பிரதமர் அலுவலகம்

‘மழைநீர் சேகரிப்பு’ பிரச்சார தொடக்க விழாவில் பிரதமரின் உரை

Posted On: 22 MAR 2021 4:31PM by PIB Chennai

மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் செகாவத், மத்தியப் பிரதேச முதல்வர் திரு சிவராஜ் சிங் சவுகான், உத்தரப் பிரதேச முதல்வர் திரு யோகி ஆதித்யநாத், ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு ரத்தன் லால் கட்டாரியா, மதிப்பிற்குரிய அதிகாரிகள், இந்த பிரசாரத்தை மேற்கொள்ளும் கிராமத் தலைவர்கள், இதர பொது பிரதிநிதிகள் மற்றும் எனது அருமை சகோதர, சகோதரிகளே!

 மழைநீர் சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபடும் கிராமத் தலைவர்களின் பேச்சை கேட்டது எனது பாக்கியம். அவர்களின் பேச்சை கேட்டபின், எனக்கு புதிய உத்வேகம் கிடைத்துள்ளது.

தண்ணீரின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு, அதிகரித்துள்ளது மகிழ்ச்சி. தண்ணீரின் முக்கியத்துவத்தை உலகுக்கு எடுத்துக் காட்டுவதற்காக, சர்வதேச தண்ணீர் தினம் இன்று கொண்டாப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், 2 முக்கிய விஷயங்களுக்காக இன்று

நாம் கூடியுள்ளோம். மழைநீர் சேகரிப்பு பிரச்சாரத்துடன், இந்தியாவில் தண்ணீர் பிரச்னையை தீர்க்க, கென்-பெத்வா நதி நீர் இணைப்பு திட்டத்திற்கான முக்கிய நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேச மக்களின் நலனுக்காக இன்று கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தம், அடல் பிஹாரி வாஜ்பாயின் கனவை நனவாக்குவதில் மிகச் சிறந்த நடவடிக்கை.

சகோதர, சகோதரிகளே,

21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கு போதிய அளவில் தண்ணீர் கிடைப்பது மிக முக்கியம். தண்ணீர் இல்லாமல் விரைவான வளர்ச்சிக்கு சாத்தியம் இல்லை.

இந்திய வளர்ச்சியின் தொலைநோக்கு திட்டம் மற்றும் இந்தியாவின் தன்னம்பிக்கை ஆகியவை நமது நீர் வளங்கள் மற்றும் நீர் இணைப்பை சார்ந்து உள்ளன. இந்தியாவின் வளர்ச்சிக்கு நிகராக, தண்ணீர் பிரச்னை சவாலும் அதிகரிக்கிறது. அரசு தனது கொள்கைகள் மற்றும் முடிவுகளில், நீர் நிர்வாகத்துக்கு முன்னுரிமை அளிக்கிறது. இந்த நோக்கில், கடந்த 6 ஆண்டுகளில், பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தண்ணீர் பாதுகாப்பு பற்றி நாடு கவலைப்படாவிட்டால், வரும் காலங்களில் நிலைமை மோசமாகும். நமது முன்னோர்கள் நமக்கு வழங்கிய நீரை, வருங்கால தலைமுறையினருக்கும் கிடைக்கச் செய்வது நமது பொறுப்பு.  தண்ணீரை வீணாக்குவதை நாம் அனுமதிக்க கூடாது என உறுதி ஏற்க வேண்டும்.

சகோதர, சகோதரிகளே,

விவசாய உற்பத்தியை மேம்படுத்தும் பிரதமரின் கிரிஷி சிஞ்சாய், ஒவ்வொரு நிலத்துக்கும் தண்ணீர் வசதி குறித்த பிரச்சாரம், ஒவ்வொரு துளி நீருக்கும், அதிக விளைச்சல் குறித்த பிரச்சாரம், நமாமி கங்கை திட்டம், ஜல் ஜீவன் திட்டம் அல்லது அடல் பூஜல் திட்டம் ஆகிய திட்டங்களிலும், பணி துரிதமாக மேற்கொள்ளப்படுகிறது.

நிலத்தடி நீரை சார்ந்திருப்பதை குறைத்து, மழைநீரை வைத்து நாடு சமாளிப்பது சிறந்தது. ஆகையால், மழைநீர் சேகரிப்பு பிரசாரத்தின் வெற்றி மிக முக்கியம். ஜல் சக்தி திட்டத்தில் நகரம் மற்றும் ஊரக பகுதிகள் இரண்டும் சேர்க்கப்பட்டுள்ளன.

வரும் மழைக்காலத்தில், நீர் பாதுகாப்பு முயற்சிகளை அதிகரிக்க வேண்டும். நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் தண்ணீர் உறுதிமொழி, ஒவ்வொருவரின் வாக்குறுதியாக இருக்க வேண்டும்.

தண்ணீருக்கு மதிப்பளிக்கும் வகையில் நமது பழக்கவழக்கங்கள் மாறும்போது, இயற்கையும் நமக்கு உதவும்.

நண்பர்களே,

மழை நீர் சேகரிப்பு தவிர, நதிநீர் மேலாண்மை குறித்தும் நமது நாடு நீண்ட காலமாக ஆலோசித்து வருகிறது. தண்ணீர் பிரச்னையிலிருந்து நாட்டை காக்கும் நோக்கில், நாம் தற்போது செயல்பட வேண்டியது அவசியம்.

இந்த தொலைநோக்கின் ஒருபகுதிதான் கென்-பெத்வா நதி நீர் இணைப்புத் திட்டம். இத்திட்டத்தை நனவாக்க உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் மேற்கொண்ட நடவடிக்கை பாராட்டுக்குரியது.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, நமது நாட்டில் உள்ள 19 கோடி கிராம குடும்பங்களில் 3.5 கோடி குடும்பங்கள் மட்டும் குடிநீர் குழாய் இணைப்பை பெற்றிருந்தன. ஜல் ஜீவன் திட்டம் தொடங்கியபின், குறுகிய காலத்தில் 4 கோடி புதிய குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

நண்பர்களே,

ஜல் ஜீவன் திட்டத்தில், பொது மக்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் பங்களிப்பு முக்கியமானது.

சுதந்திரத்துக்கு பின் முதல் முறையாக, தண்ணீர் பரிசோனை தொடர்பாக அரசு தீவிரமாக செயல்படுகிறது. இந்த தண்ணீர் பரிசோதனை பிரச்சாரத்தில், நமது கிராம சகோதரிகள் மற்றும் புதல்விகளும் பங்குதாரர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று காலத்தில், தண்ணீர் பரிசோதனை குறித்து சுமார் 4.5 லட்சம் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

ஒவ்வொரு கிராமத்திலும், தண்ணீர் பரிசோதனை குறித்த பயிற்சி பெற்ற பெண்கள் 5 பேர் உள்ளனர். நீர் நிர்வாகத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பது, நிச்சயம் நல்ல முடிவுகளை தரும்.

மக்கள் பங்களிப்புடன் நாம் தண்ணீரை சேமிக்க முடியும் என நான் உறுதியாக நம்புகிறனே். ஜல்சக்தி திட்டம் வெற்றியடைய வேண்டும் என நான் அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்கிறேன்.

உலக தண்ணீர் தின நிகழ்ச்சியை முன்னிட்டு, நடந்த இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நான் மீண்டும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். தண்ணீரை பாதுகாக்க நாம் முயற்சி எடுப்போம். இதில் நாம் வெற்றி பெறுவோம். அப்போதுதான் நமது பூமி, வாழ்க்கை மற்றும் பொருளாதாரம் ஆகியவை புத்துணர்ச்சி பெறும். இந்த எதிர்பார்ப்புடன் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1706627

*****************



(Release ID: 1706991) Visitor Counter : 224