வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாட்டின் வடகிழக்கு பகுதியின் வளர்ச்சி திட்டங்களுக்கு இஸ்ரோ உதவும்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 09 JUN 2021 4:47PM by PIB Chennai

விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடகிழக்கு பகுதியில் வளர்ச்சி திட்டங்களுக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உதவும் என்று வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான திரு ஜிதேந்திர சிங் இன்று கூறினார்.

வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து எட்டு மாநிலங்களில் உள்கட்டமைப்பு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப் படுவதற்காக செயற்கை கோள் மற்றும் இதர விண்வெளி தொழில்நுட்பங்களை இஸ்ரோ பயன்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

வட கிழக்கு மாகாண வளர்ச்சி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் உயர்மட்ட கூட்டத்திற்கு தலைமை வகித்த அமைச்சர், இஸ்ரோ செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்த முன்மொழிதல்களை வடகிழக்கில் உள்ள எட்டு மாநிலங்களில் ஆறு ஏற்கனவே அனுப்பிவிட்டதாக தெரிவித்ததோடு, மிச்சமிருக்கும் இரண்டு மாநிலங்களான சிக்கிம் மற்றும் அசாமும் விரைவில் தங்கள் அறிக்கைகளை அனுப்பிவிடும் என்றார்.

வட கிழக்கு மாகாண வளர்ச்சி அமைச்சகத்தால் எட்டு மாநிலங்களில் நிதியுதவி அளிக்கப்பட்ட 221 இடங்களில் உள்ள 67 திட்டங்களை இஸ்ரோ ஏற்கனவே புவியியல் குறியீடு செய்து கண்காணித்து வருவதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

இந்தியாவிலேயே முதல்  முறையாக செயல்படுத்தப்பட்டுள்ள இந்த முறை இதர மாநிலங்களுக்கும் முன் உதாரணமாக அமையலாம் என்று அவர் தெரிவித்தார்.

விவசாயம், ரயில்வே, சாலைகள் மற்றும் பாலங்கள், மருத்துவ மேலாண்மை/தொலை மருத்துவம், பேரிடர் முன்னறிவிப்பு மற்றும் மேலாண்மை, வானிலை/மழை/வெள்ள முன்னறிவிப்பு உள்ளிட்ட துறைகளில் வடகிழக்கு பகுதியில் விண்வெளி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருவதாக டாக்டர் ஜிதேந்திர சிங் மேலும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725647

----



(Release ID: 1725711) Visitor Counter : 174