மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

‘எஜுகான் 2020’: சர்வதேச ஒருங்கிணைந்த மாநாட்டை தொடங்கி வைத்தார் கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’

Posted On: 07 JAN 2021 5:08PM by PIB Chennai

மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’, சர்வதேச ஒருங்கிணைந்த மாநாடு ‘எஜுகான் 2020’-ஐ காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். பஞ்சாபின் பதிண்டா மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் (டாக்டர்) ராகவேந்திரா பி திவாரி மற்றும் சர்வதேச கல்வி ஆராய்ச்சி சங்கத்தின் காப்பாளர் பத்மஸ்ரீ டாக்டர் மஹேந்திர சோதா ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் பஞ்சாபின் பதிண்டா மத்திய பல்கலைக்கழகம் மற்றும் சர்வதேச கல்வி ஆராய்ச்சி சங்கம் ஆகியவை இந்த இரண்டு நாள் மாநாட்டை நடத்துகின்றன. சர்வதேச அமைதியை மீட்டெடுப்பதற்காக இளைஞர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான கல்வி குறித்த தொலைநோக்கு பார்வை என்பது இந்த மாநாட்டின் கருப்பொருளாகும்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’, இந்த மாநாட்டுக்கு தகுந்த கருப்பொருளை தேர்ந்தெடுத்த பஞ்சாபின் பதிண்டா மத்திய பல்கலைக்கழகத்தைப் பாராட்டினார். ஆராய்ச்சி என்பது 24 மணி நேரமும் மேற்கொள்ள வேண்டிய பயிற்சி, அதில் ஈடுபடுவதற்கு வலுவான முயற்சி தேவை என்பதை இந்த இரண்டு நாள் மாநாடு உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு எடுத்துரைப்பதாக அவர் கூறினார். கல்வித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான வேறுபட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் அதன் இயக்கம் குறித்த தகவல்களை எதிர்கால ஆசிரியர்களுக்கு இந்த சர்வதேச மாநாடு வழங்கும் என்று அவர் தெரிவித்தார். எஜுகான் 2020 மாநாட்டில் சர்வதேச பேச்சாளர்கள் மற்றும் இளம் ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்படும் பிரகடனங்கள், தேசிய கல்வி கொள்கை 2020-ஐ செயல்படுத்துவதற்குத் தேவையான வரைமுறையை தயாரிப்பதற்கும், தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் வகையில் இளைஞர்களுக்குத் தேவையான திறனை வழங்குவதிலும் பெரிதும் உதவியாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் சர்வதேச அமைதியை மீட்டெடுப்பதற்காக இளைஞர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான கல்வி குறித்த தொலைநோக்கு பார்வை என்னும் கருப்பொருளின் கீழ் 10 குறிப்பிட்ட தலைப்புகளில் இந்தியா, இங்கிலாந்து, கனடா, தாய்லாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்கள் தொடர்ந்து 31 மணி நேரம் விவாதிப்பார்கள்.

உயர்கல்வித் துறையில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சமமான, தரமான கல்வியை இந்தியாவில் வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள் 31 மணி நேரம் தொடர்ந்து ஆலோசனை நடத்துவது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1686807

-----



(Release ID: 1686911) Visitor Counter : 188