மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

தேசிய கடல்சார் ஆய்வுத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் ரூ.84,084 கோடி நிதி ஒதுக்கீடு

प्रविष्टि तिथि: 31 JUL 2026 4:17PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ள ‘சமுத்திர மந்தன்’ எனப்படும் தேசிய கடல்சார் ஆய்வுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முழுப் பங்களிப்புடன் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்திற்கு 2030-31 நிதியாண்டு வரையிலான காலத்திற்கு ரூ.84,084 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் பரந்த அளவிலான கடல்சார் ஆற்றல் திறனை முழுமையாக வெளிக்கொண்டு வரும் நோக்கில், 2025-ம் ஆண்டு சுதந்திரத் தினத்தன்று செங்கோட்டையிலிருந்து பிரதமர் ஆற்றிய உரையில் குறிப்பிட்ட நவீன காலச் சமுத்திர மந்தன் என்ற தொலைநோக்குப் பார்வையை இத்திட்டம் நனவாக்குகிறது. இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், உள்நாட்டில் எண்ணெய் வளங்கள் ஆய்வு, உற்பத்தியை விரைவுபடுத்துதல், தொழில்நுட்பத் தலைமைத்துவத்தை ஊக்குவித்தல், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி முன்னேறுதல் ஆகியவற்றில் இத்திட்டம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக அமையும்.

இத்திட்டம் கடல்சார் ஆற்றல் ஆய்வின் அனைத்து நிலைகளிலும் விரிவான அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. உயர்தரத்திலான நில அதிர்வு தரவுகளை ஆராய்தல், செயல்படுத்துதல், ஆய்வு செய்தல், ஆழ்கடல் & மிகவும் ஆழ்கடல் பகுதிகளில் விரைவாக ஆய்வுத் துளையிடுதல், எல்லைப்புறப் படுகைகளில் அறிவியல் ரீதியில் துளையிடுதல், பொதுவான கடல்சார் உற்பத்தி, வெளியேற்றக் கட்டமைப்புகளை உருவாக்குதல், ஒருங்கிணைந்த எண்ணெய், எரிவாயு உற்பத்தி சேவை மண்டலத்தை அமைத்தல் ஆகிய முக்கியமான பணிகள் இதில் அடங்கும். மேலும் டிஜிட்டல் திட்ட மேலாண்மை, திறன் மேம்பாடு, நவீனத் தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல், சர்வதேச அளவிலான தொடர்புகள் ஆகியவற்றிற்குச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சமுத்திர மந்தன் திட்டம் மூலம் 600 மில்லியன் மெட்ரிக் டன் எண்ணெய்க்குச் சமமான ஆற்றல் இருப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் கடல்சார் ஆய்வு நடவடிக்கைகளை அதிகரிப்பதுடன், உள்நாட்டு எண்ணெய், எரிவாயு உற்பத்தியைப் பெருக்கவும் வழிகோலும். பெருமளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, ‘இந்தியாவில் தயாரிப்போம்’, ‘தற்சார்பு இந்தியா’ ஆகிய திட்டங்களின் கீழ் உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்தும். சர்வதேச அளவில் போட்டித்தன்மையுடன் கூடிய கடல்சார் தொழில்நுட்பங்கள், சேவைகளுக்கான சூழல் அமைப்பை உருவாக்கும். ஆய்வு, உற்பத்தி சார்ந்த வணிகக் கட்டமைப்பில் பெரும் முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் தொழில்வளர்ச்சி, புத்தாக்கம், நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

நாட்டின் கடல்சார் ஆற்றல் வளங்களை வெளிக்கொணர்ந்து நீண்டகால எரிசக்திப் பாதுகாப்பை உறுதிசெய்யும் தேசிய அளவிலான மாற்றத்தை உருவாக்கும் திட்டமாக இது திகழும். கடந்த பத்தாண்டுகளில், கடல்சார் பகுதிகளை ஆய்வு செய்தல், சட்ட மற்றும் ஒப்பந்த அமைப்புகளை நவீனப்படுத்துதல், தேசிய தரவு களஞ்சியத்தை வலுப்படுத்துதல் போன்ற பல்வேறு சீர்திருத்தங்களை அரசு மேற்கொண்டுள்ளது. அந்தச் சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாக, பொதுக்கட்டமைப்பில் முதலீடு, அதிநவீனத் தொழில்நுட்பங்கள், உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் இத்திட்டம் கடல்சார் ஆய்வில் புதிய சகாப்தத்தை உருவாக்கும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292445&reg=3&lang=1

 

***

TV/PD/SH

 


(रिलीज़ आईडी: 2292603) आगंतुक पटल : 27
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Malayalam , Marathi , Assamese , Bengali , Odia , English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati , Kannada