மத்திய அமைச்சரவை

வணிகர்களுக்கு ஓய்வூதியம்!

Posted On: 31 MAY 2019 8:40PM by PIB Chennai

வணிகர்களுக்கான ஓய்வூதியத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இதன்மூலம் 3 கோடி சில்லரை வணிகர்களும், சிறு கடைக்காரர்களும் பயடைவார்கள்.

அரசு பொறுப்பேற்ற முதல் நாளிலேயே மேலும் ஒரு வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார் பிரதமர் மோடி.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வணிக சமூகம் பயனடையும் வகையில் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  வணிக சமூகத்தினர் ஓய்வூதியம் பெறும் புதிய திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  அனைவருக்கும் சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாகும் இந்த திட்டம். 

இந்தத் திட்டத்தின்கீழ் அனைத்து கடைக்காரர்களும், சில்லரை வணிகர்களும், சுய தொழில் செய்வோரும் 60 வயது அடைந்த பின் குறைந்தபட்சம் மாதம் ஒன்றுக்கு ரூ.3,000 ஓய்வூதியம் உறுதி செய்யப்படும். 

18-லிருந்து 40 வயதிற்குட்பட்ட அனைத்து சிறு கடைக்காரர்களும், சுயதொழில் செய்வோரும் ரூ.1.5 கோடிக்கும் குறைவாக  ஜி.எஸ்.டி வரவு – செலவு உள்ள சில்லரை வணிகர்களும் இந்தத் திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.  இதன்மூலம் 3 கோடிக்கும் அதிகமானோர் பயனடைவார்கள். 

தங்கள் தொழிலை தாமாக முன்வந்து அறிவித்துக் கொள்ளும் திட்டம் என்பதால், ஆதார் மற்றும் வங்கிக் கணக்கு தவிர வேறெந்த ஆவணங்களும் இதற்குத் தேவையில்லை.   விருப்பமுள்ள நபர்கள் நாடுமுழுவதும் உள்ள 3,25,000 பொது சேவை மையங்கள் மூலம் இந்தத் திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். 

சந்தாதாரரின் கணக்கில் அவர் செலுத்தும் தொகைக்கு ஈடான தொகையை மத்திய அரசும் செலுத்தும்.  உதாரணமாக, 29 வயதுள்ள ஒருவர் மாதம் ரூ.100 செலுத்தினால், அதேஅளவுத் தொகையை ஒவ்வொரு மாதமும் மானியமாக சந்தாதாரரின்  ஓய்வூதியக் கணக்கில் மத்திய அரசும் செலுத்தும். 

வணிக சமூகத்தினரின் ஓய்வூதியத் திட்டத்திற்கு முயற்சி எடுத்ததன் மூலம் பிரதமரும், அவரது அமைச்சரவையினரும் இந்திய மக்களுக்கு அளித்த  மேலும் ஒரு வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளனர். 

******************


(Release ID: 1573124) Visitor Counter : 325