மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

புதுமையான பொம்மைகளுக்கான போட்டி, இணையதளம் : மத்திய அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்


டாய்கத்தான்-2021 வெற்றியாளர்களுக்கு ரூ 50 லட்சம் மதிப்பிலான பரிசுகள்

Posted On: 05 JAN 2021 4:59PM by PIB Chennai

டாய்கத்தான்-2021’ என்னும் புதுமையான பொம்மைகளுக்கான போட்டியை மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்மற்றும் மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாடு மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் திருமதி ஸ்மிரிதி ஜுபின் இரானி ஆகியோர் இணைந்து இன்று துவக்கி வைத்தனர்.

டாய்கத்தான் இணையதளத்தையும் மத்திய அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இந்திய மதிப்பு முறை சார்ந்த, குழந்தைகளிடையே நேர்மறை நடத்தையையும் நன்மதிப்பையும் விதைக்கும் புதுமையான பொம்மைகளை உருவாக்குவதே இந்த டாய்கத்தானின் நோக்கமாகும்.

நிகழ்ச்சியில் பேசிய திரு பொக்ரியால், சர்வதேச பொம்மை தயாரிப்பு மையமாக இந்தியாவை உருவாக்குவதற்காக டாய்கத்தான் நடத்தப்படுவதாகக் கூறினார். இந்திய பொம்மை சந்தையின் மதிப்பு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றும், ஆனால் துரதிர்ஷடவசமாக 80 சதவீத பொம்மைகள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் கூறினார். உள்நாட்டு பொம்மை தொழில்கள், உள்ளூர் பொம்மை உற்பத்தியாளர்களுக்கான சூழலியலை உருவாக்குவதற்காகவும், இதுவரை பயன்படுத்தப்படாத வளங்களை பயன்படுத்திக் கொள்வதற்காகவும், அவற்றின் மொத்தத் திறனையும் வெளிக்கொண்டு வருவதற்காகவும் டாய்க்கத்தானை அரசு தொடங்கியிருக்கிறது. தேசிய கல்வி கொள்கையின் லட்சியங்களோடு ஒத்துப் போகும் டாய்க்கத்தான், நாடு முழுவதுமுள்ள 33 கோடி மாணவர்களின் புதுமை திறன்களை பதிவு செய்ய எண்ணுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பேசிய திருமதி ஸ்மிரிதி இரானி, 80 சதவீத பொம்மைகளை இந்தியா இறக்குமதி செய்து வருவதாகவும், இத்துறையில் தற்சார்பை எட்டுவதற்காக உள்நாட்டு பொம்மை தொழில்களுக்கு அரசு ஊக்கமளித்து வருவதாகவும் கூறினார். கல்வி அமைச்சகத்துடனான கூட்டு முயற்சியானது, நாட்டிலுள்ள பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரை தற்சார்பு இந்தியாவுக்கான அறைகூவலுக்கு டாய்க்கத்தான் மூலம் பதிலளிக்க செய்யும் என்று அவர் கூறினார்.

இந்த முன்னெடுப்பைப் பாராட்டிய அமைச்சர், “பொம்மைகளை, குறிப்பாக மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான பொம்மைகளை, பள்ளிக் குழந்தைகள் வடிவமைத்து, உருவாக்குவது இதுவே முதல் முறையாகும்,” என்றார். டாய்க்கத்தானில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ரூ 50 லட்சம் மதிப்பிலான பரிசுகளை வெல்லலாம் என்று அமைச்சர் தெரிவித்தார்.

 

தற்சார்பு இந்தியாவாக உருவாகும் பாதையில் ஒரு மிகப்பெரிய முன்னேற்றமாக, கல்வி அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ஜவுளி அமைச்சகம், வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சகம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு ஆகியவை இணைந்து டாய்கத்தான்-2021-ஐ அறிமுகப்படுத்தியுள்ளன.

டாய்கத்தான்-2021-இல் கலந்து கொள்ள. https://toycathon.mic.gov.in என்னும் இணையதளத்தைப் பார்க்கவும். இம்மாதம் 5ந்தேதி முதல் 20ஆம் தேதி வரை விண்ணப்பங்களை இணையம் மூலம் சமர்ப்பிக்கலாம்.

 

**************** 



(Release ID: 1686328) Visitor Counter : 235