நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

பொது முடக்கத்தின் போது உணவு தானியங்களை எடுத்துச் சென்று பரந்து விரிந்த நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் இலவசமாக அளித்த பெரும் நடவடிக்கை தான் கடந்த ஒரு வருடத்தில் அமைச்சகத்தின் மிகப் பெரிய சாதனை என்று திரு. ராம் விலாஸ் பஸ்வான் சொல்கிறார்.

Posted On: 30 MAY 2020 5:53PM by PIB Chennai

கடந்த ஒரு வருடத்தில் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகத்தின் சாதனைகளை, மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் திரு. ராம் விலாஸ் பஸ்வான் இன்று பட்டியலிட்டார். பொது முடக்கத்தின் போது உணவு தானியங்களின் போக்குவரத்தையும், அவை மக்களுக்கு வழங்கப்படுவதையும் உறுதி செய்தது தான் அரசின் மிகப் பெரிய சாதனை ஆகும்.

 

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019 இயற்றப்பட்டது; மத்திய சேமிப்புக் கிடங்கு கழகத்தின் இது வரை இல்லாத அளவுக்கு மிக அதிக வருவாய்; இந்திய உணவுக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ரூ 3,500 கோடியில் இருந்து ரூ 10,000 கோடியாக உயர்ந்தது; ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டையை நோக்கிய பயணம் ஆகியவை இந்த அரசின் கடந்த ஒரு வருடத்தில் அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் என்று திரு. பஸ்வான் கூறினார்.

 

உணவு தானிய விநியோகம்

 

கொவிட்-19 நெருக்கடியின் போது நாட்டில் அதிகரித்துள்ள தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமான அளவுக்கு உணவு தானியங்கள் இடையகக்

கையிருப்பில் இருப்பதாக திரு பஸ்வான் கூறினார். 28.5.2020 நிலவரப்படி, இந்திய உணவுக் கழகத்திடம் தற்போது 272.29 லட்சம் மெட்ரிக்

டன்கள் அரிசியும் மற்றும் 479.40 லட்சம் மெட்ரிக் டன்கள் கோதுமையும் உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மொத்தத்தில், 751.69 லட்சம்

மெட்ரிக் டன்கள் உணவு தானியங்கள் கையிருப்பில் உள்ளது (இன்னும் கிடங்குகளுக்கு வந்து சேராத, தற்போது கொள்முதல் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் கோதுமை மற்றும் அரிசி நீங்கலாக).

 

பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட 24 மார்ச், 2020-இல் இருந்து, 101.81 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானியங்கள் 3636 ரயில் அடுக்குகள் மூலம் கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார். ரயில் வழியில் மட்டுமில்லாது, சாலைகள் மற்றும் நீர்வழிகள் மூலமாகவும் போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 213.02 லட்சம் மெட்ரிக் டன்கள் எடுத்து செல்லப்பட்டன. 12 கப்பல்களின் மூலம் 12,000 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானியங்கள் எடுத்து செல்லப்பட்டன. மொத்தம் 10.37 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானியங்கள் வடகிழக்கு மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

 

சுய-சார்பு இந்தியா திட்டம், பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு உணவுத் திட்டம் மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் விநியோகிப்பதற்காக, உணவு தானியங்களை நாடு முழுவதும் எடுத்துச் செல்ல இந்திய உணவு நிறுவனமும், தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பும் ஒரு மிகப்பெரிய செயல்பாட்டில் ஈடுபட்டதாக அவர் கூறினார்.

 

பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு உணவுத் திட்டத்தின் கீழ், அடுத்த மூன்று மாதங்களுக்கு மொத்தமாக 104.4 லட்சம் மெட்ரிக் டன்கள் அரிசியும், 15.6 லட்சம் மெட்ரிக் டன்கள் கோதுமையும் தேவைப்படுகின்றன. இதில், 84.95 லட்சம் மெட்ரிக் டன்கள் அரிசியும், 12.91 லட்சம் மெட்ரிக் டன்கள் கோதுமையும், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் எடுத்துச் செல்லப்பட்டு விட்டன. மொத்தமாக 97.87 லட்சம் மெட்ரிக் டன்கள் 29.5.2020 வரை எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. கூடுதல் உணவு தானியங்களோடு, அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 80 கோடி தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டப் பயனாளிகளுக்கு, குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கு 1 கிலோ பருப்புகள் வீதம் ஏப்ரல் முதல் ஜூன் 2020 வரையிலான மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். மூன்று மாதங்களுக்குத் தேவைப்படும் பருப்புகளின் மொத்த அளவு 5.87 லட்சம் மெட்ரிக் டன்கள் என்று திரு. பஸ்வான் கூறினார். 4.77 லட்சம் மெட்ரிக் டன்கள் பருப்புகள் இது வரை

அனுப்பப்பட்டுள்ளன. இதில் 3.80 லட்சம் மெட்ரிக் டன் பருப்புகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சென்றடைந்து விட்டன. 29.05.2020 வரை, 1.5 லட்சம் மெட்ரிக் டன் பருப்புகள் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் வழங்கப்பட்டுவிட்டன.

 

ஒரு மாதத்துக்கு 55 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானியங்கள், உணவுப் பாதுகாப்பு சட்டம் மற்றும் இந்திய அரசின் இதர நலத் திட்டங்களுக்குத் தேவைப்படுவதாக திரு. பஸ்வான் கூறினார். இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொது விநியோகத் திட்டம் மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உணவு தானியங்களின் வரத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளாக, இது வரை எடுத்துச் செல்லப்படாத அளவை எடுத்து செல்ல ஜூன், 2020 வரை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு முதல் நீட்டிப்பும், வடகிழக்கு மற்றும் ஜம்மு-காஷ்மீருக்கு இரண்டாம் நீட்டிப்பும் வழங்க இந்திய உணவுக் கழகத்துக்கு அமைச்சகம் ஏற்கனவே அதிகாரம் அளித்துள்ளது.

 

திறந்தவெளிச் சந்தை வணிகத் திட்டத்தின் கீழ் கோதுமை மற்றும் அரிசியை மானிய விலையில் வழங்கி, மாநிலங்களுக்கும், அரசு சாரா நிறுவனங்களுக்கும் உணவு தானியங்களை இந்திய உணவுக் கழகம் விற்பனை செய்வதை அரசு தாராளமயமாக்கியுள்ளது.

 

சுய-சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 2.06 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானியங்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஏற்கனவே எடுத்துச் சென்று விட்டதாக திரு. பஸ்வான் கூறினார். விநியோகம் தொடங்கி விட்ட நிலையில், குறித்த காலத்துக்குள் முடிக்கப்பட்டு விடும்.

 

 

ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை

 

ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தின் கீழ் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கான தேசிய பெயர்வுத்திறன் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுளதாக திரு. பஸ்வான் கூறினார். ஜனவரி 2021க்குள் ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தின் கீழ் 100 சதவீதம் ஆதார் இணைப்பு இலக்கை அடைய அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

மத்திய அரசின் ஆதரவு பெற்ற "அரிசி வலுவூட்டல் மற்றும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அதன் விநியோகம்" என்ற மாதிரித் திட்டத்தைப் பற்றி தகவல் அளித்த திரு. பஸ்வான், "அரிசி வலுவூட்டல் மற்றும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அதன் விநியோகம்" மாதிரித் திட்டத்தின் மொத்த வரவு செலவு மதிப்பு முன்பிருந்த ரூ 147.61 கோடியில் இருந்து ரூ 174.64 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஒரு மாநிலத்துக்கு ஒரு மாவட்டம் என்னும் வகையில், 15 மாவட்டங்களில் இந்த மாதிரித் திட்டம் கவனம் செலுத்தும்.

 

இந்திய உணவுக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தில் உயர்வு

 

இந்திய உணவுக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை ரூ 3,500 கோடியில் இருந்து ரூ 10,000 கோடியாக உயர்த்த, 02.12.2019 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

 

அதிக வருவாயை ஈட்டியுள்ள மத்திய சேமிப்புக் கிடங்கு கழகம்

 

மத்திய சேமிப்புக் கிடங்கு கழகம் இது வரையில் இல்லாத அளவுக்கு அதிக வருவாயாக ரூ 1710 கோடியை 2019-20-இல் ஈட்டியுள்ளதாக திரு. பஸ்வான் தெரிவித்தார். மொத்த ஈவுத்தொகையான ரூ 64.98 கோடியில், ரூ 35.77 கோடியை இந்திய அரசு பெற்றுள்ளது.

 

சர்க்கரை மேம்பாட்டு நிதி

 

ரூ 125,05.34 லட்சம் மதிப்பிலான கடன் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, ரூ 188,58.91 லட்சம் கடன் 15 சர்க்கரை ஆலைகளுக்கு

01.04.2019 முதல் 31.03.2020 வரை வழங்கப்பட்டதாக திரு. பஸ்வான் தெரிவித்தார். சர்க்கரை மேம்பாட்டு நிதியின் கீழ் சர்க்கரை ஆலைகளால் வழங்கப்படும் பல்வேறு கடன்களுக்கு ஆன்லைனின் விண்ணப்பிப்பதற்காக 28.10.2019 அன்று, இணைய தளம் ஒன்று தொடங்கப்பட்டது.

 

அதிக சர்க்கரையை எத்தனாலாக மாற்றுதல்

 

கொரோனா வைரசின் பரவலைத் தடுப்பதற்காக எத்தைல் ஆல்கஹாலுக்கானத் தேவை அதிகரித்துள்ளதால், நடப்பு எத்தனால் விநியோக ஆண்டு 2019-20க்காக (டிசம்பர், 2019 - நவம்பர், 2020) சர்க்கரை மற்றும் சர்க்கரைப் பாகில் இருந்து எத்தனால் தயாரிக்க அரசு அனுமதித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

 

கொவிட்-19- எதிர்த்துப் போரிட கிருமி நாசினி தயாரிப்பு

 

நாடெங்கிலும் உள்ள 165 காய்ச்சி வடிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் 962

சுயசார்பான உற்பத்தியாளர்களுக்கு கையை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி தயாரிக்க உரிமங்கள் வழங்கப்பட்டு, 87,20,262 லிட்டர்கள் கிருமி நாசினி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக திரு. பஸ்வான் கூறினார் (11.5.2020 வரை).

 

முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி தயாரிப்பு

 

கொவிட்-19- கருத்தில் கொண்டு, எஸ் 9473:2002 தரத்தில் (தொழில்நுட்ப ரீதியில் என்-95 முகக்கவசங்களுக்கு ஈடானது) FFP2 முகக்கவசங்களைத் தயாரிக்க உற்பத்தியாளர்களுக்கு இந்தியத் தர நிர்ணய நிறுவனம் உரிமங்களை வழங்க அனுமதி அளித்துள்ளதாக திரு. பஸ்வான் கூறினார். உட்புற சோதனை வசதி தொடர்பான விலக்கோடு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

தேசிய சர்க்கரை நிறுவனத்துக்கு (NSI) காப்புரிமை 

 

கந்தகம் இல்லாத சர்க்கரையை உற்பத்தி செய்வதற்கான கரும்புச் சாறு தெளிவுறுதலுக்கானப் புதிய செயல்முறைக்கு தேசிய சர்க்கரை நிறுவனத்துக்கு (NSI) காப்புரிமை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

 

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019

 

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019, மக்களவையிலும், மாநிலங்களவையிலும் முறையே 30.07.2019 மற்றும் 06.08.2019 அன்று இயற்றப்பட்டது. நுகர்வோர் பாதுகாப்பு மசோதா, 2019-க்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த நிலையில், 09.08.2019 அன்று நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019 அரசிதழில் வெளியிடப்பட்டது.

 

சட்ட அளவியல் (தேசிய தரநிலைகள்) விதிகள், 2011

 

சர்வதேச எடைகள் மற்றும் அளவுகள் நிறுவனத்தின் (BIPM) GSR 474

(E) குறியீடுடைய 5 ஜூலை, 2019 தேதியிட்ட விளக்கங்களுக்கு ஏற்ப சர்வதேச அலகுகள் அமைப்பின் எடைகள் மற்றும் அளவுகளுக்கான புதிய விளக்கங்களை இணைக்க சட்ட அளவியல் (தேசியத் தரநிலைகள்) விதிகள், 2011 மாற்றப்பட்டன.

 

தரக்குறியீடு

 

தங்க நகைகளுக்கும், கலைப் பொருள்களுக்கும் தரக்குறியீடு (ஹால்மார்க்) 15 ஜனவரி, 2020 தேதியிட்ட அறிவிப்பு மூலம் நாட்டில் கட்டாயமாக்கப்பட்டு, இதை அமல்படுத்த ஒரு வருடம் அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.

 

தேசிய ஆய்வகத் தகவல் புத்தகம்

 

4000க்கும் அதிகமான ஆய்வகங்களின் தகவல்கள், அவற்றின் இருப்பிடம் மற்றும் பொருள்-ரீதியான பரிசோதனை வசதி குறித்த விவரங்களோடு, தேசிய ஆய்வகத் தகவல் புத்தகமாக இந்தியத் தர நிர்ணய நிறுவனத்தால் வெளியிட்டப்பட்டுள்ளதாக அவர் ஊடகங்களிடம் மேலும் கூறினார்.



(Release ID: 1628148) Visitor Counter : 214