விவசாயத்துறை அமைச்சகம்

மத்திய வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் வான்வழி பூச்சிக்கொல்லித் தெளிப்பு மூலம் வெட்டுக்கிளியைக் கட்டுப்படுத்த ஹெலிகாப்டர் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

Posted On: 30 JUN 2020 4:35PM by PIB Chennai

உத்தரப்பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள கவுதம் புத் நகரில் உள்ள ஹெலிபேட் தளத்திலிருந்து, பூச்சிக்கொல்லித் தெளிப்பு உபகரணங்களுடன் பெல் ஹெலிகாப்டரை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஹெலிகாப்டர் உமர்லாய், பார்மரில் உள்ள விமானப்படை நிலையத்திற்கு பறக்கும், அங்கு அது ஆரம்பத்தில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து பார்மர், ஜெய்சால்மர், பிகானேர், ஜோத்பூர் மற்றும் நாகவுர் ஆகிய பாலைவனப் பகுதிகளில் வெட்டுக்கிளிக் கட்டுப்பாட்டுக்கு அனுப்பப்படும். பெல் 206-பி 3 ஹெலிகாப்டர் ஒரு விமானியால் இயக்கப்படும். மேலும், ஒரு முறை பயணிக்கும் போது 250 லிட்டர் திறன் கொண்ட பூச்சிக்கொல்லியைச் சுமந்து செல்வதுடன், ஒரு விமானத்தின் மூலம் சுமார் 25 முதல் 50 ஹெக்டேர் பரப்பளவைப் பாதுகாக்கும். ஒரு அதிகாரமளிக்கப்பட்ட குழு சிவில் ஏவியேஷன் டைரக்டரேட் ஜெனரல் மற்றும் சிவில் ஏவியேஷன் அமைச்சகத்திடமிருந்து அனைத்து அனுமதிகளையும் பெற்ற பின்னர், பாலைவனப் பகுதியில் வான்வழித் தெளிப்பதற்காக ஒரு ஹெலிகாப்டரை நிறுத்துவதற்கு இறுதி முடிவு செய்தது.

பின்னர், ஊடகங்களுடன் உரையாடிய திரு நரேந்திர சிங் தோமர், 26 வருட நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கடந்த ஆண்டு வெட்டுக்கிளித் தாக்குதல் நடந்தது என்று கூறினார். இதைத் திறம்படக் கட்டுப்படுத்த இந்திய அரசும் மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டன. இந்த ஆண்டு அதிக வெட்டுக்கிளிப் பிரச்சினை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது, இருப்பினும் அரசாங்கம் முழு தயார் நிலையில் உள்ளதுடன் அனைத்து மாநில அரசுகளும் எச்சரிக்கப்பட்டு மத்திய அரசுடன் நெருக்கமா ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. தற்போது இயந்திரங்கள், வாகன வசதிகள் அதிகரித்துள்ளதுடன் மனித சக்தியும் அதிகரித்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் சிக்கலைச் சமாளிக்க மாநில பேரிடர் நிதியைப் பயன்படுத்துகின்றன. வெட்டுக்கிளியைக் கட்டுப்படுத்த ட்ரோன்கள் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டன, இன்று ஹெலிகாப்டரைப் பயன்படுத்தி பூச்சிக்கொல்லி வான்வழித் தெளிப்பும் தொடங்கப்பட்டுள்ளது. ட்ரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை அனுப்பி உதவியதற்காக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு அவர் நன்றி தெரிவித்தார். இங்கிலாந்தைத் தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்திடமிருந்து ஐந்து வான்வழித் தெளிக்கும் இயந்திரங்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இவை கிடைத்ததும், அவை IAF ஹெலிகாப்டர்களில் பொருத்தப்பட்டு வெட்டுக்கிளிக் கட்டுப்பாட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திரு. தோமர் தெரிவித்தார். மாநில வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் திரு கைலாஷ் சவுத்ரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் திரு மகேஷ் சர்மா, வேளாண் செயலாளர் திரு. சஞ்சய் அகர்வால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

*****



(Release ID: 1635398) Visitor Counter : 189