நிதி அமைச்சகம்

குஜராத்தில் வருமான வரித்துறை சோதனை

Posted On: 21 NOV 2021 10:07AM by PIB Chennai

ரசாயனங்கள் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள முக்கிய குழுமம் ஒன்றில் 2021 நவம்பர் 18 அன்று வருமான வரித்துறையினர் சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

 

குஜராத்தில் உள்ள வாபி மற்றும் சரிகம், சில்வாசா மற்றும் மும்பையில் உள்ள 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

 

குழுமத்தின் கணக்கில் காட்டப்படாத வருமானம் மற்றும் சொத்துக்களில் அதன் முதலீடு ஆகியவற்றைக் காட்டும் ஆவணங்கள், டைரி குறிப்புகள் மற்றும் டிஜிட்டல் தரவுகள் ஏராளமாக கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளன.

 

உற்பத்தியை குறைவாக காட்டுதல், போலியான கொள்முதல் விலைப்பட்டியல்களைப் பயன்படுத்துதல், முறைகேடாக ஜிஎஸ்டி கடனைப் பெறுதல், போலி கமிஷன் செலவினங்களைக் கோருதல் போன்ற பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் வரி ஏய்ப்பு செய்ததை ஆதாரங்கள் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.

 

​​அசையா சொத்துக்களில் முதலீடு செய்த பணப் பரிவர்த்தனைகள் மற்றும் ரொக்கக் கடன்கள் பற்றிய ஆவணங்களும் சோதனை நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டுள்ளன.

 

கணக்கில் வராத சுமார் ரூ. 2.5 கோடி மற்றும் ரூ. 1 கோடி மதிப்பிலான நகைகள் கைபற்றப்பட்டு, 16 வங்கி லாக்கர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

 

 

சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்கள்/ஆதாரங்களின் முதற்கட்ட ஆய்வில், கணக்கில் வராத வருமானம் ரூ.100 கோடிக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1773636

****



(Release ID: 1773733) Visitor Counter : 170