கலாசாரத்துறை அமைச்சகம்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் 30 மடங்கு உயர்வும், அணுசக்தியில் 30 மடங்கு அதிகரிப்பும், அனல் மின்சாரத்தில் இரு மடங்கு உயர்வும் இந்தியாவின் தேவையில் கரிக்காற்று இல்லாத 70 சதவீத மின்சாரத்தைத் தரமுடியும்: அனில் ககோத்கர்.

இடுகை இடப்பட்ட நாள்: 12 MAY 2020 9:44AM by PIB Chennai

1998-ஆம் ஆண்டு பொக்ரான் அணுகுண்டு வெடிப்பு சோதனையைக் குறிக்கும் வகையிலான தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி, அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவரும், ராஜீவ் காந்தி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆணையத்தின் தலைவருமான பத்ம விபூஷன் டாக்டர் அனில் ககோத்கர், பருவநிலை சிக்கல் நிறைந்த தருணத்தில் மின்சாரத் தேவையைச் சமாளிப்பது பற்றிய ஒரு தகவலை இந்திய மக்களுக்குத் தெரிவித்தார்.

‘’22 ஆண்டுகளுக்கு முன்பு அணுசக்தி சோதனை நடைபெற்றதையொட்டி தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்படுகிறது. அது நமக்கு தேசியப் பாதுகாப்பை அளித்துள்ளது’’, என்று மும்பை நேரு அறிவியல் மையம் ஏற்பாடு செய்த ஆன்லைன் உரையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்து பேசுகையில் அவர் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் மனித வளக் குறியீட்டுக்கும், தனிநபர் மின்சார நுகர்வுக்கும் இடையிலான தொடர்பு குறித்து தமது உரையில் அவர் விளக்கினார். புள்ளிவிவரப்படி, மனிதவளக் குறியீடு அதிகமாக உள்ள நாடுகளில், தனிநபர் மின்சார நுகர்வும் அதிகரித்து மக்கள் உயர் தரமான வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர்.

சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் கரியமில வாயு உமிழ்வை எவ்வாறு கட்டுப்படுத்துவது என உலகம் முழுவதும் பருவ நிலை மாற்ற ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். பருவநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கு இடையிலான குழுவின் அறிக்கையின்படி, ‘’2,100-இல் 1.5 டிகிரிக்கும் கீழே இருப்பதற்கு, 2030-ஆம் ஆண்டு வாக்கில், 2010 அளவுப்படியான பசுமை இல்ல வாயுவின் உமிழ்வில் 45 சதவீதத்திற்கும் கீழே குறைக்கப்பட வேண்டும், 2050 –இல் அது ஜீரோ அளவுக்கு வரவேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, உலகம் முழுவதும்  வளர்ச்சியடையும் நோக்கம் கொண்ட பல நாடுகள், கரியமில வாயு உமிழ்வைத் தீவிரமாகக் குறைப்பதை உறுதி செய்வதற்கு இன்னும் 10 ஆண்டுகளே உள்ளன என்பது இதன் பொருளாகும்.

இதனை அடைய, தற்போது உள்ள தொழில்நுட்பங்களை துரிதமாகப் பயன்படுத்தி உலகம் தீவிரமாகச் செயல்பட வேண்டும். கரி உமிழ்வே இல்லாத இலக்கை எளிதில் எட்டுவதற்கு அணுசக்தியின் தேவை அவசியமாகிறது. அணுசக்தியின் பங்களிப்புடன், கரியமில வாயு உமிழ்வுக் குறைவாக உள்ள மின்சாரத்தைத் தயாரிப்பதற்கான செலவையும் குறைக்க முடியும். தயாரிக்கப்படும் மின்சாரத்தின் யூனிட் அளவில் உமிழ்வைக் குறைப்பதே இதன் பொருளாகும் (கிலோவாட்- மணிக்கு கரியமில வாயுவின் அளவு கிராமில் குறிக்கப்படுகிறது).


இந்தியா போன்ற ஒரு நாட்டில், மின்சார நுகர்வில் கார்பன் அளவைக் குறைப்பதற்கு, நமக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் 30 மடங்கும், அணுசக்தி மின்சாரத்தில் 30 மடங்கும், அனல் மின்சாரத்தில் இருமடங்கும் அதிகரிப்பு அவசியமாகும். அப்போது தான் நமக்கு 70 சதவீதம் கார்பன் இல்லாத மின்சாரம் கிடைக்கும்.


------


(வெளியீட்டு அடையாள எண்: 1623315) வருகையாளர் எண்ணிக்கை : 314
இந்த வெளியீட்டை படிக்க: Marathi , English , Urdu , हिन्दी , Punjabi