குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

சென்னை எஸ்ஆர்எம் அறிவியல், தொழில்நுட்ப நிறுவனத்தின் 22-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் உரையாற்றினார்

செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பங்கள் போன்றவை எதிர்காலத்தை வடிவமைக்கும்: குடியரசு துணைத்தலைவர்

வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் இளைஞர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு: குடியரசு துணைத்தலைவர்

प्रविष्टि तिथि: 16 AUG 2026 3:04PM by PIB Chennai

குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், சென்னைக்கு அருகிலுள்ள செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் அமைந்துள்ள எஸ்ஆர்எம் அறிவியல், தொழில்நுட்ப நிறுவனத்தின் 22-வது பட்டமளிப்பு விழாவில் இன்று (16.08.2026) கலந்துகொண்டார். அப்போது, ​​'தேசமே முதன்மையானது - தேசமே முக்கியமானது' என்ற கொள்கையின் அடிப்படையில், தங்கள் அறிவு, திறன்கள், புதுமைச் சிந்தனைகள் ஆகியவற்றைத் நாட்டைக் கட்டமைக்கப் பயன்படுத்துமாறு பட்டம் பெறும் மாணவர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

மாணவர்களிடையே உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், பட்டமளிப்பு விழா என்பது வெறும் பட்டங்களைப் பெறும் நிகழ்வு மட்டுமல்ல என்றார். இது பல ஆண்டுகால விடாமுயற்சி, ஒழுக்கம், கற்றல் ஆகியவற்றைக் கொண்டாடுவதோடு, பொறுப்புணர்வையும், சேவையுடன் கூடிய வாழ்நாள் பயணத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

 செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பங்கள், குறைக்கடத்தி ஆராய்ச்சி, ரோபோட்டிக்ஸ், உயிரித் தொழில்நுட்பம், நிலையான வளர்ச்சி ஆகியவற்றில் எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் செலுத்தி வரும் கவனத்தை அவர் சுட்டிக்காட்டினார். இத்துறைகள் எதிர்காலப் பொருளாதாரங்களையும் சமூகங்களையும் வடிவமைக்கும் என்றும் அவர் கூறினார்.

வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தக் கூடிய, தொழில்துறையை வலுப்படுத்தக் கூடிய, நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கக் கூடிய, நடைமுறைத் தீர்வுகளாக ஆராய்ச்சியை மாற்றுவதில் எஸ்ஆர்எம் அறிவியல், தொழில்நுட்ப நிறுவனம் செலுத்தும் முக்கியத்துவத்தை குடியரசு துணைத்தலைவர் பாராட்டினார். சமூகம் பயன்பெறும் போதுதான் ஆராய்ச்சிகள் அதன் உயர்ந்த நோக்கத்தை அடைகிறது என்று அவர் கூறினார்.

சரியான முடிவுகளைத் தரும்போதும், சமூகத்தில் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தும்போதும், மக்களுக்கான நடைமுறைப் பலன்களாக மாறும்போதும் ஆராய்ச்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கதாக அமைகிறது என்று குடியரசு துணைத்தலைவர் குறிப்பிட்டார்.

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய பயணத்தில், இப்போது பட்டம் பெறும் மாணவர்கள் ஒரு முக்கிய கட்டத்தில் அடியெடுத்து வைப்பதாக திரு சி பி ராதாகிருஷ்ணன் கூறினார். வளர்ச்சியடைந்த, புதுமையான, அனைவரையும் உள்ளடக்கிய, தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வைக்கும், தேசத்தைக் கட்டமைப்பதிலும் பங்களிக்குமாறு ஒவ்வொரு இந்திய இளைஞருக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.

கொவிட்-19 பெருந்தொற்றை இந்தியா சமாளித்த விதத்தை நினைவு கூர்ந்த குடியரசு துணைத்தலைவர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியா 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்கியதாகக் கூறினார். மனிதாபிமான அடிப்படையிலான இந்த உதவியை வணிகமயமாக்க இந்தியா முயற்சிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவின் தடுப்பூசி உதவிக்கு நன்றி தெரிவித்த கென்ய நாடாளுமன்றத் தலைவருடனான உரையாடலை நினைவு கூர்ந்த அவர், பல மேற்கத்திய நாடுகள் ஏழை நாடுகளுக்கு இது போன்ற ஆதரவை வழங்கவில்லை என்று குறிப்பிட்டார். இந்தியாவின் முயற்சிகள் மனிதகுலத்தைப் பாதுகாக்க உதவியதாகக் கூறிய அவர், அமைதி, வளர்ச்சி, மனிதகுலத்தின் நலனுக்காக இந்தியா உறுதியுடன் நிற்கிறது என்பதை மீண்டும் எடுத்துரைத்தார்.

நாடு முழுவதும் மருத்துவ வசதிகளும் மருத்துவக் கல்வியும் மக்களைச் சென்றடையும் வகையில், எய்ம்ஸ் நிறுவனங்கள் நாடு முழுவதும் இருக்க வேண்டும் என்று பிரதமர் தன்னிடம் கூறியதாகக் குடியரசு துணைத்தலைவர் தெரிவித்தார்.

2014-ம் ஆண்டுக்குப் பிறகு நாட்டில் உயர்கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள விரிவாக்கத்தை அவர் சுட்டிக்காட்டினார். இக்காலகட்டத்தில் 16 ஐஐஐடி-கள், 8 மத்தியப் பல்கலைக்கழகங்கள், 8 ஐஐஎம்-கள், 7 ஐஐடி-கள், 2 ஐஐஎஸ்இஆர்-கள், ஒரு என்ஐடி, 12 எய்ம்ஸ் நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இப்போது இந்தியாவில் 1,425-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், 54,000 கல்லூரிகள், 16,850 தனித்துவமான கல்வி நிறுவனங்கள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கை எண்ணிக்கை 2014-15-ல் 1.57 கோடியாக இருந்த நிலையில், 2023-24-ல் 2.24 கோடியாக, 42.2 சதவீதம் வரை அதிகரித்துள்ளதை திரு சி பி ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார். பட்டமளிப்பு விழாக்களில் பட்டங்களையும் பதக்கங்களையும் பெறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது வரவேற்கத்தக்க முன்னேற்றம் என்று அவர் கூறினார்.

இந்தியாவின் மிகப்பெரிய பலம் அதன் மக்கள் எனவும், குறிப்பாக அதன் இளைஞர்கள் என்றும் குடியரசு துணைத்தலைவர் கூறினார். பட்டம் பெறும் மாணவர்களிடம் தமது செய்தியைப் பகிர்ந்துகொண்ட அவர், "எதிர்காலத்திற்காக உங்களை தயார்படுத்திக்கொள்ளாதீர்கள்; எதிர்காலத்தை வடிவமைக்கும் வகையில் உங்களைத் தயார்படுத்திக்கொள்ளுங்கள்," என்று கூறினார்.

போதைப்பொருள் வர்த்தகம் குறித்த தகவலைப் பகிர்ந்துகொண்டதற்காகத் தமிழ்நாட்டில் மாணவர் ஒருவர் அண்மையில் கொல்லப்பட்ட சம்பவம் மிகுந்த வேதனையளிப்பதாகக் குடியரசு துணைத்தலைவர் கூறினார். தனது சொந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை இழந்தது போன்ற உணர்வை அது தமக்கு ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.

அனைத்து வகையான போதைப் பழக்கங்களிலிருந்தும் விலகி இருக்குமாறு மாணவர்களை அவர் வலியுறுத்தினார். அத்துடன், கவனச்சிதறலுக்குப் பதிலாக ஒழுக்கத்தையும், சோதனைகளுக்குப் பதிலாக நோக்கத்தையும், எளிதான குறுக்குவழிகளுக்குப் பதிலாகச் சிறப்பான செயல்பாட்டையும் தேர்ந்தெடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

பட்டம் பெரும் மாணவர்களின் அறிவு, புதுமை, கடின உழைப்பு ஆகியவை இந்தியாவின் முன்னேற்றம், பாதுகாப்பு, செழிப்புக்கு பங்களிக்க வேண்டும் என்று அவர் கூறினார். அரசியலமைப்பு விழுமியங்களைக் கடைப்பிடிக்கவும், பன்முகத்தன்மையை மதிக்கவும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தவும், குறுகிய சுயநலத்தை விடப் பரந்த தேசிய நலனுக்கு முன்னுரிமை அளிக்கவும் அவர் மாணவர்களை வலியுறுத்தினார்.

அறிவு, கடமை, கருணை, சேவை ஆகிய காலத்தால் அழியாத இந்திய விழுமியங்களைத் தங்களோடு கொண்டு செல்லுமாறு பட்டம் பெற்றவர்களை அவர் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், குடியரசு துணைத்தலைவர், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் வாகன வணிகப் பிரிவுத் தலைவர் திரு ஆர் வேலுசாமிக்கு கௌரவப் பட்டத்திற்கான சான்றிதழை வழங்கினார். மேலும், பட்டதாரிகளுக்குப் பதக்கங்கள், தரவரிசைச் சான்றுகள், பட்டங்களை வழங்கிக் கௌரவித்தார். அத்துடன், பட்டம் பெறுவோரிடையேயும் மாணவர்களிடையேயும் போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியையும் அவர் ஏற்கச் செய்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு, கேரளம் மாநிலங்களின் ஆளுநர் திரு ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர், எஸ்ஆர்எம் அறிவியல், தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தர் டாக்டர் டி ஆர் பாரிவேந்தர், இணை வேந்தர் (நிர்வாகம்) டாக்டர் ரவி பச்சமுத்து, இணை வேந்தர் (கல்விசார்) டாக்டர் பி சத்யநாராயணன், துணைவேந்தர் டாக்டர் சி முத்தமிழ்செல்வன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2300158&reg=48&lang=1

****

SS/PLM/RJ


(रिलीज़ आईडी: 2300172) आगंतुक पटल : 25
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Malayalam