PIB Backgrounder
மேம்படுத்தப்பட்ட உடான் திட்டம்: இந்தியாவின் பிராந்திய விமானப் போக்குவரத்து கட்டமைப்பை வலுப்படுத்துதல்
प्रविष्टि तिथि:
17 JUL 2026 1:55PM by PIB Chennai
இந்தியாவில் பிராந்திய அளவிலான விமானப் போக்குவரத்து இணைப்பை விரிவுபடுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட உடான் திட்டம், நாடு முழுவதும் சாமானிய மக்களின் விமானப் பயணத்தை எளிதாக்கியுள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் 95 விமான நிலையங்கள், ஹெலிபோர்ட்டுகள், நீர் விமானத் தளங்களை உள்ளடக்கிய 679 வழித்தடங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இதன் மூலம் 3.58 லட்சத்திற்கும் அதிகமான விமானங்கள் இயக்கப்பட்டு, 1.68 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயனடைந்துள்ளனர். இந்த மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, 2026-27 நிதியாண்டு முதல் 2035-36 நிதியாண்டு வரையிலான பத்து ஆண்டு காலப்பகுதியில் செயல்படுத்துவதற்காக 28,840 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேம்படுத்தப்பட்ட உடான் திட்டம் தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்புதிய திட்டத்தின் கீழ் உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த 100 புதிய விமான நிலையங்கள், 200 நவீன ஹெலிபேடுகள் அமைக்கப்பட உள்ளன.
நாட்டின் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கு விமானப் போக்குவரத்து இணைப்பு மிக முக்கியத் தூணாக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளதன் காரணமாக, செயல்பாட்டில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை 2014-ல் 74-ல் இருந்து, 2026 ஜூலை 15 நிலவரப்படி 165 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் உலகளவில் மூன்றாவது மிகப்பெரிய உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது. இச்சூழலில் 2026 ஜூலை 4 அன்று தொடங்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட உடான் திட்டம், விமான நிலைய உட்கட்டமைப்பு விரிவாக்கம், செயல்பாட்டு ஆதரவு, சிறிய சந்தைகளில் இயங்கும் விமான நிறுவனங்களுக்கான சாதகமான சூழல் உருவாக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. சமீபத்தில் ஜோத்பூர் விமான நிலையத்தில் திறந்து வைக்கப்பட்ட புதிய முனையம் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் ஆண்டுக்கு 20 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது இதற்குச் சான்றாகும்.
புதிய திட்டத்தின் முக்கியப் பகுதியாக, தற்பொழுது செயல்பாடற்று இருக்கும் விமானப் போக்குவரத்துத் தடங்களை மேம்படுத்தி 100 விமான நிலையங்களை உருவாக்குவதற்காக அடுத்த எட்டு ஆண்டுகளில் 12,159 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. புவியியல் ரீதியாகக் கடினமான மலைப் பகுதிகள், தீவுகளில் வசிக்கும் மக்களுக்கு அவசரகால சுகாதாரம், நிர்வாகத் தேவைகளை உறுதி செய்ய 200 நவீன ஹெலிபேடுகள் தலா 15 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. சிறிய சந்தைகளில் விமானச் சேவைகளைத் தொடர்ந்து இயக்க ஏதுவாக, விமான நிறுவனங்களுக்கு அடுத்த பத்து ஆண்டுகளில் 10,043 கோடி ரூபாய் வரையிலான நிதியுதவி வழங்கப்பட உள்ளது. மேலும், உள்நாட்டுத் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் தற்சார்பு இந்தியா கொள்கையின் கீழ் பவன் ஹன்ஸ் நிறுவனத்திற்கு இரண்டு எச்ஏஎல் துருவ் ஹெலிகாப்டர்களும், அலையன்ஸ் ஏர் நிறுவனத்திற்கு இரண்டு எச்ஏஎல் டோர்னியர் விமானங்களும் வழங்கப்பட உள்ளன.
விஜயவாடா-கடப்பா போன்ற நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரமாகக் குறைத்துள்ள இத்திட்டம், பயணிகளின் வசதிக்காக விமான நிலையங்களில் குறைந்த விலையில் உணவு வழங்கும் பயணியர் சிற்றுண்டி நிலையங்கள் (யாத்ரி கஃபே), இலவச இணைய வசதி போன்றவற்றை ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீதான சிறிய வரி விதிப்பு முறையின் மூலம் இத்திட்டத்திற்கான நிதி உள்நாட்டிலேயே திரட்டப்படுகிறது. இத்தகைய விரிவான உள்கட்டமைப்பு நடவடிக்கைகள் நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையை நவீன, உள்ளடக்கிய மற்றும் நிலையான எதிர்காலத்தை நோக்கி வழிநடத்திச் செல்வதில் வினையூக்கியாகச் செயல்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285671®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2285907)
आगंतुक पटल : 11