீண்டும் நகர வாழ்க்கையின் முக்கிய அம்சமாக்க வேண்டும். இது உங்களது நகரங்களுக்கு புது வாழ்வை அளிக்கும்”

“நமது நகரங்கள் பொருளாதாரத்தின் உந்து சக்தியாக இருக்க வேண்டும். வலிமை வாய்ந்த பொருளாதாரக் கேந்திரமாக நகரங்களை நாம் மாற்ற வேண்டும்”

“நமது வளர்ச்சித் திட்ட மாதிரியில் குறு. சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை வலிமைப்படுத்துவது எவ்வாறு என்பது பற்றி பரிசீலிக்க வேண்டியது அவசியம்”

“பெருந்தொற்றுப் பாதிப்பு சாலையோர வியாபாரிகளின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது. அவர்களும் நமது வாழ்க்கைப் பயணத்தின் ஒரு அங்கம். அவர்களை நாம் புறக்கணிக்கக் கூடாது”

“காசியை மேம்படுத்துவதற்கான உங்களது ஆலோசனைகளுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன், நான் உங்களது முதல் மாணவன்”

“அகமதாபாத் மேயராக பதவி வகித்துள்ள சர்தார் படேலை

Posted On: 17 DEC 2021 12:55PM by PIB Chennai

அகில இந்திய மேயர்கள் மாநாட்டை, பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக இன்று (17.12.2021) தொடங்கி வைத்தார். உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் பேசிய பிரதமர், பண்டைக்கால நகரமான வாரணாசியில், அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்களை சுட்டிக்காட்டினார். காசியை மேம்படுத்துவது ஒட்டு மொத்த நாட்டிற்கும் வழிகாட்டியாக அமையும் என தாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியதையும் அவர் நினைவு கூர்ந்தார். நம் நாட்டில் உள்ள பெரும்பாலான நகரங்கள் பாரம்பரிய நகரங்கள் என்றும், அவை   பாரம்பரிய முறையில் மேம்படுத்தப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.  தற்போதைய நவீனமய யுகத்தில். இது போன்ற நகரங்களின் புராதனத் தன்மையைப் பாதுகாப்பதும் அவசியம்.  பாரம்பரியம் மற்றும் உள்ளூர் திறமைகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதை இது போன்ற நகரங்கள் நமக்கு உணர்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போதுள்ள  கட்டடங்களை அகற்றுவது சரியான வழியல்ல. அதே வேளையில் அவற்றைப் புதுப்பித்து பாதுகாக்க முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்  என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.  இது தற்போதைய காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தூய்மையைப் பராமரிப்பதில் நகரங்களுக்கு இடையே, ஆரோக்கியமான போட்டி நிலவ வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர், நகரங்களை அங்கீகரிக்க புதிய வகைப்பாடு ஏதும் இருந்தால், அவை தூய்மை நிலையை அடையவும், சிறப்பாக பணியாற்றும் நகரங்களாக மாற்றக் கூடியதாக இருக்க வேண்டும்  என்றும் தெரிவித்தார். நகரங்களை புதுப்பிக்கும் பணியுடன் தூய்மைப்படுத்தும் பணிகளையும் மேற்கொள்வது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். அந்த வகையில், தங்களது நகரங்களில் உள்ள வார்டுகளுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை உருவாக்க வேண்டும் எனவும் மேயர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

‘சுதந்திரப்பெருவிழா’ தொடர்பான, அதாவது சுதந்திரப்  போராட்டம் குறித்த ‘ரங்கோலி’ போட்டிகள், பாட்டுப் போட்டி மற்றும் வாய்ப்பாட்டுப் போட்டி, போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு மேயர்களை கேட்டுக் கொண்ட பிரதமர், இது குறித்து தமது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.  மேலும் நகரங்கள் உருவான தினங்களைக் கண்டறிந்து அவற்றைக் கொண்டாடலாம் என்றும் மேயர்களுக்கு பிரதமர் ஆலோசனை கூறினார். ஆறுகள் ஓடும் நகரங்கள், ஆற்றுத் திருவிழாக்களைக் கொண்டாடலாம். ஆறுகளின் பெருமையை பறைச்சாற்ற வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய அவர், இதன் மூலம் மக்கள் ஆறுகளின் பெருமையை உணர்ந்து அவற்றை தூய்மையாகப் பராமரிப்பதன் அவசியத்தை அறிவார்கள் என்றும் தெரிவித்தார். “ஆறுகளை மீண்டும் நகர வாழ்க்கையின் முக்கிய அம்சமாக்க வேண்டும். இது உங்களது நகரங்களுக்கு புது வாழ்வை அளிக்கும்” என்றும் பிரதமர் தெரிவித்தார். ஒருமுறை மட்டும் உபயோகிக்கக் கூடிய பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான  பிரச்சார இயக்கத்திற்கு மேயர்கள் புத்துயிர் அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். மேலும், கழிவுகளை பணமாக்குவதற்கான வழிகளை ஆராயுமாறும் மேயர்களை அவர் கேட்டுக் கொண்டார். “நமது நகரம் தூய்மையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருப்பதற்கு, இந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்தந்த நகரங்களில் உள்ள தெருவிளக்குகள் மற்றும் வீடுகளில் எல்இடி மின்விளக்குகள் பெருமளவு பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறும் மேயர்களை அவர் கேட்டுக் கொண்டார். இந்தப் பணியை ஒரு இயக்கமாக மேற்கொள்ளுமாறும் அவர்  வலியுறுத்தினார். தற்போதுள்ள திட்டங்களை புதிய பயன்பாடுகளுக்கு பயன்படுத்துவது குறித்து பரிசீலிப்பதுடன் அவற்றை முன்னெடுத்துச் செல்வது குறித்து ஆராயுமாறும் அவர் குறிப்பிட்டார்.  அந்தந்த நகரங்களில் உள்ள தேசிய மாணவர் படைப்பிரிவுகளை மேயர்கள் தொடர்பு கொண்டு நகரத்தில் உள்ள சிலைகளை தூய்மைப்படுத்தக் குழுக்களை அமைப்பதுடன், “சுதந்திரப் பெருவிழா“ குறித்த சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.  அதே போன்று, சுதந்திரப் பெருவிழாவைக் குறிக்கும் வகையில், நினைவுச் சின்னங்களை அமைப்பதற்கான இடங்களைத் தேர்வு செய்து அரசு தனியார் பங்களிப்பில் அதனை செயல்படுத்தலாம். ‘ஒரு மாவட்டத்திற்கு ஒரு பொருள் உற்பத்தி’ பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், அந்தந்த நகரங்களின் பிரத்யேக அடையாளத்தை பிரபலப்படுத்த, சம்பந்தப்பட்ட நகரங்களின் பிரத்யேக உற்பத்திப் பொருள் அல்லது இடத்தைத்  தேர்வு செய்து ஊக்குவிக்குமாறும் மேயர்களைக் கேட்டுக் கொண்டார்.  நகர்ப்புற வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களின் மக்களுக்கு உகந்த கருத்துக்களை உருவாக்குமாறும், பிரதமர் அவர்களைக் கேட்டுக் கொண்டார்.

பொதுப் போக்குவரத்து வசதிகளை மக்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த நாடாக இந்தியாவை மாற்றும் திட்டத்தின்படி நகரங்களில் உள்ள அனைத்துக் கட்டடங்களையும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் வந்து செல்வதற்கு உகந்த இடங்களாக மாற்ற முயற்சிக்குமாறும் மேயர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

“நமது நகரங்கள்தான் நமது பொருளாதாரத்தின் உந்துசக்தி. நகரங்களை  வலிமை வாய்ந்த பொருளாதார மையமாக நாம் மாற்ற வேண்டும்” என்று அவர் தெரிவித்தார். பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கக் கூடிய சூழலை ஒரே  நேரத்தில் உருவாக்குவதற்கான  ஒட்டுமொத்த நடைமுறையை உருவாக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

நமது வளர்ச்சித் திட்டத்தில் குறு,சிறு, நடுத்தர தொழில்நிறுவனங்களை வலுப்படுத்த வேண்டியதன் தேவையையும் பிரதமர் வலியுறுத்தினார். “சாலையோர வியாபாரிகள் நமது பயணத்தின் ஒரு அங்கம், ஒவ்வொரு தருணத்திலும் அவர்கள் இடையூறுகளைச் சந்திப்பதை நாம் காண்கிறோம். அவர்களுக்காக  நாம் பிரதமரின் ஸ்வாநிதித் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளோம். இந்தத் திட்டம் மிகச் சிறந்தது. உங்களது நகரங்களில் உள்ள சாலையோர வியாபாரிகளின் பட்டியலைத் தயாரித்து செல்போன் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது குறித்து அவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். இது வங்கி நிதிச் சேவை பயன்பாட்டை மேம்பட்டதாக மாற்றும்” என்றும் பிரதமர் தெரிவித்தார். பெருந்தொற்றுக் காலத்தில் அவர்களது முக்கியத்துவம் மிகத் தெளிவாக  தெரியவந்தது என்றும் அவர் கூறினார்.

தங்களது அனுபவங்களிலிருந்து காசியின் மேம்பாட்டுக்கான ஆலோசனகளை  வழங்குமாறு கேட்டுக் கொண்டு தமது உரையை  பிரதமர் நிறைவு செய்தார்.  “உங்களது ஆலோசனைகளுக்காக நான் பெரிதும் நன்றியுடையவனாக இருப்பேன், உங்களது முதல் மாணவன் நான்தான்“ சர்தார் படேல் அகமதாபாத் மாநகர மேயராக இருந்ததை சுட்டிக்காட்டிய பிரதமர்,  நாடு இன்றைக்கும் அவரை நினைவு கூர்கிறது என்றார். மேயர் பதவி என்பது அர்த்தமுள்ள அரசியல் வாழ்க்கையின் முதல் படிக்கல். அதன் மூலம் நீங்கள் நாட்டு மக்களுக்கு பணியாற்றலாம்” என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

----- 



(Release ID: 1782706) Visitor Counter : 206