குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

தொற்று காலத்தில் முதியவர்களுக்கு ஆதரவும், சிறப்பு கவனமும் தேவை என குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தல்

Posted On: 30 AUG 2020 1:46PM by PIB Chennai

கோவிட்-19 நிலவும் தற்போதைய சூழலில் முதியோர் மீது சிறப்பு கவனம் செலுத்துவதுடன், அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டியது அவசியம் என குடியரசுத் துணைத்தலைவர் திரு. எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார். சுகாதார நெருக்கடி மிக்க இதுபோன்ற நிலையில், வயது முதிர்ந்தோர் சந்திக்கும் அபாயத்தின் அளவு அதிகம் என்று கூறிய அவர், வீடுகளில் முதியோர் இருந்தால், கோவிட்-19 தொடர்பான கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை குடும்பத்தினரும், இளைஞர்களும் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

‘இந்தியாவின் மூத்த குடிமக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்’ என்ற தலைப்பில் குடியரசுத் துணைத்தலைவர் இன்று வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், மாவட்ட மருத்துவமனைகளில் வயது முதிர்ந்தோருக்கு என தனித்துறையை எப்போதாவது தான் பார்க்க முடிகிறது எனக் கூறியுள்ளார்.

மூத்த குடிமக்கள் பொது இடங்களை எளிதில் அணுகக்கூடிய வகையில் தடுப்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று குடியரசுத் துணைத்தலைவர் வலியுறுத்தியுள்ளார். நமது நகரங்களும், அவற்றில் உள்ள வசதிகளும் முதியவர்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

‘’ முதியவர்களைப் பாதுகாப்பது, இளைஞர்கள் உள்பட ஒவ்வொருவரின் புனிதக் கடமையாகும்’’ என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியக் கலாச்சாரத்திலும், சமுதாயத்திலும், பெற்றோருக்கு உரிய மரியாதை வழங்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், மூத்தவர்களின் காலைத் தொட்டு நாம் வணங்கும்போது, அவர்களது அன்பு, அறிவு, அனுபவம் ஆகியவற்றை அங்கீகரித்து, மரியாதை செலுத்துகிறோம் என்று பொருள் என தெரிவித்துள்ளார்.

“சமுதாயத்தில் அமைதியும், இணக்கமும் இருக்க வேண்டும் என நாம் பேசும்போது, மரியாதை மற்றும் நட்பு மூலம் ,தலைமுறைகளுக்கு இடையே இணைப்பை ஏற்படுத்துவதற்கு, குடும்பமே அடிப்படையான இடம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் ‘’என்று அவர் கூறியுள்ளார்.



(Release ID: 1649809) Visitor Counter : 188