குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

தடுப்பூசி போடுவது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பாக இருக்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவர்

Posted On: 01 JUL 2021 12:04PM by PIB Chennai

கொரோனா தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் குறித்து மக்கள் மத்தியில் எடுத்துரைக்க வேண்டியது அவசியம் என்று குடியரசு துணைத்தலைவர் திரு.எம்.வெங்கைய நாயுடு வலியுறுத்தியுள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது என்ற இலக்கை நிறைவேற்ற அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மருத்துவர்கள் தினத்தையொட்டி, சென்னையில் குடியரசுத் துணைத்தலைவரை பிரபல சிறுநீரகவியல் துறை நிபுணர் டாக்டர் ஜார்ஜி ஆப்ரகாம் சந்தித்து புத்தகம் ஒன்றை வழங்கினார். அப்போது, மேற்கண்ட கருத்துக்களை திரு.வெங்கையா நாயுடு எடுத்துரைத்தார். “எனது நோயாளிகள் எனது கடவுள் –  சிறுநீரகவியல் மருத்துவர் ஒருவரின் பயணம்” (“MY PATIENTS MY GOD- JOURNEY OF A KIDNEY DOCTOR”) என்ற தலைப்பிலான இந்தப் புத்தகத்தில் மருத்துவர், கல்வியாளர், ஆய்வாளர் என்ற முறையில் டாக்டர் ஆப்ரகாமின் 40 ஆண்டுகாலப் பயணம் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு.வெங்கையா நாயுடு, தடுப்பூசி போடுவதில் மக்களில் ஒரு தரப்பினர், குறிப்பாக கிராமப்பகுதிகளில் உள்ள மக்கள் மத்தியில் உள்ள தயக்கத்தைப் போக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார். குறிப்பிட்ட பிரிவினர் மத்தியில் உள்ள அச்சத்தைக் களைய வேண்டியது அவசியம் என்றும், தடுப்பூசி போடுவது என்பது உண்மையில் இந்தியா முழுமைக்குமான மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்றும் அவர் கூறினார். ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிக்கு மருத்துவத் துறையினர் தலைமை வகிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

கொரோனா வைரஸுக்கு எதிரான நமது போராட்டத்தில் சமூக ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்ட குடியரசு துணைத் தலைவர், தடுப்பூசி போட தயக்கம் காட்டுபவர்கள், தங்களது உயிருக்கு மட்டுமன்றி, தங்களது குடும்பத்தினரையும் தவிர்க்க முடியாத ஆபத்தில் கொண்டுபோய் விடுகிறார்கள் என்ற உண்மையை புரிய வைக்க வேண்டும் என்று கூறினார்.

தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்துவதற்காக “ஒரே இந்தியா” என்ற உணர்வுடன் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று அவர் கூறினார். தடுப்பூசி போட மக்களை ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட, சமூக அமைப்புகளின் உறுப்பினர்களும், திரைத்துறை பிரபலங்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு துறை பிரபலங்களும் முன்வர வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். தடுப்பூசி போடுவது என்பது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று திரு.வெங்கையா நாயுடு கூறினார்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றை வென்றெடுக்க அதிவேகமாக தடுப்பூசி போடுவதே வழி என்று அவர் குறிப்பிட்டார். இந்தியா ஏற்கனவே 32 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளைப் போட்டு, அமெரிக்காவின் அளவை தாண்டியிருப்பதை குடியரசுத் துணைத் தலைவர் நினைவுகூர்ந்தார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் சுகாதாரப் பணியாளர்களின் தியாகம் குறித்து பேசிய குடியரசு துணைத் தலைவர், உயிர்க்கொல்லி வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் உயிரைக் காப்பதற்காக தங்களைத் தாங்களே ஆபத்தில் சிக்கவைத்துக் கொண்டதாகக் கூறினார். கொரோனா தொற்றால் மருத்துவத் துறையைச் சேர்ந்த சுமார் 1,500 பேர் உயிரிழந்திருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் கூறியிருப்பதை அவர் குறிப்பிட்டார். இது அவர்களின் தொழில் மீதான இணையில்லா அர்ப்பணிப்பு மற்றும் எடுத்துக் கொண்ட உறுதிமொழி மீதான உறுதியை வெளிப்படுத்துவதாக திரு.நாயுடு கூறினார். மனிதசமூகத்துக்கு தங்களது சுயநலமற்ற சேவையை செய்துள்ள சுகாதாரத் துறையினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட திரு.நாயுடு, அவர்களது தியாகத்துக்கு நாடு எப்போதும் நன்றியுடன் இருக்கும் என்று கூறினார்.

இந்த ஆண்டு மருத்துவர்கள் தினத்திற்கு “உயிர்காப்பவர்களைப் பாதுகாப்போம்” என்ற கருத்துரு தேர்வுசெய்யப்பட்டிருப்பதை அவர் குறிப்பிட்டார். கொரோனா பெருந்தொற்றால் இதுவரை இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள, சுகாதார அவசரநிலை காலத்தில் சேவையாற்றும் நமது மருத்துவர்களின் நலனையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் என்று குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தினார்.

கடவுள் நாராயணனைப் போன்றவர்கள் மருத்துவர்கள் என்று குறிப்பிட்ட அவர், மருத்துவர்கள் மீது இந்திய சமூகம் வைத்துள்ள மரியாதையை எடுத்துரைத்தார். தங்களது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி தொடர்பில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்களை திரு.வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டார்.

அறிவுத்திறன் மற்றும் பயிற்சி பெற்றவர்களைப் பெற்று, இயற்கையான பலத்தை நமது தேசம் கொண்டுள்ளதாக அவர் கூறினார். குறுகிய காலத்தில் பாதுகாப்பான மற்றும் திறன்வாய்ந்த தடுப்பூசியையும், தனிநபர் பாதுகாப்பு கவச உடைகள், பரிசோதனை கருவிகள், செயற்கை சுவாச கருவிகள் போன்ற மற்ற அத்தியாவசியப் பொருட்களையும் தயாரித்த விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு திரு.நாயுடு பாராட்டு தெரிவித்தார்.

புகழ்பெற்ற மருத்துவர், கல்வியாளர் மற்றும் சுதந்திரப் போராட்டத் தியாகியான டாக்டர் பிதான் சந்திர ராயின் பிறந்த தினமே, மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படும் நிலையில், அவருக்கு திரு.வெங்கையா நாயுடு மரியாதை செலுத்தினார்.

***



(Release ID: 1731883) Visitor Counter : 304