நிதி அமைச்சகம்

பொருளாதார ஆய்வறிக்கை 2018-19-இன் முக்கிய அம்சங்கள்

Posted On: 04 JUL 2019 12:37PM by PIB Chennai

மத்திய நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா  சீதாராமன் 2018-19 நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்த ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள் கீழ்வருமாறு:

 

செயல் மாற்றம்: வளர்ச்சி, வேலைவாய்ப்பு, ஏற்றுமதி, தேவை ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்லும் முக்கிய அம்சமாக தனியார் மூலதனம் விளங்கும்.

 

  • கடந்த ஐந்து ஆண்டுகளில் கொள்கை முடிவுகளுக்கான பலன்கள் அடித்தளத்திற்குச் சென்று சேர்வதற்கான பாதைகளை உருவாக்கியுள்ளன என ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது; வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார நிலைத்தன்மை ஆகியவற்றின் பயன்கள் பிரமிடின் அடித்தளத்தைச் சென்றடைந்துள்ளது.
  • 2024-25 நிதியாண்டிற்குள் 5 ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருளாதாரத்தை எட்ட உண்மையான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 8% அளவிற்கு நீடிக்க வேண்டும்.
  • சேமிப்பு, முதலீடு, ஏற்றுமதி ஆகியவை வினையூக்கியாக செயல்பட்டு, சாதகமான மக்கள் தொகை கட்டத்தின் ஆதரவும் நீடித்த வளர்ச்சிக்கு தேவையானதாகும்.
  • தனியார் முதலீடு – தேவை, கொள்திறன், உழைப்புத்திறன், புதிய தொழில்நுட்பம், புதுமைமிக்க அழிவு, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றுக்கான முக்கிய உந்துசக்தியாக விளங்குகிறது.
  • ஆய்வறிக்கையானது பாரம்பரிய ஆங்கிலோ-சாக்சன் சிந்தனையிலிருந்து விடுபட்டு பொருளாதாரத்தை ஒரு நல்லொழுக்கமான அல்லது தீய சுழற்சியான ஒன்றாகவே  பார்க்கிறது, இதன்விளைவாக அது ஒருபோதும் சமநிலையில் இருப்பதில்லை.
  • சுயச் சார்புமிக்க தூய்மையான காலப்பகுதிக்கு முக்கியமான உள்ளீடுகளாக கீழ்க்கண்டவை உள்ளன:
      • புள்ளிவிவரங்களை மக்களின் நன்மையை அடிப்படையாகக் கருதி வழங்குவது.

0  சட்ட ரீதியான சீர்திருத்தங்களுக்கு அழுத்தம் தருவது.

0  மேற்கொள்ளப்படும் கொள்கை முடிவுகள் தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்துவது.

0  நடத்தைப் பொருளாதாரத்தின் விதிகளைப் பயன்படுத்தி நடத்தையில் மாற்றத்தைக் கொண்டுவருவதை ஊக்குவிப்பது.

0  மேலும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உற்பத்தித் திறனை மேலும் அதிகரிக்கும் வகையிலும் சிறு-குறு நடுத்தர தொழில்நிறுவனங்களை பேணிக் காப்பது.

0  மூலதனத்திற்கான செலவை குறைப்பது.

0  முதலீட்டினைத் தொடர்ந்த வருமானத்தில் ஏற்படும் அபாயங்களை ஒழுங்கமைப்பது.

எந்திர பொம்மைகளுக்கல்ல; உண்மையான மக்களுக்கான கொள்கை: நடத்தைப் பொருளாதாரத்தின்  ‘தூண்டிவிடும்’ அம்சத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வது

  • பாரம்பரிய வகைப்பட்ட பொருளாதாரத்தில் கூறப்படும் நடைமுறைக்கு உதவாத கொள்கைகளில் இருந்து விலகி உண்மையான மக்களின் மூலம் முடிவுகளை எடுப்பது.
  • விரும்பத்தக்க வகையில் நடத்தையை உருவாக்கத் ‘தூண்டும்’ அம்சங்களை நடத்தைக்கான பொருளாதாரம் வழங்குகிறது.
  • நடத்தைக்கான பொருளாதரத்தின் முக்கிய குறிக்கோள்களாவன:
      • பயன் தரத்தக்க சமூக நியதிக்கு முக்கியத்துவம் தருவது.
  1. இயல்பான தேர்வை மாற்றி அமைப்பது.
  1. தொடர்ந்து வலுவூட்டுவது.
  • நடத்தைப் பொருளாதாரத்தில் இருந்து பெற்ற நுண்ணறிவைப் பயன்படுத்தி சமூக மாற்றத்திற்கான ஊக்கமிக்க செயல்திட்டத்தை உருவாக்குவது.
      • பெண் குழந்தைகளை பாதுகாத்து, கல்வியறிவு ஊட்டுங்கள் என்ற கோஷத்தை பெண் நமது தன லஷ்மி-விஜய லஷ்மி என மாற்றுவது.
  1. ‘தூய்மையான இந்தியா’ என்பதில் இருந்து அழகான பாரதம் என்ற கோஷத்தை நோக்கிச் செல்வது.
  1. சமையல் எரிவாயுவிற்கான மானியத்தை விட்டுக் கொடுப்பது என்பதில் இருந்து மானியம் குறித்து சற்று யோசியுங்கள் என்பதாக மாறுவது.
  1. வரி ஏய்ப்பு என்பதில் இருந்து வரியை முறையாக செலுத்துவது என்று மாறுவது.

குள்ளர்களை பேருருவம் கொண்டவர்களாக வளர்த்தெடுப்பது: சிறு-குறு-நடுத்தர தொழில்களின் வளர்ச்சிக்கான கொள்கைகளை மாற்றியமைப்பது

 

  • அதிகமான லாபம், வேலைவாய்ப்பு உருவாக்கம், உற்பத்தித்திறன் அதிகரிப்பு ஆகியவற்றை அடையும் வகையில் வளர சிறு-குறு-நடுத்தர தொழில்களுக்கு உதவி செய்வதில் ஆய்வறிக்கை கவனம் செலுத்துகிறது.
  • எண்ணிக்கையைப் பொறுத்தவரையில் குள்ளர்கள் (100க்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்கள்) பத்தாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த போதிலும் உற்பத்தித் துறையில் ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களில் 50%க்கும் அதிகமானதாக உள்ளன.
  • வேலைவாய்ப்பில் இந்தக் குள்ளர்களின் பங்களிப்பு 14% மட்டுமே; மொத்த உற்பத்தியில் அவற்றின் பங்கு வெறும் 8% மட்டுமே.
  • மொத்த எண்ணிக்கையில் சுமார் 15% ஆக மட்டுமே இருந்தபோதிலும் (100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட) பெரும் நிறுவனங்கள் 75% வேலை வாய்ப்பைத் தருவதோடு, 90% உற்பத்தியையும் வழங்குகின்றன.
  • சிறு-குறு-நடுத்தர நிறுவனங்களை கட்டவிழ்த்து விடவும் அவை வளரவும் கீழ்க்கண்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்:
      • பத்தாண்டுக்கும் குறைவாக செயல்பாட்டில் இருக்கும் நிறுவனங்களுக்கு உரிய ஆலோசனை வழங்கும் வகையில் அவற்றின் வடிவத்தின் அடிப்படையிலான ஊக்கத் தொகைகள் வழங்குவது.
  1. ராஜஸ்தான் மாநிலத்தில் செயல்படுத்தி வெற்றி கண்டதைப் போன்று குறிப்பிடத்தக்க அளவிற்கு மேலும் அதிகமான வேலைகளை உருவாக்க தொழிலாளர் நலச் சட்டங்களில் நிலவும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி அமைப்பது.
  1. அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறைகளில் இளம் நிறுவனங்கள் நேரடியாக கடன் வசதி பெறும் வகையில் முன்னுரிமைத் துறைக்கு கடன் வழங்குவதற்கான விதிமுறைகளை திருத்தி அமைப்பது.
  • வேலை வாய்ப்பை உருவாக்குவதற்காக ஓட்டல் மற்றும் கேட்டரிங், போக்குவரத்து, ரியல் எஸ்டேட், பொழுதுபோக்கு போன்ற இதர துறைகளில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய சுற்றுலா போன்ற சேவைத் துறைகளின் மீதும் ஆய்வறிக்கை கவனம் செலுத்துகிறது.

 

மக்களுக்கான, மக்களால், மக்களின் புள்ளிவிவரங்கள்

 

  • புள்ளிவிவரங்களை சேகரித்து, சேமித்து வைப்பதற்கான தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை கணக்கில் கொள்ளும்போது சமூகத்தின் அதிகபட்ச புள்ளிவிவர நுகர்வு முன் எப்போதையும் விட அதிகமாக உள்ளது.
  • மக்களால் சமூக நலன் கருதி புள்ளிவிவரம் உருவாக்கப்படும் நிலையில், புள்ளிவிவரம் குறித்த தனிப்பட்ட உரிமை என்ற சட்டரீதியான கட்டமைப்பிற்குள் அடங்கும் வகையில் பொது நலனுக்காக புள்ளிவிவரம் உருவாக்கப்படலாம்.
  • பொது நலனுக்காக புள்ளிவிவரம் உருவாக்குவதில், குறிப்பாக  ஏழை மற்றும் சமூக நலத் துறைகளில் புள்ளிவிவரங்களை உருவாக்குவதில்  அரசு தலையிட வேண்டும்.
  • பல வகையான பயன்களையும் பெறும் வகையில் அரசிடம் ஏற்கனவே உள்ள தனித்துவமான புள்ளிவிவரத் தொகுப்புகளை இணைப்பது.

கீழ்மட்ட நீதித்துறையின் திறனை எவ்வாறு வளர்த்தெடுப்பது

  • இந்தியாவில் எளிதாக வர்த்தகம் செய்வது மற்றும் அதிகமான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை உறுதிப்படுத்துவது ஆகியவற்றும் மிகப்பெரும் தடைக்கல்லாக இருப்பது ஒப்பந்தங்களை அமலாக்குவது மற்றும் சச்சரவுகளைத் தீர்ப்பது ஆகியவற்றில் நிலவும் தாமதமே ஆகும்.
  • தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளில் 87.5 % வழக்குகள் மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில்தான் உள்ளன.
  • கீழமை நீதிமன்றங்களில் 2279 காலியிடங்களையும் உயர்நீதி மன்றங்களில் 93 காலியிடங்களையும் நிரப்புவதன் மூலம் 100 % இவற்றைத் தீர்த்து வைக்கமுடியும்.
  • இவ்வகையில் உத்திரப் பிரதேசம், பீகார், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் மீது சிறப்பான கவனம் தேவைப்படுகிறது.
  • கீழமை நீதிமன்றங்களில் 25 சதவீதமும், உயர்நீதி மன்றங்களில் 4 சதவீதமும் உச்சநீதிமன்றத்தில் 18 சதவீதமும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதன் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகளை முற்றிலுமாக அகற்றி விட முடியும்.

கொள்கையில் நிச்சயமற்ற தன்மை எவ்வாறு முதலீட்டை பாதிக்கிறது?

  • முக்கிய நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில், பொருளாதாரக் கொள்கையில் நிச்சயமற்ற தன்மை நீடித்து வரும் பின்னணியில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலான காலத்தில்  பொருளாதாரக் கொள்கையில் நிலவிய நிச்சயமற்ற தன்மை கணிசமாக குறைந்துள்ளது.
  • இத்தகைய நிச்சயமற்ற தன்மையானது கடந்த  ஐந்து காலாண்டுப் பகுதியில் இந்தியாவில் முதலீட்டு வளர்ச்சியை பாதித்துள்ளது.
  • பொருளாதாரக் கொள்கையில் எவ்வளவு குறைவாக நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது அந்த அளவிற்கு அது வரவேற்கத்தக்க முதலீட்டிற்கான சூழலை உருவாக்கும்.
  • கீழ்கண்ட நடவடிக்கைகளின் மூலம் பொருளாதாரக் கொள்கையில் நிச்சயமற்ற தன்மையை குறைக்க ஆய்வறிக்கை முயல்கிறது:
  • முன்னேறிச் செல்வதற்கான வழிகாட்டுதல் கொள்கையில் நிலைத்தன்மை.
  • அரசுத் துறைகளின் செயல்பாட்டில் தர உறுதிக்கான சான்றிதழ் ஏற்பாடு.

2040-ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை: 21-ம் நூற்றாண்டிற்கான பொது நலனுக்கான திட்டமிடல்

 

  • அடுத்த இரண்டு தசாப்தங்களில் மக்கள் தொகை வளர்ச்சியின் கூர்மையான சரிவு ஏற்படவுள்ளது. இந்தியாவின் பெரும்பகுதி மக்கள் தொகையில் சாதகமான அம்சங்களை பெறும் அதே நேரத்தில் சில மாநிலங்கள் 2030 வாக்கில் முதியோர்கள் அதிகமுள்ள சமூகமாக மாற வாய்ப்புள்ளது.
  • 2021க்குள் தேசிய அளவிலான மொத்த கருவுறுதல் விகிதம் மாற்று விகிதத்தை விட குறைவாகவே இருக்கும்.
  • 2021-31 காலப்பகுதியில் வேலை செய்வதற்கான தகுதியுடைய மக்கள்தொகை ஆண்டுக்கு  சராசரியாக 97 லட்சம் அளவிற்கு வளரும். இது 2031-41 காலப்பகுதியில் 42 லட்சமாக இருக்கும்.
  • அடுத்த இரண்டு தசாப்தங்களில் தொடக்கக் கல்வி கற்கும் சிறுவர்களின் (5 முதல் 14 வயது வரையில்) எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவு இருக்கும்.
  • புதிய பள்ளிகளை கட்டுவதற்குப் பதிலாக அவற்றை செயல்திறன் மிக்கதாகச் செய்ய மாநிலங்கள் பள்ளிகளை நிலைநிறுத்தவோ/ இணைக்கவோ வேண்டிய அவசியம் உள்ளது.
  • மருத்துவ வசதியில் அதிகமான முதலீடு செய்வதன் மூலமும் படிப்படியாக ஓய்வுக்கான வயதை அதிகரிப்பதன் மூலமும் கொள்கைகளை உருவாக்குவோர் முதியோர்களுக்கான கொள்கைகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது.

நலமான இந்தியாவின் வழியாக தூய்மையான இந்தியாவிலிருந்து அழகான இந்தியாவிற்கு மாறிச் செல்வது: தூய்மை இந்தியா இயக்கம் குறித்த ஓர் ஆய்வு

  • தூய்மையான இந்தியாவிற்கான இயக்கம் தெளிவாக உணரத்தக்க உடல்நலத்திற்கான பயன்களைக் கொண்டு வந்துள்ளது.
  • மொத்த குடும்பங்களில் 93.1% பேர் கழிப்பறை வசதி பெற்றவர்களாக உள்ளனர்.
  • கழிப்பறை வசதி பெற்றவர்களில் 96.5% பேர் கிராமப்புற இந்தியாவில் வசிக்கின்றனர்.
  • 30 மாநிலங்களிலும் துணைப் பிரதேசங்களிலும் 100% குடும்பங்களுக்கான தனிப்பட்ட கழிப்பறைகள் உள்ளன.
  • குடும்பத்திற்கான கழிப்பறையின் மூலமான நிதி சேமிப்பு என்பது அந்தக் குடும்பத்திற்கு அதனால் ஆன செலவை விட சராசரியாக 1.7 மடங்காகவும் ஏழைக் குடும்பங்களைப் பொறுத்தவரையில் 2.4 மடங்காகவும் உள்ளது.
  • நீண்ட காலத்திற்கு நீடிக்கும் மேம்பாடுகளை மேற்கொள்ள தூய்மை இந்தியா இயக்கத்தில் சுற்றுச்சூழல், நீர்மேலாண்மை ஆகிய பிரச்சனைகளும் உள்ளடக்கப்பட வேண்டும்.

மலிவான, நம்பகமான மற்றும் நிலையான ஆற்றல் மூலம் உள்ளடக்கிய வளர்ச்சியை செயல்படுத்துதல்

  • இந்தியா அதன் உண்மையான தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 2010 விலையில் 5,000 டாலர்களாக அதிகரிக்கவும், உயர் நடுத்தர வருமானக் குழுவில் நுழைய தேவையான தனிநபர் எரிசக்தி நுகர்வு 2.5 மடங்கு அதிகரிக்க வேண்டியுள்ளது.
  • 0.8 மனித மேம்பாட்டு குறியீட்டு மதிப்பெண் பெற இந்தியாவுக்குத் தேவையான தனிநபர் எரிசக்தி நுகர்வு 4 மடங்கு அதிகரிக்க வேண்டிய தேவையுள்ளது.

• இந்தியா இப்போது காற்றாலை மூலமான மின்சார உற்பத்தியில் 4 வது இடத்திலும், சூரிய ஒளி மூலமான மின்சக்தியில் 5 வது இடத்திலும், புதுப்பிக்கத்தக்க மின்சாரம் நிறுவப்பட்ட திறனில் 5 வது இடத்திலும் உள்ளது.

  • இந்தியாவில் மின் சேமிப்புத் திட்டங்களின் மூலம் ரூ 50,000 கோடி சேமிக்கப்பட்டதுடன் கரியமில வாயு வெளியேற்ற அளவு 10.828 கோடி டன்கள் குறையவும் வழிவகுத்துள்ளது.
  • 2014-15-ல் ஒட்டுமொத்த மின் உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் அளவு (25 மெகாவாட்டிற்கு அதிகமான நீர்மின் உற்பத்தி நீங்கலாக) 6% ஆக இருந்தது.  இது 2018-19-ல் 10% ஆக அதிகரித்துள்ளது.
  • ஒட்டுமொத்த உற்பத்தியில் 60% அளவைக் கொண்டு அனல் மின் உற்பத்தி தொடர்ந்து மேலாதிக்கமான நிலையில் நீடித்து வருகிறது. 
  • இந்தியாவில் மின்சாரத்தில் இயங்கும் ஊர்திகளின் பங்கு மொத்த ஊர்திகளில் 0.06% மட்டுமே. இது சீனாவில் 2% ஆகவும் நார்வேயில் 39% ஆகவும் உள்ளது.
  • மின்சார ஊர்திகளுக்கான சந்தையின் பங்கை அதிகரிக்க மிக வேகமாக சார்ஜ் செய்யும் வசதிகள் தேவைப்படுகின்றன.

நலத்திட்டங்களுக்கு தொழில்நுட்பத்தை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வது – உதாரணம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்

  • அதை ஒழுங்குபடுத்துவதில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதன் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் செயல் திறன் அதிகரித்துள்ளது என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • இதற்கான தொழில்நுட்ப வசதிகளைக் கையாண்டதன் விளைவாக ஊதியத்தை வழங்குவதில் நிலவி வந்த காலதாமதம் கணிசமாக குறைந்துள்ளது.
  • குறிப்பாக பெரிதும் நலிவடைந்த மாவட்டங்களில் இத்திட்டத்தின் கீழ் வேலைக்கான தேவையும், அதில் பங்கெடுக்க முன்வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
  • பொருளாதார ரீதியான நலிவு காலத்தில் இத்திட்டத்தின் கீழ் பெண்கள், தாழ்த்தப்பட்ட பிரிவினர், பழங்குடிகள் ஆகிய நலிந்த பிரிவினருக்கான வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக இந்தியாவில் குறைந்தபட்ச ஊதிய அமைப்பு மாற்றி அமைக்கப்படுகிறது.

  • தொழிலாளர்களைப் பாதுகாக்கவும், வறுமையிலிருந்து விடுவிக்கவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதிய அமைப்பு திறமையானதொரு கருவியாக விளங்கும் என ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
  • இந்தியாவில் இன்று நடைமுறையில் இருக்கும் குறைந்தபட்ச ஊதிய முறையின் கீழ் பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு வகையான வேலைகளுக்கு என 1,915 குறைந்தபட்ச ஊதியங்கள் நிலவுகின்றன.
  • ஊதியத்திற்காக வேலை செய்யும் தொழிலாளர்களில் மூன்றில் ஒருவர் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் பாதுகாப்பு கிடைக்காதவராக உள்ளார்.
  • ஊதியங்கள் குறித்த விதிமுறைகளுக்கான மசோதாவின் கீழ் முன்வைக்கப்பட்டுள்ளபடி குறைந்தபட்ச ஊதியத்தை முறைப்படுத்துவதை ஆய்வறிக்கை ஆதரிக்கிறது.
  • அனைத்து வகையான வேலைவாய்ப்புகளுக்கும், தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட வேண்டும் என ஆய்வறிக்கை பரிந்துரைக்கிறது.
  • ஐந்து பிரதேசங்களில் ஒன்றுக்கொன்று மாறுபட்டு இருக்கும் வகையில் ‘தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதிய’த்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
  • மாநிலங்களால் அறிவிக்கப்படும் குறைந்தபட்ச ஊதியம், இந்த தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியத்தை விட குறைவாக இருக்கலாகாது.
  • திறன் அடிப்படையிலோ அல்லது பிரதேச நிலைமைகளை ஒட்டியோ அல்லது இந்த இரண்டு அம்சங்களின் அடிப்படையிலோ குறைந்தபட்ச ஊதியம் அறிவிக்கப்பட வேண்டும்.
  • தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எளிமையான, அமலாக்கத்தக்க குறைந்தபட்ச ஊதிய முறையை உருவாக்க வேண்டுமென ஆய்வறிக்கை பரிந்துரைக்கிறது.
  • குறைந்தபட்ச ஊதியம் குறித்த அறிவிக்கைகளை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய அளவிலான முகப்புப் பலகையில் வெளியிடவேண்டும் எனவும் ஆய்வறிக்கை பரிந்துரைத்துள்ளது.
  • சட்டபூர்வமான குறைந்தபட்ச ஊதியத்தை வழங்காத நிலையில் அது குறித்த புகார்களை பதிவு செய்ய கட்டணமற்ற தொலைபேசி எண் வசதி அமைக்கப்பட வேண்டும்.
  • மேலும் திறமையான, நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு சிறப்பாகச் செயல்படும் குறைந்தபட்ச ஊதிய முறை அனைவரையும் உள்ளடக்கும் ஓர் அமைப்பாக விளங்கும்.

2018-19-ல் பொருளாதார நிலை பற்றிய ஒரு பருந்துப் பார்வை

  • 2018-19-ம் ஆண்டிலும் கூட வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா தொடர்ந்து நீடித்து வருகிறது.
  • 2017-18-ல் 7.2 சதவீதமாக இருந்த ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சற்றே குறைந்து 2018-19-ல் 6.8 சதவீதமாக நீடிக்கிறது.
  • 2018-19-ல் பணவீக்கம் 3.4 சதவீதம் என்ற அளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
  • 2018 மார்ச் மாத இறுதியில் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த கடன்களில்  செயல்படாத சொத்துக்களின் பங்கு 11.5 சதவீதமாக இருந்தது. இது 2018 டிசம்பர் இறுதியில் 10.1 சதவீதமாக குறைந்தது.
  • 2017-18-ல் இருந்தே முதலீடு வளர்ச்சியும் அதிகரித்து வருகிறது.
  • 2016-17-ல் நிலைத்த முதலீட்டு வளர்ச்சி 8.3 சதவீதமாக இருந்தது. அடுத்த ஆண்டில் இது 9.3 சதவீதமாக உயர்ந்து 2018-19-ல் 10.0 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • தற்போதைய நடப்புக் கணக்கு பற்றாக்குறை என்பது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.1 சதவீதம் என கையாளக் கூடிய வகையில் உள்ளது.
  • 2017-18-ல் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதமாக இருந்தது. இது 2018-19-ல் 3.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.
  • நுகர்வு அதிகரிப்பு மற்றும் தனியார் முதலீடு மேலும் அதிகரிப்பு ஆகியவற்றின் பின்னணியில் பார்க்கும்போது 2019-20-ல் வளர்ச்சி வேகம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

நிதி சார்ந்த வளர்ச்சிப் போக்குகள்

  • 2018-19 நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4 சதவீதம் எனவும் கடன் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 44.5 சதவீதம் எனவும் (இடைக்கால மதிப்பீடு) எனவும் முடிந்துள்ளது.
  • 2017-18-ன் இதே காலப்பகுதியை ஒப்பிடும்போது மத்திய அரசின் செலவினம் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் சதவீதத்தில் 0.3 சதவீதப் புள்ளிகள் குறைந்துள்ளன.
  • வருவாய் இன செலவினங்களில் இது 0.4 சதவீத குறைவாகவும் முதலீட்டு செலவினங்களில்  0.1 சதவீத அதிகரிப்பாகவும் இது அமைகிறது.
  • 2017-18 திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி மாநிலங்களின் சொந்த வரி வருவாய் மற்றும் வரியல்லாத வருவாய் ஆகியவை நல்ல வளர்ச்சி பெற்றுள்ளன. 2018-19 பட்ஜெட் மதிப்பீட்டிலும் இது தொடர்ந்து நீடிக்கும் எனவே எதிர்பார்க்கப்படுகிறது.
  • பொதுவாகவே (மத்திய-மாநில) அரசுகள் நிதி சார்ந்த நிலைத்தன்மையையும் நிதி சார்ந்த ஒழுங்கையும் கடைப்பிடித்து வருகின்றன.
  • திருத்தப்பட்ட நிதி செயல்பாட்டின்படி 2020-21 நிதியாண்டிற்குள் நிதிசார் பற்றாக்குறையை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதம் எனவும் 2024-25 நிதியாண்டிற்குள் மத்திய அரசின் கடன் அளவை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதம் எனவும் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பண நிர்வாகம் மற்றும் நிதிசார் தலையீடு

  • செயல்படா சொத்துக்களின் விகிதம் குறைந்து கடன் வளர்ச்சி அதிகரித்துள்ள நிலையில் வங்கி முறை மேம்பட்டுள்ளது.
  • நொடித்துப் போதல்- திவாலுக்கான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதன் விளைவாக கடன் தொகை மீட்பு மற்றும் தீர்வு ஆகியவற்றின் மூலம் முடக்கப்பட்ட சொத்துக்கள் கணிசமான அளவிற்கு மீட்கப்பட்டதோடு வர்த்தக கலாச்சாரமும் மேம்பட்டுள்ளது.
    • 2019 மார்ச் 31 வரை இத்திட்டத்தின் மூலம் ரூ. 1,73,359 கோடி மதிப்புள்ள 94 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
    • 2019 பிப்ரவரி 28 தேதிய நிலவரப்படி ரூ. 2.84 லட்சம் மதிப்புள்ள 6,079 வழக்குகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.
    • ரிசர்வ் வங்கியின் அறிக்கைகளின்படி இதற்கு முன்பு செயல்படா சொத்துக்களாக அறிவிக்கப்பட்ட கடன் கணக்குகளில் இருந்து ரூ. 50,000 கோடி மீட்கப்பட்டுள்ளது.
    • தரமில்லாத சொத்துக்கள் என்பதில் இருந்து தரமான சொத்துக்கள் என உயர்த்தியதன் மூலம் கூடுதலாக ரூ. 50,000 கோடி பெறப்பட்டுள்ளது.
  • வட்டி விகித அளவுகோள் கொள்கையின் மூலம் 50 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தப்பட்டு பின்னர் கடந்த ஆண்டு 75 அடிப்படைப் புள்ளிகளாகக் குறைக்கப்பட்டது.
  • 2018 செப்டம்பரில் இருந்தே பணப்புழக்க நிலைமைகள் தொடர்ந்து முறையாக இறுகி இருந்ததன் விளைவாக அரசுப் பத்திரங்களின் மூலம் பெறப்படும் வருவாயில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • மூலதனச் சந்தைகளில் இருந்து பெறப்படும் பங்கு நிதியில் சரிவு ஏற்பட்டதன் விளைவாகவும் வங்கியல்லாத நிதி நிறுவனத் துறையில் நிலவிய அழுத்தத்தின் காரணமாகவும் நிதி வரத்து தொடர்ந்து கட்டுக்குள் இருந்தது.

 

    • 2018-19-ம் ஆண்டில் பொதுப்பங்கு விற்பனை மூலம் திரட்டப்பட்ட மூலதனம் 81 சதவீதம் குறைந்தது.
    • 2018 மார்ச் மாதத்தில்  30 சதவீதமாக இருந்த வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் கடன் வளர்ச்சி விகிதம் 2019 மார்ச் மாதத்தில்  9 சதவீதமாக குறைந்தது.

விலை மற்றும் பணவீக்கம்

  • பொருட்களுக்கான நுகர்வோர் குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக குறைந்து கொண்டே வருவதோடு கடந்த இரண்டு ஆண்டுகளில் 4.0 சதவீதத்திற்கும் கீழே இருந்து வருகிறது.
  • நுகர்வோர் உணவு விலைக்கான குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கமும் கூட ஐந்தாவது நிதியாண்டாக குறைவாகவே நீடிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இது 2.0 சதவீதத்திற்கும் கீழாகவே இருந்து வருகிறது.
  • பொருட்கள் குறித்த நுகர்வோர் குறியீட்டெண் அடிப்படையிலான அடிப்படை பணவீக்கம் ( உணவு- எரிபொருள் தவிர்த்த பொருட்கள்) 2019 மார்ச் முதல் சரியத் தொடங்கியுள்ளது. 2017-18 நிதியாண்டினை ஒப்பிடுகையில் 2018-19 நிதியாண்டில் ஓரளவு அதிகரித்திருந்தது.
  • 2018-19 நிதியாண்டில் பொருட்கள் குறித்த நுகர்வோர் குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கத்திற்கு வீடு கட்டுமானம், எரிபொருள் மற்றும் இதர மென் துறைகளே காரணமாகும். இந்த பணவீக்கத்தை வளர்த்தெடுப்பதில் சேவைகள் துறையின் முக்கியத்துவமும் அதிகரித்துள்ளது.
  • 2017-18 நிதியாண்டை ஒப்பிடுகையில் 2018-19 நிதியாண்டில்  கிராமப்புற நுகர்வோர் குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் குறைந்துள்ளது. 2018-19 நிதியாண்டில் நகர்ப்புற நுகர்வோர் குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் அதிகரித்துள்ளது. 2018-19 நிதியாண்டில் பல மாநிலங்களும் நுகர்வோர் குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் குறைந்து வருவதைக் காண முடிந்தது.

நீடித்த வளர்ச்சியும் பருவநிலை மாற்றமும்

  • மாநிலங்களைப் பொறுத்தவரையில் இந்தியாவின் நீடித்த வளர்ச்சிக்கான மதிப்பெண் 42க்கும் 69க்கும் இடைப்பட்டதாகவும் துணைநிலை மாநிலங்களைப் பொறுத்தவரையில் 57க்கும் 68க்கும் இடைப்பட்டதாகவும் இருந்தது.
  • மாநிலங்களில் 69 புள்ளிகளைப் பெற்று கேரளாவும் இமாச்சல பிரதேசமும் முன்னணியில் உள்ளன.
  • துணைநிலை மாநிலங்களில் சண்டிகர் மற்றும் புதுச்சேரி ஆகியவை முறையே 68 மற்றும் 65 புள்ளிகளை பெற்று முன்னணியில் உள்ளன.
  • 2015-20 காலப்பகுதியில் ரூ. 20,000 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் நீடித்த வளர்ச்சி எண் ஆறாம் நிலையை எட்டிப் பிடிக்கும் நோக்குடன் முக்கியமான முன்னுரிமைக் கொள்கையாக  நமாமி கங்கா இயக்கம் தொடங்கப்பட்டது.
  • நீடித்த வளர்ச்சியைப் பெறுவதற்காக வளர்ச்சிப் பாதையில் வள ஆதாரங்களின் செயல்திறன் குறித்த அணுகுமுறையை உருவாக்க வள ஆதாரங்களின் செயல்திறன் குறித்த தேசிய கொள்கை ஒன்று வடிவமைக்கப்பட்டது.
  • குறிப்பிட்ட கால அளவில் நிறைவேற்றப்படும் வகையில் இந்தியா முழுமைக்குமான தூய காற்றுக்கான தேசிய திட்டம் ஒன்று கீழ்க்கண்ட நோக்கங்களுடன் 2019-ல் தொடங்கப்பட்டது:
  • காற்று மாசை தடுப்பது, கட்டுப்படுத்துவது, தணிப்பது
  • நாடு முழுவதிலும் கண்காணிப்பதற்கான வலைப்பின்னலின் மூலம் காற்றின் தரத்தை மேம்படுத்துவது.
  • 2018-ம் ஆண்டில் போலந்து நாட்டின் காட்டோவைஸ் நகரில் நடைபெற்ற சிஓபி 24 என்ற பருவ நிலை மாற்றம் குறித்த மாநாட்டின் சாதனைகள்:
  • வளர்ச்சியடைந்த, வளர்ச்சியடைந்து வரும் நாடுகளுக்கான பல்வேறு வகையான தொடக்க புள்ளிகள் குறித்த அங்கீகாரம்.
  • வளரும் நாடுகள் குறித்த நெகிழ்வான அணுகுமுறை
  • பங்கு உள்ளிட்டு பொதுவான, எனினும் வேறுபடுத்தப்பட்ட பொறுப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளின் திறமைகள் உள்ளிட்ட குறிக்கோள்களை ஏற்றுக் கொள்வது.
  • பருவநிலைக்கான நிதியின் பங்கையும் பாரீஸ் ஒப்பந்தம் வலியுறுத்தியது. இல்லையெனில் திட்டமிடப்பட்டிருந்த தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பை நிறைவேற்ற இயலாது.
  • பருவநிலைக்கான நிதி புழக்கம் குறித்து வளர்ச்சியடைந்த நாடுகள் பல்வேறு விதமான கருத்துக்களை வெளியிட்டதை சர்வதேச மனித குலம் கண்ணுற்ற போதிலும் உண்மையில் இதற்கென வழங்கப்பட்ட பணம் அவை குறிப்பிட்டதை விட மிகவும் குறைவாகவே இருந்தது.
  • தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பை இந்தியா செலுத்துவதை அமலாக்க வேண்டுமெனில் அதற்குத் தேவைப்படும் முதலீட்டின் அளவு மற்றும் வீச்சுக்கு உகந்த வகையில் இதற்கென உள்நாட்டு பொது பட்ஜெட்டோடு கூடவே சர்வதேச அளவில் பொது நிதியையும், தனியார் துறையின் ஆதாரங்களையும் திரட்ட வேண்டியுள்ளது.

வெளிநாட்டுத் துறை

  • உலக வர்த்தக அமைப்பின் கருத்துப்படி, உலகளாவிய வர்த்தக வளர்ச்சி என்பது 2017-ல் 4.6 சதவீதமாக இருந்தது 2018-ல் 3 சதவீதமாக குறைந்துள்ளது.
  • புதிய, பதிலுக்கு பதிலடி கொடுக்கும் வரிவிதிப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தல்.
  • தீவிரமாகியுள்ள அமெரிக்க – சீன உறவுகள்
  • பலவீனமான உலகப் பொருளாதார வளர்ச்சி
  • நிதிச் சந்தைகளில் ஏற்பட்டு வரும் ஏற்ற இறக்கம்.
  • ரூபாயின் மதிப்பு குறைந்ததன் விளைவாக ஏற்றுமதியின் வளர்ச்சி விகிதம் இந்திய ரூபாயின் மதிப்பில் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இறக்குமதி 2018-19-ல் குறைந்துள்ளது.
  • தீவிரமான நேரடி அந்நிய முதலீடு நாட்டிற்கு வந்தபோதிலும் கூட 2018-19 நிதியாண்டின் ஏப்ரல்-டிசம்பர் வரையிலான காலத்தில் நிகர மூலதன வரவு என்பது சுமாராகவே இருந்தது. இது போர்ட்ஃபோலியோ முதலீட்டின் கீழ் நாட்டிற்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்ட பணத்தை விட அதிகமாகவே இருந்தது.
  • 2018 டிசம்பர் இறுதியில் இந்தியாவின் அந்நிய கடன் அளவு 521.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது 2018 மார்ச் மாத இறுதியில் இருந்ததை விட1.6 சதவீதம் குறைவாகும்.
  • வெளிநாட்டுக் கடன்கள் குறித்த முக்கிய அறிகுறிகள் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் நீடித்திருக்க முடியாத நிலையில் இல்லை என்பதையே குறிப்பிடுகின்றன.
  • ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி- மொத்த கடன்கள் ஆகியவற்றின் விகிதம், இதில் கடன் மற்றும் கடன் வகையல்லாத அம்சங்களும் அடங்கும், 2015-ம் ஆண்டில் 43 சதவீதமாக இருந்தது. இது 2018-ம் ஆண்டின் இறுதியில் சுமார் 38 சதவீதமாக குறைந்துள்ளது.
  • ஒட்டுமொத்த கடன் பொறுப்பில் நேரடி அந்நிய முதலீட்டின் பங்கும் போர்ட்ஃபோலியோ வகைப்பட்ட நிகர முதலீட்டின் அளவும் அதிகரித்துள்ளது. நடப்பு கணக்கு பற்றாக்குறையை சமாளிக்க நிதி திரட்டுவதில் மேலும் உறுதியான ஆதாரங்களை நோக்கி நகர்ந்து வருகிறோம் என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.
  • 2017-18-ம் ஆண்டில் ஒரு அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் மதிப்பு 65-68 என்ற விகிதத்தில்  பரிமாறிக் கொள்ளப்பட்டது. எனினும் 2018-19 நிதியாண்டில் இது மதிப்புக் குறைந்து 70-74 ரூபாய் என்ற அளவிற்கு பரிமாறிக் கொள்ளப்பட்டது.
  • இறக்குமதி செய்வதற்கான வாங்கும் சக்தியை அளவிடும் முறையான வர்த்தகத்தின் வருமான குறித்த விதிமுறைகள் மேலும் உயர்ந்து கொண்டே போகின்றன. ஏனெனில் கச்சா எண்ணெய் விலையின் வளர்ச்சியானது இந்தியாவின் ஏற்றுமதி  விலைகளின் வளர்ச்சியை மீறியதாக இருக்கவில்லை என்பதே இதற்குக் காரணமாகும்.
  • அதற்கு முந்தைய ஆண்டை விட பரிமாற்ற விலை விகிதம் 2018-19 ஆண்டில் ஏற்ற இறக்கத்துடன்தான் இருந்தது. குறிப்பாக இதற்கு கச்சா எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கமே காரணமாக இருந்ததே தவிர போர்ட்ஃபோலியோ முதலீட்டில் இருந்து வெளியே சென்ற நிகர லாபத்தொகை அல்ல.
  • 2018-19-ம் ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி-இறக்குமதி அளவு (இடைக்கால மதிப்பீடு):
  • ஏற்றுமதி (மறு ஏற்றுமதி உள்ளிட்டு) : ரூ. 23,07,663 கோடி
  • இறக்குமதி : ரூ. 35,94,373 கோடி
  • பெட்ரோலிய பொருட்கள், விலைமதிப்புள்ள கற்கள், புதிய மருந்துகளுக்கான வழிமுறைகள், தங்கம் மற்றும் இதர விலை உயர்ந்த உலோகங்கள் ஆகியவையே பெருமளவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய பொருட்களாக உள்ளன.
  • கச்சா எண்ணெய், முத்து, விலைமதிப்புள்ள, மதிப்புமிக்க கற்கள், தங்கம் ஆகியவை தொடர்ந்து இறக்குமதி செய்யப்படும் முக்கிய பொருட்களாக உள்ளன.
  • இந்தியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளிகளாக அமெரிக்கா, சீனா, ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா ஆகியவை தொடர்ந்து இருந்து வருகின்றன.
  • பல்வேறு நாடுகளுடனும், நாட்டுக் குழுமங்களுடனும் 28 இருதரப்பு/பலதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களை இந்தியா செய்து கொண்டிருக்கிறது. 2018-19-ல்  இந்த நாடுகளுக்கு இந்தியா செய்த ஏற்றுமதியின் அளவும் 121.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இது இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 36.9 சதவீதம் ஆகும்.
  • இந்த நாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்த பொருட்களின் மதிப்பு 266.9 பில்லியன் டாலர்கள் ஆகும். இது மொத்த இறக்குமதியில் 52.0 சதவீதம் ஆகும்.

 

விவசாயமும் உணவு மேலாண்மையும்

  • இந்தியாவில் விவசாயத் துறை அதன் வளர்ச்சியைப் பொறுத்தவரையில் சுழற்சி முறையில்தான் இருந்து வருகிறது.
  • விவசாயத்தில் ஒட்டுமொத்த மதிப்புக் கூட்டல் 2014-15-ல் -0.2 சதவீதமாக இருந்தது எனில் 2016-17-ல் 6.3 சதவீதமாக அதிகரித்து பின்பு 2018-19-ல் 2.9 சதவீதமாகக் குறைந்தது.
  • ஒட்டுமொத்த மதிப்புக் கூட்டலில் விவசாயத்தில் ஒட்டுமொத்த மூலதன உருவாக்கத்தின் பங்கு விகிதம் என்பது 2017-18-ல் 15.2 சதவீதமாக இருந்தது. இது 2016-17-ல் 15.6 சதவீதமாக இருந்தது.
  • ஒட்டுமொத்த மதிப்புக் கூட்டலில் விவசாயத்தில் பொதுத்துறை கடன்களின் பங்கு 2016-17-ம் ஆண்டில் 2.7 சதவீதமாக இருந்தது. இது 2013-14-ம் ஆண்டில் 2.1 சதவீதமாக இருந்தது.
  • 2005-06 –ம் ஆண்டில் 11.7 சதவீதமாக இருந்த விவசாயத்தில் பெண்களின் பங்கேற்பு என்பது 2015-16-ம் ஆண்டில் 13.9 சதவீதமாக அதிகரித்தது. சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் மத்தியில் அவர்களது எண்ணிக்கை மிக அதிகமாகும். (அதாவது 28 சதவீதம்)
  • சொந்தமாக நிலத்தை வைத்திருப்போரின் எண்ணிக்கை,  நிலத்தின் அளவு ஆகியவற்றிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நகர்வு சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளை நோக்கியதாக உள்ளது.
  • நிலத்திலிருந்து மேலேற்றப்படும் நீரில் 89% பாசனத்திற்காகவே பயன்படுத்தப்படுகிறது. எனவே நிலத்தின் உற்பத்தித் திறன் என்பதில் இருந்து பாசன நீர் உற்பத்தித் திறன் என்பதை நோக்கி நமது கவனம் திரும்ப வேண்டும். நீரை திறமையுடன் பயன்படுத்த குறு பாசன முறைக்கு அழுத்தம் தரப்பட வேண்டும்.
  • உரத்தை மட்டுமே சார்ந்தவர்களின் விகிதமும் கூட காலப்போக்கில் குறைந்து வருகிறது. ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் உள்ளிட்டு இயற்கை உரம் மற்றும் இயற்கை முறையிலான விவசாய தொழில்நுட்பங்கள் ஆகியவை நீரைப் பயன்படுத்தல் மற்றும் நிலத்தடி உயிர்மத் தன்மை ஆகியவற்றை மேம்படுத்த உதவும்.
  • குறிப்பிட்ட இடங்களில் இருந்து வாடகைக்கு எடுப்பதற்கான மையங்களின் மூலம் பொருத்தமான தொழில்நுட்பங்களை மேற்கொள்வது, தகவல் தொழில்நுட்பத்தை அமல்படுத்துவது ஆகியவை சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளிடையே ஆதார வளங்களை திறமையாகப் பயன்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்.
  • விவசாயம் மற்றும் தொடர்பான துறைகளில் உள்ளார்ந்த, நீடித்த வளர்ச்சியைப் பெற வேண்டுமெனில் வாழ்க்கை முறைகளில் மாற்றம் மிக முக்கியமானதாகும். இதற்கான கொள்கைகள் கீழ்க்கண்டவற்றில் கவனம் செலுத்த வேண்டும்:
  • மிக அதிகமான பால் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா என்ற வகையில் பால் பண்ணை
  • கால்நடை வளர்ப்பு; குறிப்பாக சிறிய மேய்ச்சல் விலங்குகள்
  • மீன் வளர்ப்புத் துறை; இதில் இந்தியா இரண்டாவது பெரிய உற்பத்தி நாடாகும்.

தொழில் மற்றும் கட்டமைப்பு

  • எட்டு முக்கிய தொழில்களின் ஒட்டுமொத்த அட்டவணையானது 2018-19-ம் ஆண்டில் 4.3 சதவீத வளர்ச்சியை எடுத்துக் காட்டுகிறது.
  • 2019-ம் ஆண்டிற்கான உலக வங்கியின் வர்த்தகம் செய்வது குறித்த அறிக்கையின்படி 2018-ம் ஆண்டில் மதிப்பீடு செய்யப்பட்ட 190 நாடுகளில் இந்தியா 77வது இடத்தை பிடித்துள்ளது. இது தரவரிசையில் 23 இடங்கள் முன்னேற்றமாகும்.
  • 2014-15-ம் ஆண்டில் நாளொன்றுக்கு 12 கிலோமீட்டர் என்பதாக இருந்த சாலை உருவாக்க வேகம் 2018-19-ம் ஆண்டில் நாளொன்றுக்கும் 30 கிலோமீட்டர் என்பதாக அதிகரித்துள்ளது.
  • 2017-18-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2018-19-ம் ஆண்டில் ரயில் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து முறையே 5.33 மற்றும் 0.64 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • 2018-19-ம் ஆண்டில் இந்தியாவில் உள்ள மொத்த தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை118.34 கோடியைத் தொட்டுள்ளது.
  • 2018-ம் ஆண்டில் 3,44,002 மெகா வாட்களாக இருந்த மின் உற்பத்தி திறன் 2019-ம் ஆண்டில் 3,56,100 மெகாவாட்களாக அதிகரித்துள்ளது.
  • கட்டமைப்பு துறையில் நிலவும் இடைவெளிகளை நிரப்ப பொது-தனியார் கூட்டணி மிகவும் அவசியமானதாகும்.
  • சவுபாக்யா திட்டம், பிரதமர் வீட்டு வசதி திட்டம் போன்ரா குறிப்பிட்ட பிரிவுக்கான திட்டங்களின் மூலம் நீடித்த, எதையும் தாங்கும்படியான கட்டமைப்பை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
  • கட்டமைப்புத் துறையில் குறிப்பிட்ட கால அவகாசத்தில் சச்சரவுகளைத் தீர்த்து வைக்கும் வகையில் நிறுவன ரீதியான ஏற்பாடு தேவைப்படுகிறது.

சேவைகள் துறை

  • இந்தியாவின் ஒட்டுமொத்த மதிப்புக் கூட்டலில் (கட்டுமானப் பிரிவு தவிர்த்த) சேவைகள் துறையின் பங்கு 54.3 சதவீதமாக உள்ளது. இது 2018-19-ம் ஆண்டில் ஒட்டுமொத்த மதிப்புக் கூட்டலில் பாதிக்கும் மேற்பட்ட பங்களிப்பை நல்கியுள்ளது.
  • 2017-18-ம் ஆண்டில் 167 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு இருந்த தகவல் தொழில்நுட்பம் – வர்த்தக செயல்பாட்டு நிர்வாக தொழில்களின் வளர்ச்ச்சி 8.4 சதவீதம் வளர்ந்து 2018-19-ம் ஆண்டில் 181 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவை எட்டியுள்ளது.
  • 2017-18-ம் ஆண்டில் 8.1 சதவீதமாக இருந்த சேவைகள் துறையின் வளர்ச்சி 2018-19-ம் ஆண்டில் சற்றே சரிந்து 7.5 சதவீதமாகியுள்ளது.
  • வேகமாக வளரும் துணைப் பிரிவுகள்: நிதிச் சேவைகள், ரியல் எஸ்டேட் மற்றும் நிபுணத்துவ சேவைகள்
  • சரிந்து வரும் துணைப்பிரிவுகள்: ஓட்டல்கள், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவைகள்.
  • 2017-ம் ஆண்டில் வேலைவாய்ப்பில் சேவைகள் துறையின் பங்கு 34 சதவீதம் ஆகும்.
  • சுற்றுலாத் துறை:
  • 2017-18-ம் ஆண்டில் 1கோடியே 4 லட்சம் வெளிநாட்டுப் பயணிகள் என்பதை ஒப்பிடுகையில் 2018-19-ம் ஆண்டில் 1 கோடியே 6 லட்சம் வெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவிற்கு வந்துள்ளனர்.
  • சுற்றுலாத் துறையில் இருந்து பெறப்பட்ட அந்நிய செலாவணி 2017-18-ம் ஆண்டில் 28.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எனில் 2018-19-ம் ஆண்டில் 27.7 பில்லியன் என்ற அளவிற்கு உள்ளது.

சமூக கட்டமைப்பு, வேலைவாய்ப்பு, மனித வளர்ச்சி

  • உள்ளார்ந்த வளர்ச்சிக்கு கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி, தொடர்பு வசதி ஆகிய சமூக கட்டமைப்பு வசதிகளில் பொது முதலீடு மிகவும் அவசியமாகும்.
  • (மத்திய-மாநில அரசுகள் உள்ளிட்டு) ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் அரசு செலவினத்தின் பங்கு:
  • சுகாதாரம் – 2014-15-ம் ஆண்டில் 1.2 சதவீதமாக இருந்த ஒதுக்கீடு 2018-19-ம் ஆண்டில் 1.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • கல்வி: இதே காலப்பகுதியில் 2.8 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • ஒட்டுமொத்த சேர்க்கை விகிதங்கள், பாலின சமத்துவம் குறித்த குறியீடுகள், தொடக்கப் பள்ளி அளவில் கற்றலின் வெளிப்பாடுகள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மேம்பாட்டை பிரதிபலிப்பதாகவே கல்வி குறித்த அளவு வாரியான, தரவாரியான அறிகுறிகளில் ஏற்பட்டுள்ள கணிசமான முன்னேற்றம் அமைந்துள்ளது.
  • திறன் வளர்ப்பை ஊக்கப்படுத்தும் வகையில்:
  • அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு பயிற்சி நிலையத்தில் இருந்தும் இளைஞர்கள் பயிற்சி பெறும் வகையில் நிதிவழங்கல் ஆவணமாக திறன் சீட்டுகளை அறிமுகம் செய்தல்.
  • பொது-தனியார் கூட்டு முறையில் பயிற்சி நிலையங்களை நிறுவ தொழில் துறையை ஈடுபடுத்துதல். கருவிகளை வழங்குவதல், பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளித்தல்.
  • அணுகுவதற்குக் கடுமையான பகுதிகளில் பயிற்சி அளிப்பதற்கென ரயில்வே மற்றும் துணை ராணுவப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களை ஈடுபடுத்திக் கொள்ள முடியும்.
  • தேவை – சப்ளை ஆகியவற்றுக்கு இடையே உள்ள இடைவெளியை மதிப்பீடு செய்ய உள்ளாட்சி அமைப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு பயிற்சியாளர்கள் குறித்த புள்ளிவிவரங்களின் தொகுப்பு, கிராமப்புற இளைஞர்களின் திறன்கள் குறித்த விவரங்கள் ஆகியவையும் முன்வைக்கப்பட்ட முன்முயற்சிகளில் ஒரு சிலவாகும்.
  • தொழிலாளர் ஈட்டுறுதி நிறுவனத்தின் விவரப்படி முறைப்படுத்தப்பட்ட துறையில் நிகர வேலைவாய்ப்பு உருவாக்கம் 2018 பிப்ரவரியில் 4.87 லட்சமாக இருந்தது. 2019 மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக 8.15 லட்சமாக இருந்தது.
  • 2014-ம் ஆண்டிலிருந்து பிரதமர் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ் சுமார் 1,90,000 கிலோமீட்டர் நீளத்திற்கு கிராமப்புறச் சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • 2019 மார்ச் 31க்குள் அடிப்படை வசதிகளுடன் 1 கோடி முறையான வீடுகளை கட்டி முடிப்பது என்ற இலக்கிற்கு பதிலாக 1.54 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
  • சுகாதாரம் மிக்க இந்தியாவிற்கான தேசிய சுகாதார இயக்கம், ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஆகியவற்றின் மூலம் எளிதாக அணுகத்தக்க, மலிவான, தரமான சுகாதார வசதி வழங்கப்பட்டு வருகிறது.
  • மலிவான, அதே நேரத்தில் இந்தச் சேவைகளைப் பெறுவதை எளிதாக்குவது என்ற பிரச்சனையை கையாளும் வகையில், விலை குறைந்த, நியாயமான ஆயுஷ் சுகாதார வசதியை நாடுமுழுவதிலும் வழங்குவதற்கென மாற்று மருத்துவ வசதியான தேசிய ஆயுஷ் இயக்கம் தொடங்கப்பட்டது.
  • பட்ஜெட் நிதி ஒதுக்கலுக்கும் மேலாக இதற்கான செலவை அதிகரிப்பதன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டமான மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாகவே இதற்கான பட்ஜெட் ஒதுக்கீடு அதிகரித்துக் கொண்டே சென்றது.

******

 



(Release ID: 1577340) Visitor Counter : 809