மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பதால் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கிறது ஏஐசிடிஇ-யின் ஆன்லைன் பேராசிரியர் பயிற்சி திட்டங்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
23 NOV 2020 5:27PM by PIB Chennai
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் (ஏஐசிடிஇ) பேராசிரியர்களுக்கான 46 ஆன்லைன் பயிற்சி திட்டங்களை, மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' இன்று தொடங்கி வைத்தார்.
பேராசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ‘அடல் அகாடமி’ என்ற பயிற்சி திட்டத்தை ஆன்லைன் மூலம் ஏஐசிடிஇ தொடங்கியது. இந்த 46 ஆன்லைன் பயிற்சி திட்டங்களை, மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் இன்று தொடங்கி வைத்தார். 22 மாநிலங்களில் இந்த பயிற்சி திட்டங்கள் நடத்தப்படும்.
இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் பேசியதாவது:
மொத்தம் 1000 ஆன்லைன் பயிற்சி திட்டங்கள் மூலம் 100-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் ஐஐடிக்கள், என்ஐடிக்கள், ஐஐஐடிக்கள் உட்பட பல உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயிற்சி பெறவுள்ளனர். இந்தாண்டு ஆன்லைன் பயிற்சி திட்டத்துக்கு ரூ.10 கோடி செலவிடப்படவுள்ளது.
இந்த மிகப் பெரிய பயிற்சி திட்டத்தை உலக சாதனையாக அங்கீகரித்துள்ள லண்டன் நிறுவனம், உலக சாதனை புத்தகத்தில் சேர்க்கவுள்ளது நமக்கு பெருமை அளிக்கும் விஷயம்.
இந்தாண்டு பயிற்சி திட்டத்தில் பொறியியல் துறையில் மேலாண்மை, வாழ்க்கை திறமைகள், வடிவமைப்பு மற்றும் ஊடகம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. புதிய கல்வி கொள்கைக்கு ஏற்ப இந்த ஆன்லைன் பயிற்சி அளிக்கப்படும்.
1000 பயிற்சி திட்டங்களில் 499 பயிற்சி திட்டங்கள் ஏற்கனவே முடிவடைந்து விட்டன. 70 ஆயிரம் பேராசிரியர்கள் ஏற்கனவே பயிற்சி பெற்றுவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1675101
----
(வெளியீட்டு அடையாள எண்: 1675138)
வருகையாளர் எண்ணிக்கை : 253