பிரதமர் அலுவலகம்

பசவா ஜெயந்தியை ஒட்டி பசவேஸ்வராவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை, விடியோ செய்தி வெளியீடு.

Posted On: 26 APR 2020 8:53PM by PIB Chennai

பசவேஸ்வரா பிறந்த நாளை ஒட்டி மரியாதை செலுத்தியுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, விடியோ மூலம் இன்று வாழ்த்துச் செய்தியும் வெளியிட்டுள்ளார்.

12 ஆம் நூற்றாண்டு காலத்தைய தத்துவஞானியும், சமூக சீர்திருத்தவாதியுமான விஸ்வகுரு பசவேஸ்வராவின் பிறந்த நாள் ஆண்டுதோறும் பசவா ஜெயந்தியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக அளவில் பசவா ஜெயந்தி -2020, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அவரைப் பின்பற்றுவோர் மத்தியில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் இன்று கொண்டாடப் படுகிறது.

இதையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், கொரோனா வைரஸ் நோய்த் தாக்குதலை முறியடிக்கும் வல்லமையை இந்த நாட்டுக்குத் தர வேண்டும் என பசவேஸ்வராவின் ஆசியைக் கோரியுள்ளார்.

பசவேஸ்வராவின் போதனைகளில் இருந்து தாம் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டதாக பிரதமர் நினைவுகூர்ந்தார். புனித வச்சனா நூல்களை 23 மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்தது, லண்டனில் பசவேஸ்வரா சிலை திறந்தது போன்ற நிகழ்வுகளை பிரதமர் குறிப்பிட்டார்.

பசவேஸ்வரா சிறந்த சீர்திருத்தவாதியாகவும், சிறந்த நிர்வாகியாகவும் இருந்துள்ளார் என்று கூறிய அவர், தனி நபர்கள் அல்லது சமூகத்தினரிடம் சீர் திருத்தக் கருத்துகளைப் பரப்பியது மட்டுமின்றி, தன்னுடைய சொந்த வாழ்விலும் அவற்றைக்  கடைபிடித்தவர் பசவேஸ்வரா என்று பிரதமர் கூறியுள்ளார்.

பசவேஸ்வராவின் போதனைகள் ஆன்மிக அறிவு சார்ந்தவையாக இருப்பது மட்டுமின்றி, நமது நடைமுறை வாழ்க்கையின் வழிகாட்டிகளாகவும் உள்ளன என்றும் பிரதமர் திரு. மோடி குறிப்பிட்டுள்ளார். நல்ல மனிதர்களாக வாழ்வதற்கும், தாராள, சமத்துவ மற்றும் மனிதாபிமான எண்ணங்கள் கொண்ட சமுதாயத்தை உருவாக்கும் வகையிலும் உள்ளன என்று பிரதமர் கூறியுள்ளார். நமது சமூக மற்றும் பாலின சமத்துவம் குறித்த விஷயங்களில்,  பசவேஸ்வரா பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சமுதாயத்துக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

சமுதாயத்தின் கடைசி நிலையில் இருக்கும் மக்களுக்கு உரிமைகள் வழங்குவதை ஊக்குவிப்பதற்கு முன்னுரிமை தரும் ஜனநாயக நடைமுறைகளுக்கு பசவேஸ்வரா அடித்தளமிட்டுள்ளார் என்று பிரதமர் கூறியுள்ளார். வாழ்வின் ஒவ்வொரு அம்சம் பற்றியும் கூறியுள்ள பசவண்ணா, அவற்றை மேம்படுத்துவதற்கான யோசனைகளையும் கூறியிருக்கிறார் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பசவண்ணாவின் புனித வச்சனா-க்களை டிஜிட்டல் மயமாக்கிய பெரிய பணிகள் பற்றியும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த யோசனையை 2017இல் பிரதமர் முன்வைத்திருந்தார்.

இன்று இந்த நிகழ்வை டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் உலகம் முழுக்க நடத்துவதற்கு ஏற்பாடு செய்த பசவா சமிதியின் முயற்சிகளுக்குப் பாராட்டு தெரிவித்த பிரதமர், முடக்கநிலை வழிகாட்டுதல்களைப் பின்பற்றும் அதே நிலையில் ஒரு நிகழ்ச்சியை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு ஒரு முன்னுதாரணத்தை இது ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

“தங்களிடம்  தொடங்கும் மாற்றத்தை இன்றைய காலகட்டத்தில் இந்தியர்கள் உணர்ந்துள்ளனர். சவால்களை முறியடிக்க இந்த நம்பிக்கை தான் உதவிகரமாக உள்ளது'' என்று பிரதமர் கூறியுள்ளார். இந்த நம்பிக்கையின் அம்சங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இது நம்மிடையே கடின உழைப்புக்கான உத்வேகத்தை ஏற்படுத்தி, நாட்டை புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்ல உதவியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகை இன்னும் நல்லவிதமாக மாற்றுவதற்கு, பசவண்ணாவின் படைப்புகள் மற்றும் சிந்தனைகளை உலகெங்கும் பரப்ப வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

பசவா ஜெயந்தியை ஒட்டி மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள பிரதமர், தனி நபர் இடைவெளியைப் பராமரிப்பதற்கு  “Do Gaj Doori” இரண்டு கஜ இடைவெளி என்ற விதியை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.



(Release ID: 1618613) Visitor Counter : 147