பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டுக் கூட்டமைப்பு, பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் ஆகியவற்றுடன் இணைந்து ராஜஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் "வன் தன் திட்டம்: கொவிட்-19-க்குப் பிறகான காலத்துக்கான கற்றல்கள்" என்னும் இணையக் கருத்தரங்கு நடத்தப்பட்டது.

Posted On: 26 MAY 2020 5:49PM by PIB Chennai

பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டுக் கூட்டமைப்பு (Tribal Cooperative Marketing Development Federation of India - TRIFED), பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் ஆகியவற்றுடன் இணைந்து ராஜஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் உங்கள் திட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள் சொற்பொழிவு வரிசையின் கீழ்  "வன் தன் திட்டம்: கொவிட்-19-க்குப் பிறகான காலத்துக்கான கற்றல்கள்" என்னும் இணையக் கருத்தரங்கு இன்று நடத்தப்பட்டது. சிறப்புப் பேச்சாளரான திரு. பிரவிர் கிருஷ்ணா, நிர்வாக இயக்குநர், பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டுக் கூட்டமைப்பு, பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம், கொவிட்-19-க்குப் பிறகான காலத்துக்கான கற்றல்கள் குறித்து விரிவாகப் பேசினார். ராஜஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் இயக்குநர் திருவாளர் முக்தா சின்ஹா இணையக் கருத்தரங்கின் நெறியாளராக இருந்தார்.

 

நாட்டில் உள்ள பழங்குடியினரால்  மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பேசிய திரு. பிரவிர் கிருஷ்ணா, கைவினைப் பொருள்கள், கைத்தறி, ஜவுளி நெய்தல், உலோகக் கைவினை, வீட்டு அலங்காரம், நகைகள், துண்டு அச்சு, ஆபரண ஓவியம் ஆகியவற்றின் மூலம் சுமார் 5 லட்சம் பழங்குடிக் கலைஞர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

 

மேலும் பேசிய திரு. பிரவிர் கிருஷ்ணா, மரபு ரீதியாக வரும் வனப் பொருள்கள் அறுவடைத் திறமையின் மூலம், வனத் தயாரிப்புகளை நம்பி 50 லட்சத்துக்கும் அதிகமான பழங்குடியினர் இருப்பதாகக் கூறினார். வருடத்துக்கு சுமார் அரை டன் முதல் ஒரு டன் வரையிலான வனப் பொருள்களை வனப் பொருள் சேகரிப்பாளர்கள் சேகரிக்கின்றனர். பாரம்பரியத் திறமைகளின் மூலம் பழங்குடியினருக்கு இருக்கும் அபாரத் திறனைப் பற்றி பேசிய திரு. கிருஷ்ணா, "நாம் அவர்களை குறு நிறுவனங்களாக அங்கீகரித்து அவர்களின் திறன்களுக்கு மதிப்பு சேர்த்தல் மூலம் உதவினால் மட்டும் போதும். குறைந்தபட்ச ஆதரவு விலையின் மூலம், ஒரு நபருக்கு வருடத்துக்கு ரூ 20,000 முதல் ரூ 30,000 வரை வருமானத்துக்கு உறுதியளிக்க முடியும். இதைப் போல் இரண்டில் இருந்து மூன்று மடங்கு வரைக் கூடுதலாக வன் தன் மதிப்பு சேர்த்தல் திட்டத்தின் மூலம் அளிக்க முடியும்," என்று திரு. கிருஷ்ணா கூறினார்.

 

திட்டத்தின் முக்கிய அம்சங்களைப் பற்றி பேசிய திரு. கிருஷ்ணா, மரமல்லாதக் காட்டுப் பொருள்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் வாங்குதல், கிராமச்சந்தை மற்றும் கிடங்குகளில் இருக்கும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டு நடவடிக்கையாகக் காட்டுப் பொருள் சேகரிப்பாளர்களை குறு நிறுவனங்கள் நடத்த ஊக்கமளித்து மதிப்பு சங்கிலியை உருவாக்குதல் போன்றவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி வலியுறுத்தினார்.

 

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்துடன் இணைந்து வன் தன் சமாஜிக் தூரி ஜக்ரூக்தா அபியான் என்னும் திட்டத்தை டிரைபெட் தொடங்கியுள்ளது. இதன் மூலம்கொவிட்-19 பற்றிய முக்கிய தகவல்கள், பல்வேறு வழிகாட்டுதல்கள், தேசிய மற்றும் மாநில வாரியான இணையக் கருத்தரங்குகள் பற்றிய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பழங்குடியினருக்குத் தெரிவிக்கபப்டுகின்றன.

 

ராஜஸ்தானுக்கான வருங்கால வழியைப் பற்றி பேசிய திரு. கிருஷ்ணா, கூடுதலாக 145 வன் தன் விகாஸ் கேந்திரங்கள் ராஜஸ்தானில் ஒப்புதல் அளிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் குறித்தும், அவை 'சுய-சார்பு இந்தியாவுக்கான பழங்குடியினரின் புது நிறுவனங்களாக' நிறுவப்படலாம் என்றும் தெரிவித்தார். வன் தன் திட்டத்தின் இரண்டாவது செயல்படுத்தும் முகமையாக ஆஜீவிகா/வனத் துறையின் நியமனம் வன் தன்னின் செயல்பாடுகளை ராஜஸ்தானின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தி, பஜ்ரா, ஜாவர் மற்றும் திணை ஆகிய சிறப்பு வாய்ந்த உணவுகளின் சென்றடையும் திறனையும் அதிகரிக்கும்.



(Release ID: 1626998) Visitor Counter : 194