பிரதமர் அலுவலகம்

பிரதம மந்திரி உழவர் நல நிதி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நிதியுதவி தவணையை விடுவித்து பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 09 AUG 2021 3:20PM by PIB Chennai

கடந்த பல நாட்களாக நான் அரசின் பல்வேறு திட்டப் பயனாளிகளுடன் விவாதித்து வருகிறேன். ஏனெனில், அரசின் திட்டங்களின் பயன்கள் எவ்வாறு மக்களைச் சென்றடைகிறது என்பதை தெரிந்து கொள்ள இது நல்ல வழியாக இருக்கிறது. இது மக்களுடன் நேரடி தொடர்பின் பயனாகும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும்  எனது அமைச்சரவை தோழர்களே, மரியாதைக்குரிய முதலமைச்சர்களே, துணைநிலை அளுநர்களே, துணை முதலமைச்சர்களே, மாநில அமைச்சர்களே, நாடு முழுவதும் உள்ள சகோதர, சகோதரிகளே, அனைவருக்கும் வணக்கம்!

இன்று, நாட்டின் சுமார் 10 கோடி விவசாயிகளின் வங்கி கணக்குகளில் 19,500 கோடிக்கும் அதிகமான ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. உங்களில் பலர் இந்தப் பணம் வந்துவிட்டதா என உங்கள் கைபேசிகள் வழியாக தெரிந்துகொள்ள முயற்சிப்பதை என்னால் காணமுடிகிறது. இந்த மழைக்காலத்தில், விதைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கும் போது, சிறு விவசாயிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்று, ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான விவசாய உள்கட்டமைப்பு நிதி தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைகிறது. இந்த நிதியின் மூலம், ஆயிரக்கணக்கான விவசாய அமைப்புகள் பயனடைந்துள்ளன.

சகோதர, சகோதரிகளே, விவசாயிகளுக்கு  கூடுதல் வருமானம் வழங்கும் புதிய பயிர்வகைகளை ஊக்குவிக்க அரசு உறுதிபூண்டுள்ளது. தேனீ வளர்ப்பு திட்டம் அதில் ஒன்றாகும். இந்தத் திட்டத்தின் பயனாக, கடந்த ஆண்டு ரூ.700 கோடி மதிப்பிலான தேனை நாம் ஏற்றுமதி செய்தோம். இது விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை உறுதி செய்துள்ளது. இதுபோல, ஜம்மு காஷ்மீர் குங்குமப்பூ உலகப் புகழ் பெற்றது. நாடு முழுவதும் நாபெட் கடைகள் மூலம் காஷ்மீர் குங்குமப்பூ விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இது ஜம்மு காஷ்மீரில் குங்குமப்பூ சாகுபடியில் பெரும் ஊக்கத்தை ஏற்படுத்தும்.

சகோதர, சகோதரிகளே, நாம் விடுதலையின் அமிர்தப்பெருவிழாவைக் கொண்டாடவுள்ளோம். இன்னும் சில நாட்களில் ஆகஸ்ட் 15 வரப்போகிறது. இந்த முறை நாடு 75-வது சுதந்திரதினத்தை கொண்டாடப் போகிறது. இது நமக்கு பெருமை தரும் விஷயம் மட்டுமல்லாமல், புதிய தீர்மானங்களையும், இலக்குகளையும் வகுத்துக்கொள்ளும் பெரும் வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.

வரும் அடுத்த 25 ஆண்டுகளில், இந்தியாவை நாம் எங்கே வைத்துப் பார்க்க விரும்புகிறோம் என்பதை தீர்மானிக்க, நாம் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 2047-ம் ஆண்டு 100வது சுதந்திர தினத்தை நாடு நிறைவு செய்யும்போது, இந்தியாவின் நிலையை தீர்மானிப்பதில், நமது வேளாண்மை மற்றும் விவசாயிகளுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. புதிய சவால்களைச் சந்திக்கவும், புதிய வாய்ப்புகளின் சாதகத்தை எடுத்துக் கொள்ளவும், இந்திய வேளாண்மைக்கு வழிகாட்ட இதுதான் சரியான நேரம்மாறிவரும் காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப, இந்திய விவசாயத்தில் மாற்றங்கள் மிகவும் அவசியமாகும்.

சகோதர, சகோதரிகளே, இந்தக்கால கட்டத்தில், சாப்பாட்டு பழக்க, வழக்கங்கள் முறை, பருவநிலை மாற்றம், கொரோனா பெருந்தொற்று போன்ற பல வகை காரணங்களால் பல அபரிமிதமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் நமது நாடும் இந்த மாற்றங்களை சந்தித்துள்ளது. இதற்கு ஏற்ப விவசாயத்திலும் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். நமது விவசாயிகள்  இந்த வாய்ப்புகளை நிச்சயம்  பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

நண்பர்களேபெருந்தொற்று காலத்திலும், உற்பத்தியில் வரலாறு படைத்து விவசாயிகள் சாதனை புரிந்துள்ளனர். இந்தச் சிக்கலான நேரத்தில், விவசாயிகளின் கஷ்டங்களை குறைக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் ஏராளம்.   விதைகள், உரங்களின் தடையற்ற விநியோகம் மற்றும் சந்தைகளுக்கான அணுகலை அரசு உறுதி செய்தது. யூரியா ஆண்டு முழுவதும் கிடைக்குமாறு பார்த்துக் கொண்டது, சர்வதேச சந்தையில் டிஏபி உரங்களின் விலை பல மடங்கு அதிகரித்தபோதும், அரசு உடனடியாக ரூ.12,000 கோடி மானியத்தை  ஏற்பாடு செய்தது போன்ற நடவடிக்கைகளால் விவசாயிகளின் பெருமளவிலான  சுமை குறைக்கப்பட்டது. .

காரிப் அல்லது ராபி போன்ற எந்தப்பருவமாக இருந்தாலும்குறைந்தபட்ச ஆதரவு விலையில், விவசாயிகளிடமிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய கொள்முதலை  அரசு செய்துள்ளதுஇதன் காரணமாகநெல் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் சுமார் ரூ.1,70,000 கோடி நேரடியாக சென்றுள்ளது, சுமார் ரூ.85,000 கோடி பணம் கோதுமை விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக சென்றுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் பருப்புக்கு பற்றாக்குறை ஏற்பட்டபோது, அவற்றின் உற்பத்தியை அதிகரிக்குமாறு நான் கேட்டுக் கொண்டேன். இதன் காரணமாக, கடந்த 6 ஆண்டுகளில், நாட்டில் பருப்பு உற்பத்தி 50 சதவீதம் அதிகரித்துள்ளது.

சகோதர, சகோதரிகளே. சமையல் எண்ணெய் உற்பத்தியில் தற்சார்பு நிலையை அடைய எடுத்த உறுதிமொழிதான் தேசிய சமையல் எண்ணெய் திட்டம்-பாமாயில் ஆகும். இன்றைய வரலாற்று சிறப்புமிக்க நாளில்வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை, நாடு நினைவுக்கூருகையில், இந்தத் தீர்மானம், நமக்கு புதிய சக்தியை அளிக்கிறது. தேசிய சமையல் எண்ணெய் -பாமாயில் திட்டம் மூலம், சமையல் எண்ணெய் உற்பத்திக்கு ரூ.11,000 கோடிக்கு  மேல் முதலீடு செய்யப்படும். தரமான விதைகள் முதல் தொழில்நுட்பம் வரை விவசாயிகளுக்கு அனைத்து வசதிகளும் கிடைப்பதை அரசு உறுதி செய்யும்முதல் முறையாக, வேளாண் ஏற்றுமதியில் முதல் 10 நாடுகளில், இந்தியா இடம்பிடித்துள்ளது. கொரோனா காலத்தில், வேளாண் ஏற்றுமதியில் நாடு புதிய சாதனை படைத்துள்ளது. இன்று, இந்தியா மிகப் பெரிய வேளாண் ஏற்றுமதி நாடாக அங்கீகரிக்கப்படும் போது, சமையல் எண்ணெய் தேவைக்கு இறக்குமதியை சார்ந்திருப்பது சரியானது அல்ல.

சகோதர, சகோதரிகளே, நாட்டின் வேளாண் கொள்கைளில் சிறு விவசாயிகளுக்கு, தற்போது அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்த உணர்வுடன், கடந்த சில ஆண்டுகளில், சிறு விவசாயிகளுக்கு வசதி மற்றும் பாதுகாப்பு வழங்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், இதுவரை விவசாயிகளுக்கு ரூ.1 லட்சத்து 60 கோடி வழங்கப்பட்டுள்ளதுஇவற்றில் ரூ. 1 லட்சம் கோடி கொரோனா காலத்தில், சிறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. கொரோனா காலத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டனஇதுபோன்று விவசாயிகள், நாட்டில் வரவுள்ள வேளாண் கட்டமைப்பு மற்றும் இணைப்பு உள்கட்டமைப்புகளால் பயனடைவர்உணவு பூங்காக்கள், கிசான் ரயில்கள் மற்றும் உள்கட்டமைப்பு நிதி ஆகியவை சிறு விவசாயிகளுக்கு உதவும். கடந்த ஆண்டில், உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன

சகோதர, சகோதரிகளே, உள்கட்டமைப்பு மூலமாகவோ அல்லது 10,000 விவசாயி உற்பத்தி சங்கங்களை அமைப்பதன் வாயிலாகவோ, சிறு விவசாயிகளை அதிகாரப்படுத்தும் முயற்சி நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கைகள் மூலம், சிறு விவசாயிகளின் சந்தைகளுக்கான அணுகலையும், விவசாய உற்பத்தியாளர் சங்கம் மூலம்  பேரம் பேசும் சக்தியையும் அதிகரிக்க முடியும். நூற்றுக்கணக்கான சிறு விவசாயிகள் இந்த அமைப்புகள் மூலம் ஒன்று சேரும்போது, அவர்களது வலிமை பல நூறு மடங்கு அதிகரிக்கும். இது உணவு பதப்படுத்துதல் அல்லது ஏற்றுமதிக்கு விவசாயிகள் மற்றவர்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும். வெளிநாட்டு சந்தைகளில் தங்களது விளைபொருட்களை தாங்களாகவே விற்பனை செய்ய இது வழிவகுக்கும். நாட்டின் விவசாயிகள் தடைகளில் இருந்து விடுவிக்கப்பட்டால்தான், அவர்களால் விரைவாக முன்னேற முடியும். இந்த எழுச்சி உணர்வுடன், அடுத்த 25 ஆண்டுக்கான தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும். இன்று முதல் எண்ணெய்வித்துக்கள் உற்பத்தியில் தன்னிறைவு அடையவேண்டும் என்ற முனைப்புடன் நாம் செயல்பட வேண்டும். மீண்டும் ஒருமுறை பிஎம் கிசான் சம்மான் நிதி பயனாளிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!

 

***



(Release ID: 1744790) Visitor Counter : 588