பிரதமர் அலுவலகம்

ஜம்மு காஷ்மீரின் நவ்ஷேரா மாவட்டத்தில் இந்திய ராணுவ வீர்ர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடினார்


நவ்ஷேராவின் நாயகர்களான பிரிகேடியர் உஸ்மான், நாயக் ஜதுநாத் சிங், லெப்டினன்ட் ஆர்.ஆர்.ரானே மற்றும் பிறருக்கு மதிப்புமிகு அஞ்சலி செலுத்தினார்

“உங்களுக்கு 130 கோடி இந்தியர்களின் வாழ்த்துக்களை நான் கொண்டுவந்திருக்கிறேன்”

“இன்றைய இந்தியாவில், சுதந்திரத்தின் ‘75வது ஆண்டு காலத்தில்’ தனது திறன்கள் மற்றும் வளங்கள் பற்றி விழிப்புடன் இருக்கிறது”

“எல்லைப்பகுதிகளில் லடாக் முதல் அருணாச்சலப்பிரதேசம் வரை, ஜெய்சல்மார் முதல் அந்தமான் நிக்கோபார் வரை போக்குவரத்து தொடர்பில் நவீன கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது: இது ராணுவ வீரர்களுக்கு முன் எப்போதும் இல்லாத அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் வசதிக்கும் வழிவகுத்துள்ளது”

“நாட்டின் பாதுகாப்பில் மகளிரின் பங்களிப்பு புதிய உச்சங்களைத் தொட்டுள்ளது”

“இந்திய ராணுவத்தினர் தொழில் ரீதியாக உலக ராணுவப் படைகளிலேயே உயர்ந்த இடத்தில் உள்ளனர், ஆனால் அதன் மனித மான்புகள் அதனை மிக உயர்ந்ததாகவும் அசாதாரணமானதாகவும் மாற்றியிருக்கிறது”

“நாட்டினை அரசாகவோ, அதிகாரமாகவோ, அல்லது பேரரசாகவோ நாம் உணரவில்லை, நம்மைப்பொருத்தவரை இது வாழ்க்கைமுறை, ஆன்மாவின் இருத்தல், இதனைப் ப

Posted On: 04 NOV 2021 1:46PM by PIB Chennai

அரசியலமைப்பு சட்டப்படியான பொறுப்பில் உள்ள தமது முந்தைய ஆண்டுகளைப்போலவே பிரதமர் திரு நரேந்திர மோடி இந்த ஆண்டும் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார். ஜம்மு காஷ்மீரின், நவ்ஷேரா மாவட்டத்திற்கு இன்று அவர் பயணம் மேற்கொண்டார்.

வீரர்களிடையே உரையாற்றிய பிரதமர், ராணுவ வீரர்களுடன் தீபாவளியை செலவிடுவது, தம்மைப்பொருத்தவரை தமது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடுவது போன்ற அதே உணர்வுடன் இருக்கிறது என்றார். இதனால்தான் அரசியல் சட்டப்படியான பதவியை ஏற்றுக்கொண்டபின் எல்லைப்பகுதியில் ராணுவ வீரர்களுடன் அனைத்து தீபாவளி நாளையும் தாம் கொண்டாடுவதாக அவர் கூறினார். தாம் தனியாக வந்திருக்கவில்லை என்றும், 130 கோடி இந்தியர்களின் வாழ்த்துக்களுடன் வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டின் வீரம்மிக்க ராணுவ வீரர்களை வாழ்த்துவதற்காக இன்று மாலை ஒவ்வொரு இந்தியரும் ஒரு அகல் விலக்கை ஏற்றிவைப்பார்கள் என்று அவர் கூறினார். நாட்டின் பாதுகாப்பு கேடயமாக ராணுவ வீரர்கள் வாழ்கிறார்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார். நாட்டின் தீரம் மிக்க புதல்வர்களாகவும், புதல்விகளாகவும் நாட்டிற்கு சேவை செய்வது நல்ல வாய்ப்பு என்றும் அனைவருக்கும் இது கிடைப்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தீபாவளிக்கும், கோவர்தன் பூஜை, பையா தூஜ்சத் போன்ற வரவிருக்கும் விழாக்களுக்கும் நவ்ஷேராவிலிருந்து  திரு மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். குஜராத் மக்களின் புத்தாண்டிற்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் வீரதீரத்தை நவ்ஷேராவின் வரலாறு கொண்டாடுகிறது என்று குறிப்பிட்ட அவர், தற்போது ராணுவ வீரர்களின் வீரதீரமாகவும், உறுதி தன்மையாகவும் அது விளங்குகிறது என்றார். இந்த பிராந்தியம் அத்துமீறுபவர்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக உறுதியுடன் நிற்கிறது என்று அவர் கூறினார். தாய்நாட்டை பாதுகாப்பதற்கு உச்சபட்ச தியாகம் செய்த நவ்ஷேராவின் நாயகர்களான பிரிகேடியர் உஸ்மான், நாயக் ஜதுநாத் சிங் ஆகியோருக்கு திரு மோடி மதிப்புமிகு அஞ்சலி செலுத்தினார். மனஉறுதிக்கும், நெஞ்சுரத்திற்கும், தேச பக்திக்கும் முன் எப்போதும் காணாத உதாரணங்களாக விளங்கும் லெப்டினன்ட் ஆர்.ஆர்.ரானே மற்றும் இதர தீரம்மிக்கவர்களுக்கும் அவர் வீரவணக்கம் செலுத்தினார். ராணுவத்தை உறுதியுடன் ஆதரித்த திரு பல்தேவ் சிங், திரு பசந்த் சிங் ஆகியோரின் வாழ்த்துக்களைக் கொண்டதாக தமது உணர்வுகள் இருப்பதாகவும் பிரதமர் கூறினார். துல்லியத்தாக்குதல் நடத்தப்பட்டதன் பங்களிப்புக்காக இங்கு முகாமிட்டிருந்த ராணுவ வீரர்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார். இந்த தாக்குதலிலிருந்து பாதுகாப்புடன் ராணுவ வீரர்கள்  திரும்பி வந்தது நிம்மதியான தருணமாக இருந்ததை அவர் நினைவுகூர்ந்தார்.

நாட்டின் சுதந்திரத்தை பாதுகாப்பது ஒவ்வொருவரின் பொறுப்பாக உள்ளது என்று கூறிய பிரதமர் சுதந்திரத்தின் ‘75வது ஆண்டு காலத்தில்’ தனது திறன்கள் மற்றும் வளங்கள் பற்றி இன்றைய இந்தியா விழிப்புடன் இருக்கிறது என்றார்.

வெளிநாடுகளை சார்ந்திருப்பது பற்றி முந்தைய காலத்தில் எதிர்ப்பு இருந்த நிலையில் இன்று பாதுகாப்பு ஆதார வளங்களில் அதிகரிக்கும் சுயசார்பு இந்தியா திட்டம் குறித்தும் அவர் பேசினார். பாதுகாப்புத்துறைக்கான பட்ஜெட்டில் 65 சதவீதம் நாட்டுக்குள்ளேயே பயன்படுத்தப்படுகிறது என்று அவர் கூறினார். ராணுவத் தளவாடங்கள் பட்டியலில் இருக்கும் 200 பொருட்களில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை மட்டுமே கொள்முதல் செய்யப்படும், இந்தப் பட்டியல் விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளது என்று அவர் கூறினார். பழைய ராணுவத் தளவாட தொழிற்சாலைகள் தற்போது தனிச்சிறப்பான தளவாடங்களையும் வெடிபொருட்களையும் தயாரிப்பவையாக மாறியுள்ள நிலையில் விஜயதசமி அன்று தொடங்கப்பட்ட 7 புதிய பாதுகாப்பு தொழில்நிறுவனங்கள் பற்றியும் அவர் பேசினார். பாதுகாப்புத் தளவாடங்களைக் கொண்டுசெல்வதற்கான தனிப்பாதையும் அமைக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இந்தியாவின் இளைஞர்கள் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி தொடர்பான புதிய தொழில்களில் ஆர்வம் காட்டுகின்றனர். பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியாளர் என்ற முறையில் இவை அனைத்தும் இந்தியாவின் நிலையை வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.

மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப இந்திய ராணுவத்தின் அதிகார தேவை விரிவுபடுத்தப்படவும் மாற்றப்படவும் வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். விரைவாக மாறிவரும் தொழில்நுட்ப நிலைமை புதிய மாற்றங்களைக் கோருவதாகவும், இதனால் ஒருங்கிணைந்த ராணுவ தலைமைத்துவத்தின் ஒத்துழைப்பை உறுதி செய்வது மிகவும் முக்கியமானதாக உள்ளது என்றும் அவர் கூறினார். முப்படைகளின் தளபதி மற்றும் ராணுவ விவகாரங்கள் துறை ஆகிய நடவடிக்கைகள் இந்த திசையில் மேற்கொள்ளப்பட்டன. இதேபோல் புதிதாக எல்லைப்பகுதி கட்டமைப்பு நாட்டின் ராணுவ பலத்தை அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.  எல்லைப்பகுதிகளில் லடாக் முதல் அருணாச்சலப்பிரதேசம் வரை, ஜெய்சல்மார் முதல் அந்தமான் நிக்கோபார் வரை போக்குவரத்து தொடர்பில் நவீன கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது: இது ராணுவ வீரர்களுக்கு முன் எப்போதும் இல்லாத அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் வசதிக்கும் வழிவகுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் பாதுகாப்பில் பெண்களின் பங்களிப்பு புதிய உச்சங்களை தொட்டிருப்பது குறித்து பிரதமர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். கப்பற்படை, மற்றும் விமானப்படையில் முன்னனியில் அவர்களைப் பணியமர்த்தியபின் தற்போது ராணுவத்திலும் கூட பெண்களின் பங்கு விரிவாக்கப்படுகிறது என்றார். நிரந்தர ஆணையம், தேசிய பாதுகாப்பு கல்விக்கழகம், தேசிய ராணுவப்பள்ளி, மகளிருக்கான தேசிய இந்திய ராணுவக்கல்லூரி ஆகியவை திறக்கப்பட்டதுடன் பெண்களுக்கான ராணுவப்பள்ளிகள் திறக்கப்படும் என்று தமது சுதந்திர தின அறிவிப்பில் குறிப்பிட்டிருப்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.

ராணுவப் படைகளில் எல்லையில்லாத திறன்களை காண்பது மட்டுமின்றி ஊசலாட்டம் இல்லாத சேவை உணர்வையும் வலுவான உறுதியையும் ஒப்பிட இயலாத உணர்வையும் காண்பதாக பிரதமர் கூறினார். இது இந்திய ராணுவத்தை உலக ராணுவத்திற்கிடையே ஒப்பற்றதாக மாற்றுகிறது. இந்திய ராணுவத்தினர் தொழில் ரீதியாக உலக ராணுவப் படைகளிலேயே உயர்ந்த இடத்தில் உள்ளனர், ஆனால் அதன் மனித மான்புகள் அதனைத் தனித்துவமானதாகவும் அசாதாரணமானதாகவும் மாற்றியிருக்கிறது என்று பிரதமர் கூறினார். “உங்களைப்பொருத்தவரை இந்தப் பணி வெறும் ஊதியத்திற்கானதல்ல உங்களைப்பொருத்தவரை இது ஒரு தொழில், ஒரு வழிபாடு, இந்த வழிபாட்டில் 130 கோடி மக்களின் உணர்வை நீங்கள் முறைப்படுத்துகிறீர்கள்” என்று பிரதமர் குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் பேசுகையில் “பேரரசுகள் வரும், போகும் ஆனால் இந்தியா ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது இன்றும் இருக்கிறது, பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னரும் அது நிலைத்திருக்கும்.  நாட்டினை அரசாகவோ, அதிகாரமாகவோ, அல்லது பேரரசாகவோ நாம் உணரவில்லை, நம்மைப்பொருத்தவரை இது வாழ்க்கைமுறை ஆன்மாவின் இருத்தல், இதனைப் பாதுகாப்பது புவியியல் ரீதியான எல்லைகளைப் பாதுகாப்பது என்ற வரம்போடு நின்றுவிடவில்லை, நம்மைப்பொருத்தவரை தேசப்பாதுகாப்பு என்பதன் பொருள் தேசத்தின் துடிப்பை, தேசத்தின் ஒற்றுமையை, தேசத்தின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதாகும்” என்றார்.

“விண்ணைத்தொடும் வீரத்துடன் நமது ராணுவ வீரர்கள் இருந்தாலும் அவர்களின், இதயங்கள் கடல்போன்ற மனிதகுல இறக்கத்தையும் கொண்டிருக்கின்றன. இதனால்தான் நமது ராணுவ வீரர்கள் எல்லைகளைப் பாதுகாப்பது மட்டுமின்றி, இயற்கை சீற்றம் மற்றும் பேரழிவு காலங்களில் உதவிசெய்ய எப்போதும் தயார் நிலையில் உள்ளனர். ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் இது வலுவான நம்பிக்கையை வளர்த்துவருகிறது இந்தியாவின் ஒற்றுமை, உறுதிப்பாடு ஆகியவற்றின் பாதுகாவலர்களாகவும் ‘ஒரே இந்தியா, உன்னத இந்தியா’ என்ற உணர்வு கொண்டவர்களாகவும் நீங்கள் இருக்கிறீர்கள். உங்களது வீரத்தால் உந்தப்பட்டு இந்தியாவை வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் உச்சத்திற்கு  கொண்டுசெல்வோம் என்பதில் நான் முழுமையான நம்பிக்கையோடு இருக்கிறேன்” என்று பிரதமர் உரையை நிறைவுசெய்தார்.

****



(Release ID: 1769485) Visitor Counter : 160