உள்துறை அமைச்சகம்

கார்பி ஒப்பந்தம் - “கிளர்ச்சியில்லா வளமிக்க வடகிழக்கிற்கான” பிரதமரின் லட்சியத்தை அடைவதில் மற்றுமொரு மைல்கல்: திரு அமித் ஷா

Posted On: 04 SEP 2021 6:36PM by PIB Chennai

அசாமின் எல்லைப்புற ஒற்றுமையை உறுதிப்படுத்தும் வகையில், பல தசாப்தங்களாக நீடிக்கும் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவரும் வகையிலும், வரலாற்று சிறப்புமிக்க கார்பி அங்க்லாங் ஒப்பந்தம் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் புதுதில்லியில் இன்று கையெழுத்தானது.

அசாம் முதல்வர் திரு ஹிமாந்த பிஸ்வ சர்மா, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து & நீர்வழிகள் மற்றும் ஆயுஷ் அமைச்சர் திரு நித்யானந்த் ராய், மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு துலிராம் ரோங்காங்க், கேஏஏசி தலைமை செயற்குழு உறுப்பினர், கார்பி லோங்க்ரி வடக்கு கச்சார் மலைகள் விடுதலை முன்னணி பிரதிநிதிகள், கார்பி லோங்க்ரி மக்கள் ஜனநாயக குழு, ஐக்கிய மக்கள் விடுதலை படை, கார்பி மக்கள் விடுதலை புலிகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள், மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் அசாம் அரசின் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தின் மூலம், 1000-க்கும் அதிகமான ஆயுதமேந்திய வீரர்கள் வன்முறையை கைவிட்டு சமுதாய நீரோட்டத்தில் இணைந்தனர். கார்பி பகுதிகளின் வளர்ச்சிக்காக ரூ 1000 கோடி மதிப்பிலான சிறப்பு மேம்பாட்டு தொகுப்பு மத்திய மற்றும் அசாம் அரசுகளால் ஐந்து வருடங்களில் வழங்கப்படும்.

நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, “கிளர்ச்சியில்லா வளமிக்க வடகிழக்கிற்கானபிரதமர் திரு நரேந்திர மோடியின் லட்சியத்தை அடைவதில் மற்றுமொரு மைல்கல்லாக கார்பி ஒப்பந்தம் அமைந்துள்ளதாக கூறினார். இன்றைய ஒப்பந்தம் அசாமின் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும் என்று அவர் கூறினார்.

திரு நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து கவனம் பெற்ற பகுதியாக வடகிழக்கு திகழ்வதோடு, அப்பகுதியின் ஒட்டுமொத்த வளர்ச்சி, அமைதி மற்றும் வளம் ஆகியவை அரசின் முக்கிய முன்னுரிமைகளாக திகழ்வதாக அமைச்சர் கூறினார்.

ஆயுதங்களை கைவிடுபவர்களை தேசிய நீரோட்டத்திற்கு அழைத்து வந்து, அவர்களோடு கனிவுடன் பேசி, அவர்கள் கேட்பதை விட அதிகமாக வழங்குவது திரு மோடி அரசின் கொள்கை என்று திரு அமித் ஷா கூறினார்.

இந்த கொள்கையின் காரணமாகவே பழைய பிரச்சினைகளை ஒவ்வொன்றாக நாம் களைந்து வருகிறோம் என்றும் ஆட்சிக்காலத்தில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களில் உள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படுவதாகவும், திரு மோடி அரசின் சாதனையாக இது விளங்குவதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1752066

*****************



(Release ID: 1752108) Visitor Counter : 290