மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மத்திய கல்வி அமைச்சர், காந்திய சிந்தனை மற்றும் தத்துவம் குறித்து, மெய்நிகர் கருத்தரங்கில் உரையாற்றினார்

Posted On: 11 AUG 2020 8:19PM by PIB Chennai

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து , ஜாமியா மில்லியா இஸ்லாமியா (ஜேஎம்ஐ) பல்கலைக்கழகம் செய்திருந்த காந்திய சிந்தனை மற்றும் தத்துவம் குறித்த மெய்நிகர் கருத்தரங்கில் மத்திய கல்வி அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' உரையாற்றினார் . இது காந்திய சிந்தனை மற்றும் தத்துவம் பற்றிய மெய்நிகர் கருத்தரங்கு தொடரின் முதல் சொற்பொழிவாகும். காந்திய சிந்தனையையும் தத்துவத்தையும் அறிவுசார் வட்டாரங்களில் பரப்புவதற்காக மகாத்மா காந்தியின் 150- வது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கான பல்கலைக்கழக மானியக் குழு  திட்டத்துடன் இந்தத் தொடர் ஒத்திசைந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் துணைவேந்தர் பேராசிரியர் நஜ்மா அக்தரும் கலந்து கொண்டார்.

தனது தொடக்க உரையில்,  திரு. பொக்ரியால், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள், உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதாகத் தெரிவித்தார். 1920-ல் ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து வளர்ந்து வருவதாகவும், இந்த அமைப்பு தொடங்கப்படுவதற்கு தமது முழு ஆதரவையும் அளித்த ஒரு மா மனிதரான\ மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி வரும் ஜாமியா மில்லியாவை மத்திய அமைச்சர் வாழ்த்தினார். காந்திய தத்துவத்தையும், அவரது கொள்கைளான உண்மை,அன்பு,பணிவு மற்றும் குறிப்பாக அகிம்சை ஆகியவற்றின் அவசியத்தை, இந்த கடினமான நேரத்தில் ஒட்டுமொத்த உலகமே உணர்ந்து கொண்டிருக்கிறது. காந்தியின் கொள்கைகள் தற்காலத்திற்கும் பொருத்தமானது என்பது அனைவரும் அறிந்ததே. என்றும் அவர் கூறினார். காந்தியின் கருத்துகள் பொருத்தமானதாக இல்லை என்பதாக வாழ்க்கையின் எந்தப் பகுதியும் இல்லை. உண்மை,அமைதி,அகிம்சை,நிலைத்த வளர்ச்சி,சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மதிப்பை அடிப்படையாகக் கொண்ட கல்வி உள்ளிட்ட அம்சங்களில் காந்தியின் சிந்தனைகள் நமக்கு வழிகாட்டுவதாக திரு.பொக்ரியால் தெரிவித்தார்.

 

தேசத்தின் கட்டுமானத்திற்கு எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை காந்திஜியின் வாழ்க்கையிலிருந்து மாணவர்கள் கற்றுக்கொள்ள இன்று நிறைய வாய்ப்புகள் உள்ளதாகவும் மத்திய அமைச்சர் கூறினார். காந்திஜியின் சிந்தனைகள் மற்றும் தத்துவங்களிலிருந்து நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பயன் பெற்று, நாட்டை தன்னிறைவு நாடாக உருவாக்க வேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டார்

 

பல்வேறு கல்வித் துறைகளில் ஜே.எம்.ஐ-யின் தொடர்ச்சியான சிறந்த செயல்திறன் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். குடிமைப் பணிகளிலும், தமது அமைச்சகம் அண்மையில் ஏற்பாடு செய்திருந்த  ஹேக்காதானிலும் ஜே.எம்.ஐ-யின் செயல்திறனை மத்திய அமைச்சர் திரு.ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் மேலும் பாராட்டினார்.

*****



(Release ID: 1645297) Visitor Counter : 203