பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய பாதுகாப்புத்துறைக்கான தொடக்க நிறுவனங்களின் சவால் போட்டி (DISC) 5.0 : பாதுகாப்புத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்

Posted On: 19 AUG 2021 3:30PM by PIB Chennai

சீர்மிகு பாதுகாப்புத்துறையில் புத்தாக்கம் (iDEX),  பாதுகாப்புத்துறை புத்தாக்க அமைப்பு (DIO)-ன் கீழ் காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்ட இந்திய பாதுகாப்புத்துறைக்கான தொடக்க நிறுவனங்களின் சவால் போட்டி(டிஸ்க்) 5.0-ஐ பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று தொடங்கி வைத்தார். 

டிஸ்க் 5.0 சவால் போட்டியின் கீழ், தீர்வு காண்பதற்காக  பாதுகாப்பு படைகளின் தரப்பில் இருந்து  13 பிரச்னை அறிக்கைகள், பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து 22 பிரச்னை அறிக்கைகள் வெளியிடப்பட்டன. சூழ்நிலை விழிப்புணர்வு, ஏஆர் (Augmented Reality )தொழில்நுட்பம்செயற்கை நுண்ணறிவு, விமானம்-பயிற்சியாளர், உயிர் பலி ஏற்படுத்தாத சாதனங்கள், 5 ஜி நெட்வொர்க், நீருக்கடியிலான விழிப்புணர்வு, உளவு பார்க்கும் ட்ரோன்  மற்றும் தரவு சேகரிப்பு ஆகிய துறைகளில் நிலவும் பிரச்னைகளுக்கு, இந்த போட்டி மூலம்  தீர்வு கோரப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ராணுவ நன்மையை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட பிரச்சனை அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.  இதுவரை நடத்தப்பட்ட சவால் போட்டிகளில் இது மிக உயர்ந்தவை.

ஐடெக்ஸ்-டியோ அமைப்பின் முயற்சிகளை பாராட்டிய, திரு ராஜ்நாத் சிங், விடுதலையின் அம்ரித் மகோத்சவம் கொண்டாடும் வேளையில், தொடங்கப்பட்டுள்ள டிஸ்க் 5.0 சவால் போட்டி, பாதுகாப்புத்துறை சுதந்திரத்தில் மற்றொரு படி முன்னேற்றம் என கூறியுள்ளார்.

பாதுகாப்புத்துறையில் தற்சார்பு இந்தியாவை, உருவாக்கும் மத்திய அரசின் தீர்மானத்தை, டிஸ்க் 5.0 பிரதிபலிக்கிறது என அவர் கூறினார். இந்த சவால் போட்டி, முந்தைய போட்டிகளில் இருந்து முன்னேறி, புத்தாக்கம், வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அடுத்த 5 ஆண்டுகளில், 5 மடங்கு அதிகமான தொடக்க நிறுவனங்களுக்கு ஐடெக்ஸ் ஆதரவு அளிக்கும் எனவும், முன்னேற்றத்தை துரிதபடுத்தி, செலவை குறைத்து, குறித்த காலத்துக்குள் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதுதான் நோக்கம் எனவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். இதற்கு அடையாளம் காணுதல், உருவாக்குதல், புத்தாக்கம், ஒருங்கிணைப்பு, மற்றும் உள்நாட்டு தயாரிப்பு என்ற 5 கருத்துக்களை பின்பற்ற வேண்டியது அவசியம் என அவர் கூறினார்.

முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், பாதுகாப்புத்துறை செயலாளர் டாக்டர் அஜய் குமார், மற்றும் பாதுகாப்பு அமைச்சக மூத்த அதிகாரிகள் டிக்ஸ் 5.0 தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கடற்படை தளபதி அட்மிரல் கரம்பிர் சிங், விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஆர்கேஎஸ் பதாரியா, ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே, கூட்டுப்படை குழு தலைவர் வைஸ் அட்மிரல் ஏ.கே.ஜெயின், இளம் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் ஆகியோர் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1747370 

*****************



(Release ID: 1747387) Visitor Counter : 227