பிரதமர் அலுவலகம்

இமாச்சலப் பிரதேசம் ரோதங்கில் அடல் சுரங்கப்பாதை தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 03 OCT 2020 1:56PM by PIB Chennai

பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங், இமாச்சலப் பிரதேச முதல்வர் திரு ஜெய்ராம் தாக்கூர், மத்திய அமைச்சர் திரு.அனுராக் தாக்கூர், இமாச்சலப் பிரதேச அமைச்சர்கள் மற்றும் இதர மக்கள் பிரதிநிதிகள், முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், ராணுவ தளபதி, எல்லை ரோடுகள்  அமைப்பினர், இமாச்சலப் பிரதேச சகோதர, சகோதரிகளே!

இன்று ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள். இன்று, அடல்ஜியின் கனவு நிறைவேறியது மட்டுமல்லாமல், இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்களின்  பல தசாப்தங்களின் காத்திருப்பும்  முடிவுக்கு வந்துள்ளது.

இன்று அடல் சுரங்கப்பாதையைத் தொடங்குவதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பது  எனது அதிர்ஷ்டம். திரு. ராஜ்நாத் சிங் கூறியது போலவே, நான் இங்கு எங்கள் அமைப்பின் பணிகளை கவனித்து வந்தேன், எனது வாழ்க்கையின் சிறந்த நாட்களை இந்த இடத்தின் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளில் கழித்தேன். அடல்ஜி மணாலி வந்து  தங்கும்போது,  நான் அவரைப் பார்ப்பேன், நாங்கள் பேசிக் கொண்டிருப்போம். ஒரு நாள் நானும் துமல் ஜியும், தேநீர் அருந்திவிட்டு,  அவருடன் இந்த சுரங்கப்பாதை விஷயம் குறித்து  பேசினோம். அது அடல்ஜியின் கனவாகிவிட்டது. அதை இப்போது நம் கண் முன் ஒரு சாதனையாக காண முடிகிறது.

 

சில நிமிடங்களுக்கு முன்பு, அடல் சுரங்கப் பாதை உருவாக்கப்பட்ட  திரைப்படத்தையும், போட்டோ கண்காட்சியையும் நாம் பார்த்தோம். அசைக்கமுடியாத பிர் பஞ்சால் மலைத் தொடரை துளைத்து இந்த சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாபெரும் திட்டத்திற்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்த  வீரர்கள், பொறியாளர்கள், அனைத்து தொழிலாளர் சகோதர சகோதரிகள் போன்ற கடின உழைப்பாளிகளுக்கு இன்று நான் வணக்கம் செலுத்துகிறேன்.

நண்பர்களே,

அடல் சுரங்கப்பாதை இமாச்சலப் பிரதேசத்தின் பெரும்பகுதிக்கும், புதிய யூனியன் பிரதேசமான லே-லடாக்கிற்கும் உயிர்நாடியாக இருக்கப் போகிறது. இப்போது, இந்த பரந்த பகுதி நாட்டின் பிற பகுதிகளுடன் எப்போதும் இணைந்திருக்கும். மணாலிக்கும் கீலாங்கிற்கும் இடையிலான தூரத்தை 3-4 மணி நேரம் குறைக்கும். 

நண்பர்களே,

விவசாயிகள், தோட்டக்கலை விவசாயிகள், இளைஞர்கள் ஆகியோர் தலைநகர் தில்லிக்கும், இதர மார்க்கெட் பகுதிக்கும் இனி எளிதாக செல்ல முடியும். அவர்களின் சிரமங்கள் குறைக்கப்படும். இதற்காக இமாச்சலப் பிரதேசம்,  லே மற்றும் லடாக் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

நண்பர்களே,

இந்திய எல்லைகள் கட்டமைப்பிற்கு, அடல் சுரங்கப் பாதை, புதிய உத்வேகத்தை அளிக்கும். இதுபோன்ற எல்லை இணைப்பு திட்டங்கள், பாதுகாப்பு படையினருக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்லவும், அவர்களின் ரோந்து பணிக்கும் உதவியாக இருக்கும்.

அடல் சுரங்கப்பாதை, இந்தியாவின் எல்லை உள்கட்டமைப்பிற்கு புதிய பலத்தை அளிக்கப் போவதாகவும்,  உலகத் தரம் வாய்ந்த எல்லை இணைப்பிற்கு, இது ஒரு வாழ்க்கை சான்றாக இருக்கும். 

எல்லைப் பகுதிகளின் உள்கட்டமைப்பு மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நீண்டகால கோரிக்கை இருந்தபோதிலும், எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் பல தசாப்தங்களாக கஷ்டப்படுவதற்கு மட்டுமே திட்டங்கள் முன்பு உருவாக்கப்பட்டன .

இந்த சுரங்கப்பாதைக்கான  சாலை திட்டத்துக்கு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் கடந்த 2002-ம் ஆண்டில் அடிக்கல் நாட்டினார்.   வாஜ்பாய் அரசுக்குப்பின்,  இந்த சுரங்க பாதை பணி மிகவும் புறக்கணிக்கப்பட்டதால், 1300 மீட்டர் மட்டுமே அதாவது 1.5 கி.மீ க்கும் குறைவான சுரங்கப்பாதை 2013-14 வரை அமைக்கப்பட்டது.

 ஒவ்வொரு ஆண்டும் சுமார் 300 மீட்டர் மட்டுமே இந்த பணிகள் நடந்தது.

இந்த வேகத்தில் பணி நடந்தால், இந்த சுரங்கப்பாதை 2040-ம் ஆண்டுதான் முடியும் என நிபுணர்கள் அப்போது தெரிவித்தனர்.

இந்த பணியை மத்திய அரசு ஆண்டுக்கு 1400 மீட்டராக  துரிதப்படுத்திது.  26 ஆண்டுகள் மதிப்பிடப்பட்ட இத்திட்டத்தை, 6 ஆண்டுகளில் முடிக்க முடிந்தது. 

நண்பர்களே,

நாடு பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் முன்னேற வேண்டியிருக்கும் போது, உள்கட்டமைப்பை விரைவாக உருவாக்க வேண்டும்.   இதற்கு அரசியல் விருப்பமும், தேசத்தின் முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பும் தேவை.

இதுபோன்ற முக்கியமான மற்றும் பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களை நிறைவு செய்வதில் ஏற்படும் தாமதம் நிதி இழப்புகளை ஏற்படுத்துகிறது மற்றும் மக்களுக்கு பொருளாதார மற்றும் சமூக நலன்களை இழக்கச் செய்கிறது.

 

 கடந்த 2005ம் ஆண்டு இந்த சுரங்கப்பாதை கட்டுமான செலவு ரூ.950 கோடியாக இருந்தது. தொடர் தாமதம் காரணமாக, 3 மடங்கு அதிக செலவுடன் ரூ.3,200 கோடி செலவில் தற்போது இத்திட்டம் முடிவடைந்துள்ளது.

நண்பர்களே,

அடல் சுரங்கப் பாதை போல், பல முக்கிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

லடாக்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தவுலத் பெக் ஓல்டி விமான தள ஓடு பாதையை விமானப்படை விரும்பினாலும், 40 முதல் 45 ஆண்டுகளாக அது முடிவடையாமல் இருந்தது.

நண்பர்களே,

 அசாம் மாநிலத்தில் போகிபீல் பாலத்தின் பணிகளும் அடல் ஆட்சி காலத்தில் தொடங்கின, ஆனால் அதன் பணிகள் பின்னர் குறைந்துவிட்டன.  இந்த பாலம் அருணாச்சலுக்கும் வடகிழக்குப் பிராந்தியத்திற்கும் இடையிலான முக்கிய இணைப்பை வழங்குகிறது. 2014 க்குப் பிறகு இந்த பணி வேகம் அடைந்தது. அடல் ஜி பிறந்தநாளை முன்னிட்டு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது.

பீகாரின் மிதிலாஞ்சல் பகுதியில் கோசி பெரிய பாலத்துக்கு அடல் பிஹாரி வாஜ்பாய் அடிக்கல் நாட்டினார் .  2014ம் ஆண்டுக்குப்பின் அதன் பணிகள் துரிதப்படுத்தப்பட்டதால், அந்த பாலம் சில வாரங்களுக்கு முன் திறக்கபட்டது.

நண்பர்களே,

நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், முக்கிய இணைப்பு திட்டங்களின் நிலை இப்படித்தான் இருந்தது. நிலைமை தற்போது மாறியுள்ளது.  கடந்த 6 ஆண்டுகளில், எல்லை கட்டமைப்பு, முழு வேகத்துடன் மேம்படுத்தப்படுகிறது.  இமாச்சலம், ஜம்மு காஷ்மீர், கார்கில்-லே-லடாக், உத்தரகாண்ட், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் போன்ற இமயமலைப் பகுதிகளில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பல திட்டங்கள் நடந்து வருகின்றனர்.

நண்பர்களே,

நாட்டின் பாதுகாப்பு படையினரின் தேவைகளை கவனித்துக்கொள்வது அரசாங்கத்தின் மிக உயர்ந்த முன்னுரிமைகளில் ஒன்றாகும்.  ஆனால் இதுவும், முன்னர் சமரசம் செய்யப்பட்டு, நாட்டின் பாதுகாப்புப் படைகளின் நலன்களும் சமரசம் செய்யப்பட்டன.

பாதுகாப்பு படையினருக்கு ஒரே பதவி, ஒரே ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துதல், நவீன போர் விமானங்கள், ஆயுதங்கள், தளவாடங்கள் கொள்முதல் செய்ய மத்திய அரசு பல நடவடிக்கைகள் எடுத்தது, இவற்றையெல்லாம் முந்தைய அரசு கிடப்பில் போட்டிருந்தது.   இவற்றை நிறைவேற்ற முந்தைய அரசுகளுக்கு, அரசியல் விருப்பம் இல்லை.

நண்பர்களே,

நாட்டில் இந்தச் சூழல் இன்று மாறியுள்ளது. ராணுவத் தளவாட தயாரிப்பில் அன்னிய நேரடி முதலீடுக்கு தளர்வுகள் அளிக்கும் வகையில் முக்கிய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.  இதன் மூலம் நவீன ஆயுதங்கள் மற்றும் வெடிப் பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிக்க முடியும்.

தலைமை தளபதி பதவியை உருவாக்கும் வகையில் சீர்திருத்தம் செய்யப்பட்டது.  இதன் மூலம் பாதுகாப்பு படைகளின் தேவைக்கேற்ப உற்பத்தி மற்றும் கொள்முதலில் ஒருங்கிணைப்பு ஏற்பட்டுள்ளது. ராணுவத் தளவாடங்கள் பல இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அவைகள் எல்லாம் தற்போது இந்திய நிறுவனங்களிடம் வாங்கப்பட வேண்டும்.

நண்பர்களே,

பாதுகாப்புத் தொழில் துறையில், அன்னிய முதலீடு மற்றும் தொழில்நுட்பத்தை ஈர்க்க பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.  வளர்ந்து வரும் இந்தியாவின் உலகளாவிய நிலைக்கு ஏற்ப, நாட்டின் கட்டமைப்புகளையும், பொருளாதாரத்தையும், யுக்திகளையும் மேம்படுத்த வேண்டும். 

 

தற்சார்பு இந்தியா நம்பிக்கை, இன்று மக்களின் மனநிலையாக மாறிவிட்டது. இந்த நம்பிக்கையின் அடையாளம்தான் அடல் சுரங்கப்பாதை.

இமாச்சலப் பிரதேசம் மற்றும் லே-லடாக் பகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான நண்பர்களுக்கும், இந்த சுரங்கப் பாதை கட்டும் பணியில் ஈடுபட்டவர்களுக்கும்  மீண்டும் ஒரு முறை வாழ்த்துத் தெரிவிக்கிறேன்.

நன்றி.

*****



(Release ID: 1662270) Visitor Counter : 310