சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

டாக்டர் ஹர்ஷவர்தன் தலைமையில் தில்லியில் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா நோய்கள் தடுப்பு கட்டுப்படுத்தல் தொடர்பான உயர் மட்ட ஆய்வுக் கூட்டம்

Posted On: 05 MAY 2020 7:28PM by PIB Chennai

தில்லியில் கொசு போன்றவற்றால் பரவும் நோய்களைக் (மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா) கட்டுப்படுத்துவதுடன்,, அவை பரவாமல் தடுக்கும் முனேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய காணொலி காட்சி மூலம் இன்று நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்திற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் தலைமை தாங்கினார்.

தில்லியில் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா நோய்களின் நிலவரம் குறித்தும், அவற்றைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சக செயலர் திருமதி ரேகா சுக்லா விளக்கவுரை நிகழ்த்தினார்.

இந்த நோய்கள் பரவாமல் தடுக்கவும், அவற்றைக் கட்டுப்படுத்தவும் விரிவான விழிப்புணர்வின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்திய மத்திய சுகாதார அமைச்சர், கோவிட்-19 தொற்றுக்கு எதிராக அனைத்து முன்னேற்பாடுகளையும் கருத்தில் கொள்ளும் அதே நேரம்குடியிருப்போர் நலச் சங்கங்கள், கடைகாரர்கள், வணிகர்கள் சங்கத்தினர் போன்ற அனைத்து சம்பந்தப்பட்டவர்களின் ஒத்துழைப்பு மற்றும் சமுதாயப் பிரிவினரின் தீவிரப் பங்களிப்புடன் கூடிய விழிப்புணர்வு இயக்கங்களை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

‘’மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா நோய்களை முறியடிக்கத் தேவையான குறிப்பிட்ட இலக்கு சார்ந்த மாற்றியமைக்கப்பட்ட உத்திகளுக்கு இடையே, நோய்களைப் பரப்பும் கொசு போன்றவற்றை கட்டுப்படுத்துவதில் நமது முக்கிய கவனம் இருக்க வேண்டும்’’ என்று சுகாதாரத்துறை அமைச்சர் கூறினார். ‘’சுற்றுப்புறங்களைத் தூய்மையாகவும், ஏடிஸ் கொசுக்கள் இல்லாதவாறும் பராமரிக்க எளிய நடவடிக்கைகளை எடுக்கலாம். தண்ணீர் தேங்குவதைத் தடுத்து, லார்வாக்கள் உற்பத்தியை முற்றாக அழிக்க வேண்டும். கொசு மூலம் பரவும் இந்த நோய்களைக் கட்டுப்படுத்தும் திட்டத்தின் வெற்றி, சமுதாயப் பிரிவினர் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பங்களிப்பிலேயே அடங்கியுள்ளது ‘’, என்று அவர் கூறினார். ‘’ இந்த நோய்களைத் தடுப்பதிலும், கட்டுப்படுத்துவதிலும் அனைத்து மட்டத்திலும் ஈடுபாடு அவசியமாகும். கொசுக்கள் பெருகுவதற்கு உரிய சூழலை உருவாக்க மாட்டோம் என்பதை உறுதி செய்வது நம் அனைவரது கடமையாகும்’’, என்று அவர் மேலும் கூறினார்.



(Release ID: 1621369) Visitor Counter : 131