மத்திய அமைச்சரவை

2018 வரன்முறைப்படுத்தாத டெபாசிட் திட்டங்களைத் தடை செய்யும் மசோதாவில் அதிகாரபூர்வ திருத்தம் கொண்டுவரும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 06 FEB 2019 9:34PM by PIB Chennai

2018 வரன்முறைப்படுத்தாத டெபாசிட் திட்டங்களைத்  தடை செய்யும் மசோதாவில் அதிகாரப்பூர்வ திருத்தம்  கொண்டுவரும் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை  ஒப்புதல் அளித்தது. நிதி குறித்த நிலைக் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது. 2018 வரன்முறைப்படுத்தாத டெபாசிட் திட்டத்துக்குத் தடை விதிக்கும் மசோதா 2018 ஜூலை 18-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இது நிதி சார்ந்த நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டபின், அந்தக் குழு இந்த மசோதா குறித்த தனது 70-வது அறிக்கையை  2019 ஜனவரி  3ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.  நாட்டில் சட்டவிரோதமாக டெபாசிட்டுகள் பெறும் நடவடிக்கையை திறம்பட தடுக்கும் நோக்கத்திலான இந்த  மசோதாவை, உத்தேச திருத்தம்  வலுப்படுத்தும். மேலும், ஏழை மற்றும் ஏமாளி மக்கள்  தங்களது கடின உழைப்பில் சம்பாதித்த பணச் சேமிப்பை இழப்பதைத் தடுக்க  இது உதவும்

முக்கிய அம்சங்கள்:

  • எவ்வகையான முறைப்படுத்தாத டெபாசிட் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது, விளம்பரப்படுத்துவது அல்லது டெபாசிட் பெறுவது ஆகியவற்றை இந்த மசோதா முற்றிலுமாக தடை செய்கிறது. இத்தகைய நடவடிக்கைகளுக்குப் பிறகு, குறிப்பிடத்தக்க காலம் தாழ்ந்த பிறகு அமலுக்கு வரும் தற்போதுள்ள  கட்டுப்பாட்டுச் சட்டங்களைப் போலன்றி,  இந்த  மசோதா டெபாசிட் பெறும்  நடவடிக்கைக்கு முன்னதாக அமலுக்கு வருகிறது.
  • இந்த மசோதா 3 வகையான குற்றங்களை அடையாளம் காண்கிறது. அவையானவை

வரன்முறைப்படுத்தப்படாத டெபாசிட் திட்டங்கள், வரன்முறைக்குட்பட்ட  டெபாசிட் திட்டங்களில் பண மோசடி, வரன்முறைப்படுத்தப்படாத டெபாசிட் திட்டங்களை தவறாக மக்களுக்கு ஆசை காட்டுவது.

  • இந்த மசோதாவில் கடுமையான தண்டனையும் மிக அதிகமான அபராதமும், மோசடியில் ஈடுபடாமல் தடை செய்வதாக அமைந்துள்ளது.
  • எப்படியாவது டெபாசிட்டுகளை  சட்டவிரோதமாக திரட்டிய நிலையிலும் இந்த டெபாசிட்டுகளை திரும்ப  செலுத்துவதற்கு மசோதாவில் போதுமான பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • உரிய நபர்கள் அல்லது அமைப்புகளிடமிருந்து சொத்துக்களை ஜப்தி செய்து  பின்னர் டெபாசிட்டுகாரர்களுக்கு பணம் வழங்குவதற்காக அவற்றை விற்பனை செய்தல் ஆகியவற்றுக்கும் மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது.
  • சொத்துக்களை ஜப்தி செய்வதற்கும் டெபாசிட்காரர்களுக்கு பணம் வழங்குவதற்கும் தெளிவான கால வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன
  • விரிவான மத்திய சட்டம் என்ற வகையில் மாநிலங்களில்   அமலிலிருக்கும்  சிறந்த நடைமுறைகள் இந்த மசோதாவில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த சட்டத்தின் அமலாக்கப் பொறுப்பு மாநில அரசுகளிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பின்னணி:

2018 வரன்முறைப்படுத்தப்படாத டெபாசிட் திட்ட தடை மசோதா 2018 ஜூலை 18-ம்  தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல்  செய்யப்பட்டது.  2016-17  பட்ஜெட் உரையின் போது மத்திய நிதியமைச்சர், சட்டவிரோத டெபாசிட் பெறும் நடைமுறையை ஒழிக்க விரிவான மத்திய சட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவித்திருந்தார்.   பல்வேறு மாநிலங்கள், குறிப்பாக நாட்டின் கிழக்குப் பகுதி மாநிலங்களில் அனுமதி ஏதுமில்லாத  டெபாசிட் திட்ட மோசடி வழக்குகள் அதிகரித்து வந்தது ரிசர்வ் வங்கியின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதனை அடுத்து 2017-18 பட்ஜெட் உரையில் இத்தகைய சட்டவிரோத டெபாசிட் திட்டங்களை தடுப்பதற்கான வரைவு மசோதா பொது மக்கள் பார்வைக்கு  வெளியிடப்பட்டிருப்பதாகவும் விரைவில், இது இறுதி செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

---------------------

 



(Release ID: 1563167) Visitor Counter : 147