ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

கோவிட்-19 தொற்று உள்ள சூழலில், நாட்டில் விவசாயிகளுக்கு போதுமான அளவு உரங்கள் கிடைக்க, உரங்கள் உற்பத்தி, போக்குவரத்து, விநியோகத்தை மத்திய உரத்துறை உன்னிப்பாக கண்காணிப்பு

Posted On: 16 APR 2020 3:08PM by PIB Chennai

கோவிட்-19 பரவலால் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான சூழ்நிலையைச் சமாளிக்க, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு. டி.வி.சதானந்த கவுடா, இணையமைச்சர் திரு. மான்சுக் மாண்டவியா, உரத்துறை செயலர் திரு. சாபிலேந்திர ராவல் ஆகியோர் நாட்டில் உரங்களின் உற்பத்தி, விநியோகம் ஆகிய செயல்பாடுகள் குறித்து உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். நாடு முழுவதும் விவசாயிகளுக்கு போதுமான அளவில் உரங்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் உயர்மட்ட தலையீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதனைச் சமாளிக்கும் நடவடிக்கைகளை உரத்துறை மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. போதிய அளவில் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதில், மத்திய ,மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களின் பல்வேறு முகமைகளின் முழுமையான ஒத்துழைப்பு காணப்படுகிறது.

விவசாயிகளுக்கு உரங்கள் விநியோகத்தைப் பராமரிப்பதில் மத்திய, மாநில அரசுகள் உறுதிப்பாட்டுடன் செயல்படுவது பற்றி டுவிட்டரில்  குறிப்பிட்டுள்ள திரு. கவுடா, ‘’தற்போதைய உரக் கையிருப்பு நிலை நன்றாக உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

உர விநியோகச் செயல்பாடுகளில் ஏற்படும் சிக்கல்களைக் கையாள, தேவைப்படும் போதெல்லாம் அமைச்சரங்களுக்கு இடையிலும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடனும் உரத்துறை தலையிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.

உரங்களைத் தொழிற்சாலைகளில் இருந்தும் ,துறைமுகங்களில் இருந்தும் சுமுகமாகக் கொண்டு செல்வதுடன், பொது முடக்கத்தால் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேங்கியிருந்த உர லாரிகள் பற்றிய விவரங்களை வழங்க வேண்டும் என்று அனைத்து உரத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் உரத்துறை அறிவுரை வழங்கியிருந்தது. தேங்கிக் கிடந்த உரங்களை இறக்கி வைக்கும் பணி, ரயில்வே மற்றும் அந்தந்த மாநில அரசுகளின் வேளாண் துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் மேற்கொள்ளப்பட்டது. இது குறித்த தீவிரக் கண்காணிப்பு தினசரி  மற்றும் மணிக்கணக்கு அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



(Release ID: 1615059) Visitor Counter : 200